மனிதர்கள் – ஆங்கில ஆசிரியர் வால்டர் ஜெயபாலன்

சம்பவம்-1

பன்னாட்டு தனியார் வங்கி ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் ஓர் இளம் பெண் வாரம் ஒருமுறை வந்து இவரை சந்தித்து பேசிவிட்டுப் போகிறார். தமிழ் மீடியத்தில் படித்த அந்த பெண்ணுக்கு ஆங்கிலத்தில்.. பேசவோ, எழுதவோ பெரிய தயக்கம் இருந்து வந்துள்ளது.

அத் தயக்கத்தினை போக்கி ஆங்கிலமும் எளிமையான மொழி தான் என உணர்த்தி, ஆங்கிலம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கில ஆசிரியர். மெத்தப்படித்தவர்களிடமும் தயக்கமின்றி ஆங்கிலத்தில் உரையாட முடிந்ததால் தான் அந்த வங்கியில் வேலை கிடைத்ததாக அப்பெண் குறிப்பிட்டார் என்னிடம்!

————

சம்பவம்- 2

இவரிடம் ஆங்கிலம் பயின்ற பலரும் இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனாலும் இவரது உழைப்பு தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பல புதிய மாணவர்கள் இவரை தேடி வந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். இவரைத் தேடி இவரது இல்லம் போனபோது, பழைய மாணவர்கள் சிலரையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவருமே ஆசிரியர் வால்டர் ஜெயபாலனை புகழ்கின்றனர். பலர் அஞ்சல் அட்டை மூலம் தங்கள் சந்தேகங்களை கேட்டபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கிறார் இவர்.

————
வால்டர் ஜெயபாலன் இது தான் அவர் பெயர். 72 வயதாகும் இவரைப்பற்றி நண்பர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டு தொடர்பு கொண்டேன். பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தாலும் சென்னைத் தமிழுக்கு மாறாமல் இன்னும் தென்தமிழகத்தின் மொழிநடையில் பேசிய இவரின் பேச்சில் மனசை பறிகொடுத்தேன்.

என் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவம். நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் ஆங்கில ஆசிரியர் ஆங்கிலச்சொற்களுக்கு தமிழில் பொருள் கூறிக்கொண்டிருந்தார். ஆளாளுக்கு, பேனா, நோட் புக், டேபிள், சேர் என்று தமிழ்படுத்தி கேட்டுக்கொண்டிருக்க.. நான் மட்டும், “ப்ளாஸ்டிக்- என்றால் தமிழில் என்ன சார்” என்று இயல்பான சந்தேகத்தை கேட்டதும், நான் ஏதோ கிண்டல் செய்வதாக நினைத்து, என்னை குச்சியால் பின்னி எடுத்துவிட்டு, க்ளாஸ் ரூமுக்கு வெளியே முட்டி போட்டு நிற்க வைத்து விட்டார். இப்படியான ஆசிரியர்களையே சந்தித்து வந்திருக்கும் எனக்கு இவரின் இனிமையும், எளிமையாக புரியவைக்கும் மனநிலையும் கண்டு வியந்து போனேன். இவரிடம் பேசப் பேச.. அட.. இப்படி ஒரு ஆங்கில ஆசிரியர் எனக்கு கிடைக்காமல் போய் விட்டாரே என்று வருத்தம் மேலிட்டது மறுக்கவியலாத உண்மை.

வழக்கமான பாணியில் இல்லாமல் ஆங்கிலம் கற்பிப்பதற்கென்றே புதிய முறையையும் கண்டு பிடித்திருக்கிறார் வால்டர் ஜெயபாலன் அவர்கள்.

போனிக்(phonic)-என்று பெயரிடப்பட்ட அம்முறையில் – ஆங்கில உயிர் எழுத்துக்களான AEIOU என்பதை A= அ, E=எ, I=இ, O=ஒ, U=உ என்று குறித்துக்கொண்டு, மற்ற எல்லா ஆங்கில எழுத்துக்களையும் மெய்யெழுத்தாக கொள்ளச்சொல்லுகிறார் இவர்.

இப்படி எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தை வாசிக்கச்சொல்கிறார். இது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (குறிப்பாக ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு) எளிமையான முறை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

இவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொண்ட பலர் இன்று பல்வேறு இடங்களில் பணி புரிந்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இப்போதும் வால்டர் ஜெயபாலனைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுக்கொள்கின்றனர். ஏதாவது சந்தேகம் இருந்தால் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதினால் கூட நான் பதில் போடுகிறேன் என்று சொல்கிறார்.

இவரின் இரு மகன்களும் தற்போது வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார்கள். 1995ல் அரசு இவருக்கு ஓய்வைக் கொடுத்து விட்ட போதிலும், இன்றும் தன் பணிக்கு ஓய்வு கொடுக்காமல் உழைத்து வருகிறார்.

இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்லியாகவேண்டும். கடந்த பதினான்கு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு ஆங்கில மொழியை மிகவும் எளிமையாக போதித்து வரும் இந்த முன்னாள் ஆசிரியர், பணத்திற்காக அல்லாமல் இலவசமாக தொண்டாற்றி வருகிறார். இந்த ஆசிரியரைப் பற்றிய ஓரு விஷுவல் செய்தி குறிப்பு:


நன்றி:- ஜி தமிழ் தொலைக்காட்சி. 🙂

(மீள் பதிவு)

This entry was posted in அனுபவம், மனிதர்கள், வீடியோ and tagged , , , , , , . Bookmark the permalink.

10 Responses to மனிதர்கள் – ஆங்கில ஆசிரியர் வால்டர் ஜெயபாலன்

  1. இங்கிலீஷ் ஓகே.. ஆனா தாத்தான்னு யாரை சொல்றீங்க? கடைசியில அவரு கூட ஒருத்தர் நடந்து வர்றாரே அவரையா? ஹி..ஹி..

  2. யோவ்… வெண்பூ.. ஆனாலும் உமக்கு குசும்பு ஜாஸ்தி தான்யா..! நற..நற..நற..

  3. ரவி says:

    பகிர்வுக்கு நன்றி, பாலா. உங்களின் செய்தி அறிக்கையைக் காணவும் மகிழ்ச்சி.

    ஆசிரியருக்கு என் வணக்கங்களைத் தெரிவியுங்கள்.

    வாய்ப்பு கிடைக்கும் போது தமிழறிஞர்களையும் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

  4. பாலா,

    ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து.

    இந்த இடுகையைப் படிக்க மிகவும் மகிழ்ச்சி. இவரைப் போன்ற ஆசிரியர்களின் பணி வெளியில் தெரியவேண்டும். குறிப்பாக அரசினர் பள்ளிகளில் உள்ள பிள்ளைகளுக்கு இவர் சொல்லித்தரும் ‘phonic’முறையில் எந்த அளவு பயன் தருகிறது என்று புள்ளி விவரங்களோடு (எத்தனை மாணவர்களின் ஆங்கில அறிவு எப்படி உயர்ந்தது? அதன் விளைவால் பள்ளி எப்படி மேம்பட்டது?) போன்ற செய்திகளோடு, ஒரு கால்மணி நேரத் தனி நிகழ்ச்சி செய்யுங்கள். அப்பொழுது மக்களுக்கு நன்றாகப் புரியும். குறிப்பாக, அவர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார் என்பதை 4/5 மணித்துளிப் பாடமாகக் காட்டினால் நன்றாக இருக்கும். இதை செய்தி வாசிப்பின் போது செய்யச் சொல்லவில்லை. தனியே ஒரு நிகழ்ச்சியாகச் செய்தால் நன்றாக இருக்கும்.

    உங்களுக்கு வாழ்த்துக்கள். ”ஊருக்கு நல்லது செய்வோம்”

    அன்புடன்,
    இராம.கி.

  5. முன்னாடி பதிவில் ஏத்தும் போதே படிச்சிருக்கேன்.மீள்பதிவுக்கும் நன்றி தல..

  6. tsekar says:

    Give his contact details-

    Regards
    Sekar.T

  7. vaduvurkumar says:

    இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை வெளிச்ச‌த்துக்கு கொண்டுவ‌ந்த‌த‌ற்கு ந‌ன்றி.ப‌ல‌ ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு உத‌வியாக‌ இருக்கும்.

  8. பொன்ஸ் says:

    பாலா,
    இந்த குச்சியால அடிச்ச கதையெல்லாம் எங்கயோ படிச்சமாதிரி இருக்கேன்னு யோசிச்சா, மீள்பதிவு!

    இங்க கலிபோர்னியாவில், நான் பார்த்தவரை குழந்தைகள் போனிக்ஸ் தான் முதல்ல கத்துக்கிறாங்க.. நம்ம ஊர் சொல், வாக்கியமாக்கம் எல்லாமே அப்புறம் தான். வால்டர் சார் மாதிரி தமிழ் எழுத்துக்களுக்கு ஆங்கில ஒலி இல்லாம வெறும் ஆங்கில எழுத்துக்களை மட்டும் ஒலிச்சேர்க்கை முறையில் சொல்லிக் கொடுக்கிறாங்க.. உதாரணத்துக்கு, ‘Gum – இதோட போனிக் rhyming words சிலது சொல்லு’ – sum, lump, இது மாதிரி..

    இதுல எத்தனை கத்துக்கிட்டாங்கங்கிறது தான் முதல் வருட பாடம்னு நினைக்கிறேன்..

  9. பொன்ஸ் says:

    அப்புறம் அந்த ipaddress.comஐ எடுக்கக் கூடாதா? செம கடியா இருக்கு!

  10. gavaskee says:

    சிறப்பானதொரு வெளிக்கொனர்தல்.
    எனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமா, ஆங்கிலம் கற்றுக்கொள்ள..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.