ஆட்டிச நிலையாளர்களும் மனிதர்கள் தான்!

நேற்று மாலை ஒர் ஆட்டிசக்குழந்தையின் தாயார் போன் செய்திருந்தார். அவருடைய 17வயது மகனுடன் ஒரு ஷாப்பிங் மால் போய் இருக்கிறார்.

வாகனம் நிறுத்துமிடத்தில் தனது காரை பார்க்கிங் செய்துவிட்டு, பையனுடன் வெளியில் வந்துகொண்டிருக்கும் போது, ரிவர்ஸ் எடுத்த ஒரு காரில் இருந்த ஹார்ன் சத்தம் இவனை தொந்தரவு செய்துவிட்டது. சில அடிகள் தூரம் நடந்து, மாலின் வாசலில் நுழையும் இடத்தில், திடீரென உணர்ச்சிப்பெருக்குக்கு ஆட்பட்டவன் விழுந்து புரண்டபடி சத்தம் எழுப்பத்தொடங்கி உள்ளான். இவரால் அவனை சமாளிக்க முடியவில்லை. எப்படியும் சில வினாடிகளுக்குள் நார்மலுக்கு வந்துவிடுவான் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கூட்டம் கூடி விட்டதாம்.

குழந்தையை ஒழுங்கா வளர்க்கத்தெரியல அதனாலதான் இப்படி அடங்காம அலையுறான், லூசு புள்ளைய பெத்துட்டு ஏன் வெளியில எல்லாம் கொண்டு வர்றீங்க, என்று ஆளாளுக்கு அட்வைஸ்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். என்ன மேடம் இப்படி டிஸ்டர்ப் பண்ணுறான் என்று அங்கிருந்த செக்யூரிட்டி ஆட்கள் அவனை அமுக்க, அவன் திமிர என்று ஒரே களேபரம் தான். கொஞ்ச நேரத்தில் அவன் இயல்பு நிலைக்கு வந்ததும் ஷாப்பிங் செய்யாமலையே வெளியே வந்துவிட்டதாகவும் சொல்லும் போதே அவருக்கு அழுகை வந்துவிட்டது.

பொதுவாக அனேக ஆட்டிசக்குழந்தைகளுக்கும் உணர்ச்சிப் பெருக்கு எனப்படும் tantrum பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இதனை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்திவிடமுடியாது. எப்போது இப்படியான உணர்ச்சிப் பெருக்குக்கு ஆட்படுவார்கள் என்பதையும் கணிப்பது சிரமம். இது வராமல் தடுப்பதும் நம்கையில் இல்லை.

இதன் காரணமாக வீட்டுக்குள்ளேயே ஆட்டிசக்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே முடக்கி விடுவதும் சரியான காரியமல்ல. மருத்துவர்களும், தெரபிஸ்ட்டுகளும் தொடர்ந்து சொல்லும் அறிவுரை இவர்களை ஒரே இடத்தில் அடக்கி வைக்காதீர்கள். பொது இடங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள் என்பது தான்.

கீழ்க்காணும் வீடியோக்களை ”முழு ஒலி அளவுடன்” முழுமையாக காணுங்கள். சில நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோக்கள் உங்களை நிச்சயம் சிரமப்படுத்தும். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இப்படி வாழவேண்டிய/கேட்கவேண்டிய நிலையில் உள்ள ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையையும், அவர்தம் பெற்றோரையும் நினைத்துப்பாருங்கள்.(பல பெற்றோர் மரத்துப்போய் இச்செயல்களை நகைச்சுவையுடன் கடந்து போக முனைகிறார்கள்)

https://en.wikipedia.org/wiki/File:Toddler_throwing_a_tantrum.ogg?fbclid=IwAR2cQLEC1-Zakw1VmXHCXgGWR6_8e2XPal1HMITmQmaEf2qfBqVNOAp5piI

பொது இடங்களில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எதிர்படும் போது, அவர்களை கட்டுப்படுத்தவோ, காயப்படுத்தவோ வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இருக்கவிட்டாலே இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள். நம்மூர் மக்கள் இதுபோன்ற புரிதல்களுக்கு வரும் போது அவர்களின் வாழ்க்கையும் நெருக்கடி இல்லாமல் இருக்கமுடியும். இங்கே வேண்டுவது எல்லாம் இரக்கம் அல்ல. சகமனித நேசிப்பு மாத்திரமே!

ஆட்டிசம், #autism

அறிவுசார் குறைபாடு உடையவர்களும் மாற்றுத்திறனாளிகளே!
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நாள்!

(2016 டிசம்பர் 3ஆம் நாள் பேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு | Leave a comment

புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம்.

பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட சில வசதிகளும் தேவை என்பதை உணர்வோம். ரயில் நிலையம் தொடங்கி, மருத்துவமனை, விமானநிலையம் என எல்லா இடங்களிலும் தளம் வழுவழுப்பாக இருந்தால் நமக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதே தளத்தில் ஊன்றுகோல் துணைகொண்டு நடக்கும் ஒரு மாற்றுத்திறனாளியால் நடக்க முடியாது. ஆம், அந்த வழுவழு தரை, அவர்களை வழுக்கி விழச்செய்யும்.

*பொது இடங்களில் நீங்களும் நானும் பயன்படுத்தும் கழிவறையின் சின்னக் கதவுகள், சக்கரநாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறக்காது.

*தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் துணி எடுக்க எத்தனை முறை பெரிய பெரிய கடைகளுக்கு சென்றிருப்பீர்கள். ஒருமுறையேனும் அங்கே சக்கரநாற்காலியில் தனக்கான ஆடை எடுக்கவந்த ஒருவரையாவது கண்டிருக்கிறீர்களா? நிச்சயம் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அவர்களுக்கு பிடித்த ஆசையைக்கூட அவர்களால் எடுக்க முடியாது. எட்டு பத்து படிகள் ஏறி எப்படி செல்வர்?

*நம்மில் பலருக்கும் பிடித்த, கடற்கரையில் கால் நனைக்க முடியாது ஏங்கும் மாற்றுத் திறனாளிகள் ஏராளம்.

*ஆம், இது மாற்றுத்திறன் மக்களில் நீண்ட நாள் கோரிக்கை. இதனை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ‘செல்பி பாயின்ட்’ பின்புறம் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்லது. இதற்காக சிங்0கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடு ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கி வேலைகள் தொடங்கப்பட்டன. இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைப் பாதையானது, 263 மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.

* முழுக்க முழுக்க மரக்கட்டைகளால் வடிமைக்கப்பட்ள்ள இதில் மழைநீர் தேங்காது. முழுவதும் வடிந்து போகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைப்பாதையில் கைப்பிடிகளுடம் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊன்றுகோல் துணையுடன் நடக்கும் முதியவர்கள், மணலில் நடக்கும் சிரமமின்றி கடலை அருகில் இருந்து ரசிக்கலாம். கடல் பரப்பில் எந்த இடத்தில் வேண்டுமானலும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

*மாற்றுத்திறனாளிகளுக்கான இப்பாலத்தை, தங்கள் காலில் மணல் படாமல் இருக்க, நமது பொதுஜனங்களும் பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர். கூட்டம் கூட்டமாக அதில் நடப்பதும் ஓடுவதுமாக உள்ளனர். ஒருவேளை இந்தப் பாலம் உடைந்துபோனால்… என்னவாகும் என சிந்தித்துப் பார்த்திருப்போமா? உடைந்துபோனால், சரி செய்ய பல மாதங்கள் ஆகும். அல்லது சரி செய்யப்படாமலேயே கூட போய்விடலாம்.

*கடலை அருகில் சென்று பார்க்கும் ஆசையும், கடல் அலைகள் தங்களின் கால்களையும் நனைக்குமா என்னும் மாற்றுத்திறனாளிகளின் ஏக்கம் கனவாகவே போய்விடும்.

*அந்த பாலம் நமக்கானது அல்ல. அது மாற்றுத்திறனாளிகளுக்கானது. அதை பயன்படுத்தாமல் இருப்போம். மாற்றுத்திறனாளி அல்லாத எவரை பயன்படுத்த அனுமதிக்காமலும் இருப்போம்.

நன்றி

=================

Posted in அனுபவம், எதிர் வினை, கட்டுரை, சமூகம்/ சலிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

-யெஸ்.பாலபாரதி

தமிழ் இலக்கிய உலகில் பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், ஆசான் எல்லாமும் உண்டு.  அவர்களில் பலரும் ஒரே குரலில் சொல்லுவது, ’தமிழனுக்கு இலக்கியம் படிக்கிற வழக்கமே இல்லை. தமிழ்நாட்டில் இலக்கிய புத்தகமே விற்க முடியாது. அல்லது இலக்கிய புத்தகங்கள் விற்பனையே ஆக மாட்டேங்குது. எங்கள மதிக்கவே மாட்டேங்கிறாங்க’ இப்படியான குரல்களை உங்களில் பலரும் கேட்டிருக்கலாம். உண்மையில் எனக்கு இக்குரல்களைக் கேட்கும்போதெல்லாம் சிரிப்புதான் எழும்.

ஒரு குழந்தைக்கு கல்வியை சொல்லிக் கொடுக்கிறோம்; ஏதோ ஒரு அறிவுத் துறையை நாம் அறிமுகப்படுத்துகிறோம் என்றால், எப்படி அறிமுகப்படுத்துவோம்?

முதலில் அவர்கள் மழலையர் வகுப்புக்கு போகும்போது நாம் எண்ணும் எழுத்தும் சொல்லிக் கொடுக்கிறோம். பாடல்களின் மூலம் புதிய சொற்களையும் வார்த்தைகளையும் பழக்கப்படுத்துகிறோம். அதன் பிறகு வாக்கியங்கள், கூட்டல் கழித்தல், என வளர வளர ஒவ்வொரு படிநிலையிலும் பாடத்திட்டத்தின் அடர்த்தியை அதிகரித்துக் கொண்டே போகிறோம்.

இப்படியாக அக்குழந்தை கல்லூரி முடித்து வெளியில் வரும்போது, வளர்ந்த மனிதனாக, அந்த ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறையில், நல்ல ஆழமான அறிவுள்ளவனாக வரவேண்டும் என்பது நம் கல்வித் திட்டத்தின் நம்பிக்கை. இது போன்ற ஒரு திட்டவட்டமான கற்பித்தல் ஒழுங்குமுறை இங்கே இலக்கியத்திற்கு உள்ளதா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

சின்ன வயதில் ரைம்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம். அதன் பிறகு இலக்கியத்தின் தொடர்ச்சி எங்க வருகிறது குழந்தைகளுக்கு? பாடத்திட்டத்திலே ஆகட்டும் அல்லது வீட்டிலே ஆகட்டும் அதற்கான சூழலை நாம் கொஞ்சம் கூட கொடுப்பதே இல்லை.

என்னுடைய சிறு வயதில் சிறுகச்சிறுக சேமித்து, சிறார்களுக்கான மாதப் பத்திரிகைகளை வாங்கி இருக்கிறேன். என்னுடைய பள்ளி ஆசிரியர் சிறார் பத்திரிகைகள் பற்றி எல்லாம் வகுப்பில் பேசுவார். இது மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

எங்கள் தெருவில் இருந்து அடுத்த தெருவிற்கு சென்று கையில் இருக்கும் ஒரு இதழைக் கொடுத்து, அவர்களிடம் இருக்கும் இன்னொரு இதழைப் பெற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். வீட்டிலும் அது போன்ற செயல்களை ஊக்குவித்தனர். என்னை எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, நூலகத்தில் உறுப்பினராக்கிவிட்டனர்.

அங்கிருந்து தொடர் வாசிப்பை கைக்கொண்டதால்தான் இன்று நான் இலக்கியம், பத்திரிக்கை என்று வாசிப்பு சார்ந்த துறைகளில் ஈடுபாட்டோடு வாழ முடிகிறது.

மழலையர் வகுப்பில் சொல்லித் தரும் சில பாடல்களைத் தவிர்த்து வேறெந்த கலை இலக்கிய அறிமுகமும் இல்லாது, சேனம் பூட்டிய குதிரை போல மதிப்பெண்களை நோக்கியே வெறியேற்றி வளர்க்கப்படும் ஒரு சிறுவன் அல்லது சிறுமி திடீரென பதினெட்டு அல்லது இருபது வயதானவுடன் இலக்கிய தாகம் கொண்டு வாசகனாகி விடவேண்டும் என்று எப்படி நம்புகிறோம்? எந்த போதி மரத்தின் அடியில் அவர்கள் அந்த ஞானத்தைப் பெற முடியும் என்பதுதான் எனக்கு எப்போதும் எழும் கேள்வி.

இலக்கியத்தைப் பற்றிய அறிதல் இல்லாத, அதில் ஈடுபாடு இல்லாத ஒரு சமூகம் நம் தமிழ்ச் சமூகம் என்று எல்லா நவீன இலக்கியவாதிகளுமே ஏதேனும் ஒரு கட்டத்தில் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். வளரும் பருவத்தில் ஒன்றுமே சொல்லிக் கொடுக்காமல் இருந்துவிட்டு, திடீரென நீ ஏன் இலக்கியம் படிப்பதில்லை என்று ஒரு மனிதனைப் போட்டு உலுக்கினால் அவரால் என்ன பதில் சொல்ல முடியும்?

குழந்தையாக வளரும்போதே நாற்றங்காலாய் இருக்கிற ஒரு இடத்தில் நாம் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கொடுத்து எடுத்தால்தான், அதை எடுத்து வயலில் நடும்போது அது நல்ல செழிப்பான பயிராக வளரும். நாற்றாக இருக்கையில் தரவேண்டிய ஊட்டச் சத்துக்களை தராது விட்டுவிட்டு, பின்னர் விளைச்சல் வரவில்லையென்று புலம்பிப் பயனில்லை. அதுபோலத்தான் இலக்கியமும் சிறு வயதிலிருந்தே படிப்படியாக, தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப் படவேண்டும்.  இதன் முக்கியத்துவம் பற்றி மற்றவர்கள் அறியாமல் இருப்பது கூட எனக்கு ஆச்சரியமாக இருந்ததில்லை. சக இலக்கியவாதிகளே கூட சிறார் இலக்கியத்தை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.

அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இலக்கியத்தை சொல்லிக் கொடுப்பார்கள், அவர்களுக்கு வாசிப்பை ஊக்குவிப்பார்களே தவிர ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சிறார் இலக்கியம் என்ற ஒரு துறை தேவை எனும் எண்ணம் அவர்களுக்கே வருவது இல்லை. அது தான் பெரிய சிக்கல். தங்கள் வாசகர்களிடமும் சிறார் இலக்கிய தேவை குறித்து, அவர்கள் உரையாடுவதில்லை.

சிறார் இலக்கியம் என்ற அந்த நாற்றங்காலை வளப்படுத்துவதற்கு நாம் அனைவரும் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். இங்கே நான் இலக்கியவாதிகளை மட்டும் குற்றம் சொல்வதாக எண்ண வேண்டாம். ஆசிரியர்களும் பெற்றோர்களும், பள்ளிச் சூழல், வீட்டுச் சூழல் இரண்டிலும் குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். அதற்குத் தேவையான புத்தகங்களை உருவாக்கும் வண்ணம் நம் இலக்கியச் சூழல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் சிறார் இலக்கியத்தில் ஒரு சில பெயர்களே தட்டுப்படுவது மாறி, எல்லா இலக்கியவாதிகளும் இங்கும் இயங்க வேண்டும். அதற்கு சிறார் இலக்கியத்தை சற்று மாற்றுக் குறைந்த சரக்காக எண்ணும் இலக்கியவாதிகளின் மனப் போக்கும் மாற வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர்கள் எனும் இரு நிலையிலும் நின்று நாம் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளின் வாசிப்பார்வத்தை படிப்படியாக வளர்த்தெடுப்பதை மட்டுமே. பாடப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்து, அவற்றை அப்படியே காற்புள்ளி, அரைப்புள்ளி முதற்கொண்டு மாறாமல் தேர்வில் படியெடுத்து, மதிப்பெண்களை சுமக்க முடியாமல் சுமப்பது மட்டும் போதாது. அவை மட்டுமே நம் குழந்தைகளை அறிவாளியாகவோ, பக்குவமான மனிதனாகவோ மாற்றிவிட முடியாது என்பதை உணர வேண்டும்.

குழந்தைகள் சுயமாக சிந்திக்கும் திறன், படைப்பாற்றல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள நாம் உதவ வேண்டும். அதை விட முக்கியமாக பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும், அதில் நம் பெறுமதியையும் அவர்கள் உணரவும் வேண்டும்.  அதை உணரும் போது மட்டுமே உயர் விழுமியங்கள் கொண்ட வாழ்வை அவர்கள் அடைய முடியும். இவை எல்லாம் இலக்கிய அறிமுகத்தின் மூலமே சாத்தியப்படும்.

குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு கற்றுக் கொள்வதைக் காட்டிலும் நாம் செய்வதைப் பார்த்தே அதிகம் கற்றுக் கொள்வார்கள். சிறுவயதில் கேட்ட குரங்கும், குல்லா வியாபாரியும் கதை நினைவில் இருக்கிறதா? நம் முது மூதாதையினரான குரங்குகள் எப்படி குல்லா வியாபாரியைப் பார்த்தே போலச் செய்தனவோ, அந்தத் தன்மை மரபணுக்களின் மூலம் நமக்கும் வந்திருக்கிறது என்பதையே நரம்பியலில் கண்ணாடி நியூரான்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே நம் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த விரும்பினால் முதலில் நாம் அந்தப் பழக்கத்தைக் கைக் கொண்டிருக்கிறோமா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தினசரி சிறிது நேரமாவது நாமும் வாசித்து, நம் குழந்தைகளுக்கும் வயதுக்கு உகந்த புத்தகங்களை வாங்கித் தந்து வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். அல்லது அருகிலுள்ள நூலகங்களுக்கு அவர்களை அழைத்துப் போய் உறுப்பினராக்கி, வாசிப்பிற்கான வசதிகளை அளிக்கலாம். படி, படி என்று சொல்வதோடு அல்லாமல் அவர்கள் படித்த விஷயங்களை அவர்களையே சொல்ல வைக்கலாம். அதற்காக இலக்கிய வாசிப்பையும் இன்னொரு பாடம் போல ஆக்கி, மனப்பாடம் செய்ய வைக்க வேண்டியதில்லை. இயல்பாக வாசித்ததில் அவர்களின் புரிதல் என்ன என்பதை சொல்லச் சொல்லுவதன் மூலம் அவர்கள் வெறுமனே இயந்திரத்தனமாக வாசித்துச் செல்லாமல், வாசிக்கும் தகவல்களைச் செரித்து, தங்கள் சொந்தக் கருத்தாக மாற்றிக் கொள்ளும் வித்தை கைவரப் பெறுவார்கள்.

இப்படியான செயல்களின் மூலம்தான் வருங்கால சமூகத்தை அறிவுள்ள, வாசிப்புள்ள, பண்பட்ட சமூகமாக வளர்த்தெடுக்க முடியும். சிறார்களுக்கு வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவும் தேடலும் மட்டுமே பண்பட்ட சமூகக்குடிகளாக வளர்த்தெடுக்கும். அதற்கு இன்றே நாற்றங்கால்களுக்கு உரமிடும் வேலையைத் துவங்குவோம். குழந்தைகளுக்கு ஏற்ற இலக்கியப் படைப்புகளை உருவாக்கி, அதை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

(தீராநதி இதழில் வெளியானது. செப்.2022)

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , , | 1 Comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]

அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என எல்லோரும் சமாதானம் சொல்லிப் பார்த்துவிட்டனர். ஆனால் ஷாலுவால் மரப்பாச்சி கை நழுவிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கும் விடுதிக்கு வந்த பின்னும் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. யாரோடும் பேசாமல் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

“இதோ பார் ஷாலு… இப்படியே மூஞ்சியைத் தூக்கி வச்சுகிட்டு உட்கார்றதுல எந்த அர்த்தமும் இல்லை. அப்பா வேணும்னா… வேற மரப்பாச்சி வாங்கித்தாரேன்” என்றார். இவள் எதுவும் பேசவில்லை.

“அவகிட்ட என்ன கெஞ்சிகிட்டு இருக்கீங்க.. நாலு சாத்து சாத்தினா வழிக்கு வந்துடப்போறா… நீங்க இந்தப் பக்கம் வாங்க…” என்று அம்மா வந்தார்.

“அக்கா… நீ சும்மா இருக்கமாட்ட… பாவம் அவ… எவ்வளவு ஆசையா இருந்துச்சுன்னா… அந்த மரப்பாச்சியைக் கையிலயே தூக்கிட்டு வந்திருப்பா… ஸ்மார்ட் போன் கொடு, ரிமோட் கார் கொடுன்னா கேக்குறா… மரப்பாச்சி தானே…” என்று ஷாலுவுக்கு ஆதரவாக வந்தார் சித்தி.

“மரப்பாச்சிதாண்டி… வேற வாங்கித்தாரேன்னு எத்தனை தடவ சொல்லியாச்சு. ஆனா தொலைஞ்சு போன அதே மரப்பாச்சிதான் வேணும்னு சொல்றா, அப்பத்தான் சாப்பிடுவேன்னு அடம்வேற… நீ என்னடான்னா அவளுக்குச் சப்போர்ட் செய்யுற…?”

“சரிம்மா கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா…! இதோ பார் ஷாலு, நானும் செல்வமும் போய், தேடிப்பார்த்துட்டு வாரோம். கிடைச்சா சரி… ஆனால் கிடைக்காட்டி… அப்புறமாவும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. நாங்க சொல்லுறபடி நடந்துக்கனும் சரியா?” என்று அப்பா கேட்டார்.

“நானும் வாரேன்” என்று கிளம்பினாள் ஷாலு.

“அதெல்லாம் வேணாம்மா… நீ இங்கேயே இரு. அதுதான் நாங்க போறோம்ல… ட்ரஸ்ட் மீ” என்றார் செல்வம்.

விருப்பமே இல்லாமல் ‘சரி’ எனத் தலையசைத்தாள் ஷாலு.

அப்பாவும் சித்தப்பாவும் அறையில் இருந்து வெளியேறினார்கள். கொஞ்ச நேரத்தில் கார் கிளம்பிப்போகும் சத்தம் கேட்டது. அம்மாவும் சித்தியும் அந்தப்பக்கம் போவதற்காகக் காத்துக்கொண்டிருந்தான் சூர்யா. அவன் எதிர்பார்த்த தருணம் வந்ததும் ஷாலுவின் அருகில் வந்தான்.

பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்சநேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அப்புறம் மெதுவாக, “ஷாலு… மரப்பாச்சி கிடைச்சிடும். கவலைப்படாதே…” என்று சொன்னான். அவள் இவனை முறைப்பதுபோலப் பார்த்தாள்.

“என்னைய ஏன் முறைக்கிற…? நானா அதைக் கீழே போட்டேன்…”

“உனக்கென்ன… உன் சுண்டைக்காய் இளவரசன் எப்ப நினைச்சாலும் வருவாரு போவாரு… எனக்குக் கிடைச்ச ஒரே ஒரு மரப்பாச்சி அதுவும் போயிடுச்சு… அதனால சோகத்துல இருக்கேன். நீ பேசாம போயிடு, ஆமா…” என்று சூர்யாவைப் பார்த்துக் கோபமாகக் கத்தினாள் ஷாலு.

“கூல்… கூல்… சுண்டக்காய் இளவரசனை நான் கடைசியா பார்த்தே ஒரு வருசமாச்சு தெரியுமா?”

ஷாலுவிற்கு வியப்பாக இருந்தது.

“என்னது ஒரு வருசமாச்சா..?”

“ஆமாம்… நான் என்ன தெலுங்குலையா சொல்றேன். தமிழ்ல்லதான… அப்புறம் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டால்…?” இப்போது சூர்யாவின் குரலில் மாற்றம் இருந்தது.

“சரி… சரி… இப்போ நீ கூல்… கூல்” என்று இரு கைகளையும் தூக்கி ஆசிர்வதிப்பதுபோலச் செய்தாள் ஷாலு. சூர்யாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“கூலாகிட்டியா… இப்பச்சொல்லு… ஏன் அவர் உன்னைப் பார்க்க வரலையா?” என்று கேட்டாள் ஷாலு.

“அவர் சொன்ன மாதிரியே, ஒவ்வொரு அம்மாவாசைக்கும் வந்துட்டு இருந்தார். அப்புறம் ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை வந்தார். அப்படியே குறைஞ்சு போச்சு…”

“அவர் வருவது குறைஞ்சதுமே நீ கேட்கலையா…?”

“கேட்காம இருப்பேனா… கேட்டேன். அவர் சொன்ன பதில் சரியானதாகத் தோனிச்சு.. ஆரம்பத்துல நானும் உன்னைய மாதிரி, அழுதுட்டு இருந்தேன். அப்புறம் சமாதானமாகிட்டேன்”

“என்ன சொன்னார்?”

“அவங்களைப் போல, சூப்பர் பவர் இருக்கிறவங்க ஒரே இடத்துல தங்கிவிடக்கூடாதாம். நம்மளை மாதிரியே பலரையும் சந்திக்கிறதுதான் அவங்களோட முக்கியமான வேலையாம். ஒரே இடத்தில் தங்கி, நம்மை மட்டுமே சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது சுயநலமில்லையான்னு கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியலை. முதல்ல அழுகைவந்துச்சு… அப்புறம் யோசிச்சப்ப… அது சரின்னு தோணிச்சு.”

“- – – – – – -”

ஷாலு அமைதியாக இருந்தாள். அவளுக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சூர்யா தொடர்ந்தான். “இதைத்தான் நான், உனக்கும் சொல்ல நினைச்சேன் ஷாலு. சுண்டக்காய் ஆகட்டும் மரப்பாச்சி ஆகட்டும் அவங்களோட தேவை இன்னொரு இடத்திலையும் இருக்கும். அங்க அவங்க போவதுதான் சரி. அதே சமயம் அவங்களுக்கு நம்ம நினைப்பு வந்துச்சுன்னா… கண்டிப்பாக வந்து பார்ப்பாங்க. அந்த நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதே!” என்றான் சூர்யா.

சூர்யா சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும், மரப்பாச்சியைத் தேடிப் போய் இருக்கும், அப்பா, சித்தப்பா கையில் கிடைத்துவிடாதா… என்ற நப்பாசையுடன் அவர்களின் வரவுக்காகக் காத்திருந்தாள் ஷாலு.

*********

ஏலகிரியின் மலைகிராமம் ஒன்றில்…

“மயிலு… மயிலு..” என்று குரல் கொடுத்தவாறு வீட்டின் வாசல் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி, இறங்கினார் முருகன்.

“என்னப்பா…?” என்று உள்ளிருந்து வாசலுக்கு ஓடிவந்த மயிலுக்குப் பத்து வயதிருக்கும். இரட்டைச்சடைப் பின்னல் போட்டிருந்த அவள் ஒல்லியாக இருந்தாள்.

“அப்பா… உனக்கு என்ன கொண்டு வந்திருக்கேன்னு சொல்லு” என்று கையைப் பின்னாடி வைத்தபடியே கேட்டார்.

“முறுக்கு…”

“இல்லை…”

“அதிரசம்…”

“அதுவும் இல்லை…”

“கலர் பென்சில் கேட்டேனே… அதுவா…”

“ம்ஹூம்… இல்லை.”

“நீங்களே சொல்லிடுங்கப்பா…”

“மரப்பாச்சிப் பொம்மை” என்று அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த மரப்பாச்சியை அவளின் முகத்துக்கு நேராக எடுத்து நீட்டினார்.

“ஐ… கவுனு எல்லாம் போட்டிருக்கே… எங்கே இருந்துப்பா…” என்று ஆசையாக அதை வாங்கிப் பார்த்தாள்.

“கறந்த பாலை சொஸைட்டியில ஊத்தீட்டுச் சைக்கிளில் திரும்பி வரும்போது வானத்துல இருந்து பறந்து வந்து, என்னோட மடியில விழுந்துச்சும்மா… மொதல்ல அப்பா பயந்துட்டேன். சைக்கிளை நிப்பாடி, இறங்கிப் பாத்தால்… லுங்கியில மாட்டி இருந்துச்சும்மா… மரப்பாச்சின்னுத் தெரிஞ்சப் பின்னாடிதாம் பயம்போச்சு…”

தன் அப்பா சொன்னக் கதையை வியப்புடன் கேட்ட மயில், மரப்பாச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். அது இவளைப் பார்த்துச் சிரித்தது.

(முடிந்தது)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆசிரியரின் பிற சிறார் நூல்கள்

  1. ஆமை காட்டிய அற்புத உலகம்
  2. சுண்டைக்காய் இளவரசன்
  3. புதையல் டைரி
  4. மரப்பாச்சி சொன்ன ரகசியம்
  5. சிங்கம் பல்தேய்க்குமா?
  6. சேர்ந்து விளையாடலாம்!
  7. யானை ஏன் முட்டை இடுவதில்லை?
  8. உட்கார்ந்தே ஊர் சுற்ற…
  9. தலைகீழ் புஸ்வாணம்
  10. பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
  11. மந்திரச் சந்திப்பு
  12. நான்காவது நண்பன் (மொழிபெயர்ப்பு)
  13. என்னதான் நடந்தது (மொழிபெயர்ப்பு
  14. எல்லைகள் (மொழிபெயர்ப்பு)
  15. ஆறு (மொழிபெயர்ப்பு)
Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , | 1 Comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]

காரில் இருந்து இறங்கியதும் சுற்றிலும் பார்த்தாள் ஷாலு. அந்த இடம் மலையில் இருந்தாலும் சமதளமாக இருந்தது. மைதானம் போன்ற அந்த இடத்தின் முடிவில் மலையின் சரிவு தொடங்கியது. அதனால் அங்கே சில மைல்கல் நட்டு, மஞ்சள் வண்ணம் பூசி இருந்தனர்.

அங்கே இவர்களைப்போலவே பாராகிளைடிங்கில் பறக்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் தங்கள் வந்த கார்களை ஒட்டி நின்று கொண்டிருந்தனர். பாராகிளைடிங் பயிற்சியாளரிடம் சென்று செல்வம் பேசிவிட்டு வந்தார். அம்மாவும் சித்தியும் பறக்க மறுத்து விட்டனர். பறந்து அனுபவம் இருப்பவர்களை மட்டும் தனியாகப் பறக்க அனுமதித்தனர். புதியதாகப் பறக்க விரும்புகிறவர்களுக்கு “டேன்டம் கிளைடிங்” முறையில் பயிற்சியாளர்கள் கிளைடரை மாட்டிக்கொண்டு, புதியவர்களைச் சுமந்து, பறப்பதற்கு உதவினார்கள். மலையேற்றத்தில் ஆர்வமுடைய செல்வம் சித்தப்பாவிற்குப் பறந்து முன் அனுபவம் இருப்பதால் பயிற்சியாளரின் துணையின்றித் தனியாகப் பறப்பதற்கு ஆயத்தமானார்.

அவருக்கு ஷோல்டர் பேக் மாதிரி பெரிய பேக் ஒன்றை மாட்டிவிட்டனர். அதிலிருந்து பெல்ட்டை கால்களுக்கு இடையே கொடுத்து மாட்டினர். ஷூக்களில் நீண்ட நைலான் கயிற்றைக் கொக்கிகள் மூலம் இணைத்தனர். அக்கயிற்றின் மறுமுனை நீண்ட நைலான் துணியில் இணைக்கப்பட்டிருந்தது.

செல்வம் கொஞ்சம் சரிவில் நின்றுகொண்டு, நைலான் கயிற்றை அப்படியும் இப்படியுமாக அசைத்து இழுத்தார். அந்தத் துணி பாராசூட் போலக் காற்றில் மேலே எழும்பியது. அப்படியே சரிவில் இருந்து கீழ்நோக்கி ஓடினார். காற்றுப் பலமாக வீச, அப்படியே கால்களை மடக்கிக்கொண்டார். இப்போது காற்று அவரை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு போனது. பார்ப்பதற்கே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே… பறந்தால்… ஷாலுவிற்கு நினைக்கும் போதே சிலிர்த்தது. மரப்பாச்சியையும் கையில் எடுத்துக்கொண்டு பயிற்சியாளரிடம் ஓடினாள் ஷாலு.

அடுத்தடுத்து அப்பாவும், சூர்யாவும் பயிற்சியாளருடன் பறந்து போனார்கள். இப்போது ஷாலுவின் முறை, முழுத்தயாரிப்புடன் பயிற்சியாளர் ஒருவர் வந்தார். அவரின் உடையில் இன்னொருவரை சுமந்து செல்லக்கூடிய பெல்ட் வசதிகள் இருந்தன. கூடுதலாக உடன் பறப்பவர் அமர்ந்து கொள்ளக்கூடிய தொட்டில் போன்ற வசதியும் அதில் இருந்தது. ஷாலுவையும் அதில் அமரச்செய்து, பெல்ட் எல்லாம் அணிவித்தார். அவர் சொன்னபடி கேட்டால் போதும் என்று சொல்லிவிட்டு, ஷாலுவை கொஞ்ச தூரம் ஓடலாம் என்று சொல்லிவிட்டு அவர் ஓட, இவளும் அவருடன் ஓடினாள். கால்களை மடக்கிக்கொள்ளும்படி அவர் சொன்னதும், இவளும் கால்களை மடக்கிக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாகக் கிளைடர் பறக்கத் தொடங்கியது.

முதலில் பயமாக இருந்தபோதும், அந்தரத்தில் பறப்பது சுகமான அனுபவமாக இருந்தது. காற்று முகத்தில் மோதி, ஷாலுவின் தலைமுடியை கோதிவிட்டுச் சென்றது. பயிற்சியாளர் இருகைகளிலும் கையுறை மாட்டியிருந்தார். அவரது இரண்டு பக்கமும் இருந்த சிவப்பு வண்ண நைலான் கயிற்றை பிடித்திருந்தார். அவ்வப்போது இடதும் வலதுமாக அவற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அவரின் இழுப்புக்கு ஏற்ப, காற்றில் பறந்தது கிளைடர்.

அதுவரை கைக்குள் மறைத்து வைத்திருந்த மரப்பாச்சியை வெளியே எடுத்தாள் ஷாலு. இவளைப் பார்த்து அது சிரித்தது. “இளவரசி, வானத்துல இருந்து கீழே பார்க்க எத்தனை அழகாக இருக்கு பார்” என்று மரப்பாச்சியைத் தூக்கி, கீழே காட்டினாள்.

க்ளைடரை இயக்கிக்கொண்டிருந்தவர் பார்க்கிறாரா என்று முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். அவரோ இது எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரது கவனம் முழுவதும் பறக்கும் க்ளைடரை காற்றுக்கு ஏற்றவாறு திசைதிருப்பி, இயக்குவதிலேயே இருந்தது.

“அதோ… அது என்னது தெரியுமா?” என்று பயிற்சியாளர் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி கேட்டார். அவர் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்தாள். அங்கே தூரத்தில் வெள்ளையாக அரைக்கோளவடிவில் ஒரு கட்டடம் தெரிந்தது. உயரத்தில் இருந்து பார்க்கவே பெரியதாகத் தெரிந்தது. அப்படி என்னால் கிட்டே போனால் எவ்வளவு பெரியதாக இருக்குமென்று தோன்றியது.

“தெரியலையே!” என்றாள்.

”அதுதான். வானிலை ஆராய்ச்சி மையம். அங்கே போனா… டெலஸ்கோப்புல நிலாவை எல்லாம் கிட்டப் பார்க்கலாம்” என்றார்.

அந்த இடத்தைப் பார்த்தவாரே கீழே பார்த்தால்… மரங்கள் பாதைகளை மறைத்து எங்கும் காடுகளாகத் தெரிந்தன. இவ்வளவு உயரத்தில் இருந்து பறக்கிறோமே… அதுபற்றிப் பயம் இல்லாமல் இருக்கிறார் என்றால் சரி… பழகிப்போயிருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மகிழ்ச்சி கூடவா இருக்காது. எத்தனை முறை பறந்தாலும் இந்த மகிழ்ச்சி ஒவ்வொரு முறையும் புதிதல்லவா… யோசனை செய்தவாரே, நாலா பக்கமும் பார்த்துக்கொண்டே பறந்து கொண்டிருந்தாள் ஷாலு. கீழே குட்டி குட்டியாக மனிதர்கள் தெரிந்தார்கள். உண்மையில் அவர்கள் மனிதர்கள் தானா என்ற சந்தேகம் வந்தது.

“அங்கிள்… அதோ… கீழே தெரியுதே… அவங்க மனுஷங்க தானா… அல்லது… பொம்மை கிம்மையா” என்று கேட்டாள். அவளது குரல் பின்னால் பறந்தவருக்குக் கேட்கவில்லை.

இவள் அவரைத் தட்டினாள். அவர் குனிந்து, “என்னம்மா?” என்று கேட்டார். இவள் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டாள். அவரும் கீழே பார்த்துவிட்டு, “எதைக் கேக்குறன்னு தெரியலையே பாப்பா…” என்றார்.

இவள் மரப்பாச்சி வைத்திருந்த கையால் இடத்தைச் சுட்டிக்காட்டினாள். அந்த இடத்தைப் பார்த்தவர், “ஆமாமா… அது சின்னப்பசங்க… இங்கே மலைக்கிராமத்துல இருக்குற சின்னப்பசங்கதான். விளையாடிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

அப்போது, கிளைடர் கொஞ்சம் ஆடியது. ஷாலுவின் கையில் இருந்த மரப்பாச்சியின் பிடி நழுவியது.

“ஐயோ… என்… மரப்பாச்சி” என்று வீறிட்டாள்.

“என்ன ஆச்சு பாப்பா?” என்று குனிந்து கேட்டார்.

“என்னோட… பொம்மை கீழே விழுந்துடுச்சு…” என்று சொன்னாள்.

“பொம்மைதானே… விடுப்பா…” என்று கிளைடரை தரை இறக்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். காற்றில் மரப்பாச்சி பறந்து போவதுபோல இருந்தது. அதன் அருமை பற்றி இவரிடம் எல்லாம் சொல்ல முடியாது. சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது. கீழே விழுந்துகொண்டிருக்கும் மரப்பாசியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் ஷாலுவுக்குச் சூர்யாவின் நினைவு வந்தது. அவனைத் தேடினாள். தூரத்தில் சில கிளைடர் பறப்பது தெரிந்தது. அதில் அவன் எதில் பறக்கிறானோ… கீழே வந்ததும் விஷயத்தைச் சொல்லுவோம் என்று நினைத்துக் கொண்டாள். ஆனாலும் ஒருவித படபடப்பாகவே இருந்தது. எப்படியும் திரும்பவும் கையில் கிடைத்துவிடவேண்டும் என்று சாமியையும் வேண்டிக்கொண்டாள். கிளைடர் கீழே இறங்கத்தொடங்கியது.

Box news

வைணு பாப்பு வானிலை ஆராய்ச்சி மையம்: ஆசியாவிலேயே பெரிய தொலைநோக்கி இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஏலகிரியை அடுத்த ஜவ்வாது மலையின் காவனூரில் அமைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வாளர்களின் முன்னோடியான வைணு பாப்பு பெயரே இம்மையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுக்குச் சிறந்த இடம் என்று இங்கு இடத்தைத் தேர்வு செய்தவரும் இவரே! சனிக்கிழமைகளில் வானம் தெளிவாக இருந்தால், இங்குள்ள வான் நோக்கி வழியாகப் பொதுமக்கள் நட்சத்திரங்களையும் நிலவையும் கண்டு மகிழலாம்.

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , | Leave a comment