துலக்கம் – விமர்சனங்கள்

நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து பரபரவென படித்து முடிக்கும்போது மணி 1.20. சமீபத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்ததாய் நினைவில்லை. பக்கங்கள் குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக வாசிக்க வைக்க சுவாரச்சியம் , எழுத்துநடை இல்லாவிட்டால் நிச்சயமாக முடியாது.

முதல் அத்தியாத்தில் க்ரைம் நாவல் போல் தொடங்கும் பரபரப்பு , பின் பதைபதைப்பாகி , கல்யாண் கமலாவோடு கலங்கி நின்று , கடைசியில் அஸ்வின் திரும்ப கிடைத்தும் ஆசுவாசம் அடைகிறோம்.

கதை ஊடே காவல்துறை குயர் நோட்டுக்கு பதில் , மொபைல் ரீசார்ஜ்க்கு மாறியதிலிருந்து , எதற்கெடுத்தாலும் வட மாநிலத்தவர் மீது குற்றம் சாட்டும் மனப்போக்கை சாடுவது வரை நடப்பு சங்கதிகளையும் சாடிக் கொண்டே செல்கிறார்.

ஆனால் , கதைக்கரு ஆட்டிசம் நிலை கொண்ட பையனை பற்றியதாக இருப்பது புதிது. கதைக்கருவாக ஆட்டிசம் நிலையை எடுத்ததற்கு காரணம் பாலாவுக்கு உண்டு , முன்னர் ‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ கட்டுரை வழியே சொல்லிய பல சேதிகள் கதை வடிவில் கொடுத்தால் நிறைய பேருக்கு எளிதாக சென்று சேரும் என்பதுதான். அதை இந்த நாவல் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறது.

ஆட்டிசம் குழந்தைகளுக்கான உணவு கட்டுப்பாடுகள் பற்றி பேச இந்த கதையில் வாய்ப்பிருந்தும் பாலா எப்படி அதை தவறவிட்டார் எனத் தெரியவில்லை.

ஆட்டிசம் என்ற சொல்லே பாலா சொல்லதான் முதன்முறை பரிச்சயம் எனக்கு , இங்கு ஆட்டிசம் என்றால் ஏதோ மனநோய் என்ற பிம்பம்தான் நிலவிக்கொண்டிருக்கிறது. அந்த பிம்பத்தை உடைத்து , அந்த பிள்ளைகளின் வலியை , அவர்களின் பெற்றோர்களின் மனநிலையை எல்லோருக்கும் விளங்க வைக்கும் நாவல்.

ஆட்டிசம் பற்றிய புரிதல் பெற்றோருக்கும் , அந்த பிள்ளைகளின் உறவினர்களுக்கு மட்டும் இருந்தால் போதாது , இந்த சமூகம் முழுமைக்கும் தேவை. அப்போதுதான் அந்த பிள்ளைகள் அவர்களின் உலகில் சுதந்திரமாக எல்லோரைப் போல வாழும் சூழல் உருவாகும்.

நீங்களும் படியுங்கள் , உங்களை சுற்றி இருப்பவர்களும் படிக்க பரிந்துரை செய்யுங்கள்.

துலக்கம் என்றால் தெளிவு என்று பொருள் – உண்மைதான் , ஆட்டிசம் நிலை பற்றிய தெளிவை உருவாக்கும் நாவல் இது.

நன்றி :- ப்ரியன் (கூகிள் ப்ளஸ்+ பேஸ்புக்கில்)

_____________________________

நண்பன் பாலபாரதியின் “துலக்கம்” நாவலை படித்தேன். சுவாரஸ்யமான நாவல். ஆட்டிஸம் குழந்தை ஒன்றை பற்றிய கதை. பாலாவின் மொழி மேலும் நுட்பமடைந்துள்ளது. வாழ்த்துகள் நண்பா… ஒரு சினிமாவாகவோ குறும்படமாகவோ எடுக்கலாம் அவ்வளவு இயக்கமும் சலனமும் உள்ள கதை.

நன்றி :- இளங்கோ கிருஷ்ணன் (பேஸ்புக்கில்)

————————————
’மதி இறுக்கம்’ என்று கூறப்படும் ‘ஆட்டிசம்’ தொடர்பாக கட்டுரைகள் தமிழில் மிகக் குறைவு. திரைப்படங்கள் கூட பெரிதாக எதுவும் வந்தது போல தெரியவில்லை.

ஆனால் அதனை மையப்படுத்தி ஒரு த்ரில்லர் நாவலே வந்திருக்கிறது.

’துலக்கம்’

நண்பர் யெஸ். பாலபாரதி எழுதியிருக்கும் இரண்டாவது நாவல் துலக்கம். விகடன் வெளியீடு. விலை ரூ. 85.

ஆட்டிசம் என்பது குறித்து தெரியாதவர்களுக்கு கூட எளிதில் புரியும் படியாக அருமையான எழுத்து நடை.

ஒருவகையில் பார்க்கப் போனால் இனிமேல் தமிழில் நாவல்கள், பெருங்கதைகள் எல்லாம் இனிமேல் இது போன்ற ஃபார்மட்டுக்கு மாறினால் தான் பிழைக்க முடியும்.

சுவாரசியத்திற்கு சுவாரசியம்.. விறுவிறுப்பு.. தகவல்கள்.. என்று பல்சுவை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நாவலைப் படித்த திருப்தி.

நன்றி: மாயவரத்தான் கி ரமேஷ்குமார் (பேஸ்புக்கில்)

_______________________

நண்பர் யெஸ்பாலபாரதியின் `துலக்கம்’ நாவல் வாசித்தேன். தலைப்பே நாவலின் உள்ளடக்கத்தின் பல விசயத்தை சொல்கிறது.

போண்டாவை திருடி திண்ண கேஸுக்காக போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நையப்புடைக்கப்பட்ட இளைஞனிடம் விசாரணை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து நாவல் விறுவிறுப்பாக பயணிக்கிறது.

எந்த விசாரணைக்கும் அசராத அந்த இளைஞன் யார் என்பதில் பல்வேறு சஸ்பென்ஸ்கள்.

வட நாட்டு கள்ள நோட்டு கும்பலை சேர்ந்தவனாக இருப்பானோ என்றெல்லாம் சந்தேகத்துடன் பயணிக்கும் நாவலில் நம் காவல்துறையின் மெத்தனங்களும், விசாரணைமுறைகளும் விமர்சிக்கப்படுவதுடன், ஆட்டிஸம் பாதிப்பையும் இணைத்து விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் பாலபாரதி.

ஆட்டிஸம் பாதிப்பு குறித்து சமீபமாகதான் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

அந்த பணியை தனது இரண்டாவது நாவலான `துலக்கம்’ மூலம் சிறப்பாக செய்திருக்கும் நண்பர் பாலபாரதிக்கு வாழ்த்துகள்.

நன்றி : கார்டூனிஸ்ட் பாலா (பேஸ்புக்கில்)
———————

சில விஷயங்களை ஒரே பார்மட்டில் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடக்கூடாது. வேறு வேறு வடிவில் வேறு வேறு சுவையுடன் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். யெஸ்.பாலபாரதி அண்ணன் அதைத்தான் செய்கின்றார். ‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ புத்தகம் தமிழ் சூழலில் நிச்சயம் ஒரு பொக்கிஷம். சுமார் 12-13 கட்டுரைகளில் ஆட்டிசம் பற்றிய புரிதலை எளிய வடிவில் பெற்றோர்களுக்கு கொடுத்தார். அந்த புத்தகத்தினை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்க்கும்போது தான் அந்த புத்தகத்திற்கான அண்ணனின் உழைப்பு இன்னும் புரிந்தது. ஆரம்பத்தில் அழுகையே மேலிட்டது. ஆட்டிச குழந்தையில் பெற்றோரில் வலியினை நினைத்து. அப்போது அண்ணனின் கம்பீர முகம் முன்வந்து Go ahead என்றார். (விரைவில் அந்த புத்தகம் வெளிவரும்)

துலக்கம் ஒரு த்ரில்லர் நாவல் வடிவில் ஆட்டிச குழந்தையின் அக உணர்வுகளை பேசும் நாவல். இதிலும் பெற்றோரின் வலிகள், தவிப்புகள், இயலாமை அத்தனையும் வெளிப்படும். நிச்சயம் நாவலை வாசிக்கும் முன்னரும் முடிக்கும்போதும் ஆட்டிசம் பற்றிய புரிதல் பெருமளவிற்கு மாறி இருக்கும். ஒரு நூல் வெளிவருவதற்கு முன்னரே அதனை வாசித்து அதை பற்றிய கருத்தினை கூறுவது அலாதியான அனுபவம். நாவல் எழுதப்பட்டு சுடச்சுட வாசித்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் மிகுந்த சந்தோஷம். நேற்று கைகளில் அச்சாகி பார்த்தபோது சந்தோஷமாய் இருந்தது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றவர்கள் உறவினர்கள் மட்டும் ஆட்டிசம் பற்றி அறிந்துகொண்டால் போதாது, எல்லா பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களும் நம்மைபோன்ற மனிதர்கள் தான், ஒரு சின்ன குறைபாடு உள்ளது அவ்வளவே என்பதனை உணரவேண்டும். in fact, அவர்களை சுற்றி இருப்பவர்கள் தான் அதிகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது. ‘துலக்கம்’ வரவேற்கப்படவேண்டிய நூல். அவசியம் வாங்கி வாசியுங்கள்.

நன்றி: உமாநாத் செல்வன் @ விழியன் (பேஸ்புக்கில்)

 

 

This entry was posted in கட்டுரை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.