August 14th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி





இன்று மாலை துரைசாமி சாலை- வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி திறந்து வைக்கிறார்.
நேற்று மாலை முதல் பாலத்திலும், அதனை சுற்றிய இரண்டு பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு ஜங்சன் பாக்ஸ்( டிராண்பார்மர்) இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்கத்தில் தொடர்ந்து மின்வெட்டுக்கள் நடந்து வரும் சூழ் நிலையில்.. இப்படி மின்சாரத்தை வீணடிப்பது அவசியமா..?! 
(கடந்த ஆட்சியில்.. அதற்கு முந்தைய ஆட்சியில்.. வெள்ளைக்காரன் ஆட்சியில்…… இப்படி எல்லாம் நடக்க வில்லையா என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்)
July 31st, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
சில ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சனையை முன்னிருத்தி திரை உலகினர் நெய்வேலியில் பெரிய பேரணியை நடத்தி, கர்நாடகத்திற்கு எதிரான தங்களின் நிலையை காட்டினார்கள். அப்போது நம்ப சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனித்து, உண்ணாவிரதம் இருந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். (இதன் அரசியல் உணராத திரை உலக அறிவுஜீவிகள் நெய்வேலி பங்சன் முடித்து இங்கேயும் வந்து வாழ்த்திவிட்டுப் போனது சோகமான காமெடி) அப்போது மும்பையில் இருந்த நான் ஒரு சிறு பத்திரிக்கைக்கு எழுதிய குறுங்கவிதை இது.
ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக்காசு
ஏமாளித் தமிழன்
இப்போது நினைவுக்கு வந்ததற்கு காரணம் இந்த செய்தி தட்ஸ்தமிழ்டாட்காம்
உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்க! அல்லது யாரிடமாவது பேசுங்க!! 
June 15th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய் விட்டது வருந்தமளிக்கிறது. (நண்பர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது அதை விட வருத்தமான விசயம். நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போதெல்லாம் நினைப்பது எல்லாம் செய்து முடிக்க முடிவதில்லை என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகி வருகிறது.)
-oOo-
கடந்த வாரம் நடிகர் கார்த்திக் அரசியல் கட்சி தொடங்குகிறார். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு வர.. நிறுவனத்தின் சார்பில்.. போய் இறங்கினோம். 4.30க்கு என்று சொல்லி இருந்தார்கள். சினிமா படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது போலவே தாமதமாக 5 மணிக்கு வந்து சேர்ந்தார். தொடக்கத்தில்.. பேசினார்.. பேசினார்… பேசினார்! என்னென்னமொ பேசினார். ஏகப்பட்ட கைத்தடிகளின் கூட்டம் வேறு. அத்தனை பேரும் மப்பில் இருந்தார்கள். தேவர் சாதி கட்சி போல தோற்றம். நிறைய கைதட்டலும் விழுந்துகொண்டே இருந்தது. நிறைய பேசிய பின் “அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி” என்று தம் கட்சிக்கு பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார். அதன் பின் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மஞ்சள்+வெள்ளை+சிகப்பு நிறங்களைக் கொண்ட.. கொடியின் நடுவில் முத்துராமலிங்கனார் படம் போட்டிருந்தார்கள். கொடி அறிமுகம் செய்யப்பட்டவுடன் எல்லா புகைப்படக்காரர்களும் கார்த்திக்கின் தலைக்கு மேல்(பின்னால்) பிடித்திருந்த கொடியை படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். விடியோ கேமரா மேன்களும் கார்த்திக்குடன்.. கொடியை கவர் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது.. கார்த்தின் அசராமல்.. சொன்னார்.., “நல்லா.. பார்த்துக்கிடுங்க.. இது தான் கொடி.. ஆனா.. இன்னும் ஃப்பைனலைஸ் ஆகலை..” படம் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோருக்கும்.. ஒரு மாதிரியாகிவிட்டது. அய்யா சாமீ.. மொதல்ல.. ஒரு முடிவுக்கு வாங்க.. அப்புறம் கூட்டம் போட்டு அறிவிப்பு கொடுங்கப்பா… மக்கள் பாவம்..!
-OoO-
நடிகர் சரத்குமார் தன் கட்சியின் சார்பில்.. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடத்தவிருக்கும்.. ஆர்ப்பாட்டம் பற்றி அறிவிக்க.. அழைத்திருந்த.. செய்தியாளர் சந்திப்பு அது. ”யாருடனாவது.. கூட்டன்ிசேர்வீர்களா?” என்ற கேள்விக்கு, “இன்றைய முதல்வர்.. முந்தைய முதல்வருடன் நிச்சயம் கூட்டனி இல்லை”என்று சொன்னார் சரத். குறும்புக்கார.. ஒரு செய்தியாளர்.. அப்போ.. ”வருங்கால முதல்வருடன் சேருவீர்களா?”என்று அறிவுஜீவித்தனமாக கேட்க.., சரத்குமார் புரியாமல் விளித்தார். “விஜயகாந்துடன் சேர்வீர்களா?”ன்னு கேட்டேன் சார்.. என்றார் அந்த செய்தியாளர். கடுப்பாகிப் போன.. சரத், “நாங்களே.. அடுத்த முதல்வர்ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போது இப்படி பேசுவது சரியா?” என்று நொந்துகொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது.
-oOo-
”தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்” என்ற ஓர் அமைப்பை டாக்டர் ராமதாஸ் நேற்று தொடங்கி வைத்தார். அந்த அமைப்பின் அனேக பொறுப்புக்களில் இருப்பவர்கள் எல்லோரும் வன்னியர்கள். இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மற்றவர்கள். சாதிய அமைப்புகள் நேரடியாக சாதி பெயரை பயன்படுத்தாமல் இப்பொதெல்லாம் ‘தமிழ்’ பெயரை பயன்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டது ஆபத்தான காரியமாகப்படுகிறது. எழுத்தாளர்களுக்குள் தான் நேரடியான சாதிய அணுகுமுறை இருப்பதில்லை என்று நம்பி இருந்தேன். அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் என்பது இப்போது தான் தெரியவந்தது. அடப்போங்கப்பா..!
-oOo-