May 20th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

ங்களுக்கு பேய்கள் பற்றிய பயமுண்டா.. அது பற்றிய கதைகள் கேட்டு இருக்கிறீர்களா.. சிறுவயது முதல் விதவிதமான பேய்கள், வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை. அல்லது இருப்பதில்லை. இன்னும் கூட பெருநகரவாசனை அறிந்திடாத ஊர்களில் இவை உயிர் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் என் அக்காவின் குழந்தைகள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டுப் போகும் போது நிறைய பேய்கதைகளை விரும்பி கேட்டுவிட்டுத்தான் போவார்கள். அவர்களின் ஊருக்குப் போனதும் சகமாணவர்களிடம் இது பற்றி சொல்லி, அவர்களை வாய்பிளக்கச்செய்வார்களாய் இருக்கும்.

ஆனால் எனக்கு அவை பற்றிய பயம் (நம்பிக்கை) இப்போது இல்லை. பயம் தெளிந்திற்கு காரணம் என் பாண்டி சித்தப்பா. நானும் பயந்த காலம் ஒன்று இருந்தது. கொஞ்சம் இருட்டினாலே.. கொல்லைப் பக்கம் போக துணைக்கு ஆள் தேடியதெல்லம் இப்போதும் நினைவில் இருக்கிறது. கனவு கண்டு பயந்து நடு இரவில் எழுந்து அம்மாவின் கதகதப்பான கைகளுக்குள் சுருண்டு தூங்கிய நாட்கள் இப்போதும் நினைத்தாலும் சுகமானவை. அந்த அன்பான கைகளைத்தாடி.. ஒரு பேய்யும் கனவில் கூட வந்ததில்லை என்பது விளங்காத ஆச்சரியம்.

எங்களூரில் கிழக்குத்தெரு, சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தொடங்கி கடற்கரையில் போய் முடியும். அந்த தெருவின் கடைசில் கடற்கரையை ஒட்டினார்ப் போல ஒரு பாழடைந்த பங்களா ஒன்று இருந்தது. பாதியாய் சாத்திக்கிடக்கும் பெரிய மரக்கதவு. அதன் மீது விதவிதமான வேலைப்படுகள் செய்யப்பட்டிருக்கும். அது போல வேலைப்படுகளை கோவில் கதவில் மட்டுமே பார்க்க முடியும். தனி வீட்டின் அப்படியான ஒரு வேலைப்படுகள்

நிறைந்த கதவைப் பார்க்கும் போது பிரம்மிப்பு தோன்றும். அந்த நாட்களில் எல்லா வீட்டுத் திண்ணைகளும் திறந்து தான் இருக்கும்.(இப்போது திண்ணைகளே இல்லை என்பது வேறு விசயம்) தெருவில் வருவோர் போவோர் என யார் வேண்டுமென்றாலும் அமர்ந்து இளைப்பாறிச் செல்லலாம். ஆனால் அந்த பங்களா வீட்டைச் சுற்றிலும் ஆளுயரத்திற்கு கோட்டைச்சுவர் கட்டி வைத்திருந்தார்கள். அங்கு திண்ணை கிடையாது. கோட்டைச் சுவற்றைத் தாண்டி சிறிது தூரத்தில் வீடு ஆரம்பித்து விடும். கோட்டைச் சுவறின் வாசலில் இரும்பு கிரில் கேட் போட்டு சாத்தி வைத்திருந்தார்கள்.

எனக்கு விபரம் தெரிந்து அந்த வீட்டில் யாரும் வசித்ததாக நினைவு இல்லை. அந்த வீட்டைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அதில் ஒன்று தான். ஜமீந்தாரின் அந்த வீட்டை வடநாட்டு பணக்காரர் வாங்கி குடி வந்ததாகவும், குழந்தைகள் இல்லாத அவரும் அவர் மனைவியும் அடிக்கடி புரியாத மொழியில் சண்டை போட்டுக்கொள்ளுவார்களாம், ஒரு நாள் அந்த பெண் தீயில் எரிந்தபடி தெருமுழுக்க ஓடி செத்து விழுந்ததாகவும், அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்றும், அந்த பணக்கரர் கொலை செய்து விட்டார் என்றும், வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி அந்த பணக்காரர் இறந்து போனதாகவும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதன் பின் அந்த வீட்டில் அவர்களின் பேய் உலாவுவதாக எல்லோரும் பேசத்தொடங்கினார்கள்.

தம்பி, தங்கச்சியை பயப்படுத்த நானே கூட பேய்கதைகள் சொல்லி இருக்கிறேன். சிறுவயதில் வீட்டின் பெரிய திண்ணையில் அமர்ந்து மின்சாரம் தடைபட்ட இரவில் தன் கணீர் குரலுடன் எங்களுக்கெல்லாம் பாண்டி சித்தப்பா பேய் கதை சொல்லுவார். அகண்ட கண்களும், கன்னத்தை மறைக்கும் பெரிய மீசையுமாய் லாந்தர் ஒளியில் அவரே பயங்கரமாகத் தெரிவார். பாண்டி சித்தப்பாவின் அனேக பேய் கதைகளின் களம் அந்த பங்களா வீட்டைச் சுற்றிதான் இருக்கும். அவர் வேலைக்குப் போய் வந்த பிறகு தெருக்குழந்தைகளை எல்லாம் அழைத்து திண்ணையில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பிப்பார். கதை முடிவதற்குள் பலர் வீட்டிற்கு ஓடிவிடுவார்கள். சிலரை அம்மாக்கள் வந்து அழைத்துப் போய் விடுவார்கள். நானும் என் சின்ன அண்ணனும் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டபடியே கதை கேட்டுக் கொண்டிருப்போம். பல நாட்களில் பாண்டி சித்தப்பாவின் கதை கனவில் வந்து பயந்து அலறி இருக்கிறேன். அப்போதெல்லாம் அம்மா சித்தப்பாவை வைது கொண்டே துருநீரு போட்டு தூங்க வைப்பாள். அடுத்த நாள் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வரும் போது, சேர்த்து வைத்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்த்திடுவாள் அம்மா. அவரும் சிரித்துக்கொண்டே இனி பேய் கதை சொல்லமாட்டேன் என்று போய் விடுவார். ஆனாலும் மாலையே வந்துவிடுவர்.. திரும்பவும் கதை சொல்ல!

ஊரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த்து. அந்த பங்களா வீட்டுப்பக்கம் என்னைப் போன்ற சிறுவர்கள் யாருமே போவதில்ல. அதுவும் சுட்டெரிக்கும் மதிய வேலையிலும், மாலையில் விளக்கு ஏற்றிய பின்னரும் பெரியவர்கள் கூட அந்த பக்கம் போய் வருவதில்லை. குறுக்குச் சந்தின் வழி அடுத்த தெருவுக்குள் போய் அந்த பக்கமாகத்தான் கடற்கரைக்கு போய் வந்தார்கள். பங்களாவின் பல பகுதிகளில் காரை பெயர்ந்து விழுந்து, சுண்ணாம்புச் சுவர் தெரிந்தது. கதவு இல்லாத சன்னல்கள் வழியே உள்ளே பார்க்கும் போதே அச்சம் ஏற்படுத்தும் அந்த பங்களாவின் இருட்டு. ஆளுயரம் வளர்ந்த எருக்கச்செடிகளும் பங்களாவினுள் இருக்கும் பறவைகளின் கூடும் கூடுதலான அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன.

பள்ளியில் எழுதாத சட்டமே இருந்தது. யாரும் அந்த பங்களாவின் பக்கம் போகக்கூடாது என்று. பங்களாவைப் பற்றிய கதைகள் ஊர் முழுக்க பலரால் பல விதத்தில் பரப்பப்பட்டு இருந்த்து. எல்லா வாலிபர்களுக்கும் வயசாலிகளுக்கும் அந்த பங்களா குறித்து, சண்டை போடுவது மாதிரி காரசாரமாக பேசிக்கொள்ளுவார்கள்.

சைக்கிள் ஓட்டிப் பழகிய ஒரு மாலைப் பொழுதில் இடம் கவனிக்காது பங்களாவின் பக்கம் வந்துவிட்டேன். நாடகம் நடிக்க வந்த பட்டிணத்துக்காரி ஒருத்தியுடன் பாண்டிச்சித்தப்பா பதுக்கியதைப் பார்த்ததிலிருந்து எனக்கு அந்த பேய் பங்களாவின் மீது பயமற்றுப் போனது.

December 26th, 2006 by ♠யெஸ்.பாலபாரதி

இது கதையல்ல! ஆனால் அந்த வடிவத்தில் சொல்லப்பட்ட முயற்சி!
என்வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களில் அடி மனதில் படிந்துபோயிருப்பவர்களில்… இந்த துரைப்பாண்டியும் ஒருவன். எதிர்ப்படும் எல்லா பணியிடச் சிறுவர்களுக்குள்ளும் ஒவ்வொரு விதத்தில் அவனை நான் பார்த்து வருகிறேன். இனி.. நீங்களும் அவனைத் தேடலாம். என்னைப்போலவே!
————————————

அன்று வீடு மாற்றியாக வேண்டிய நாள். அதனால் எல்லா பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு டைரிக்குள் இருந்து சில கடிதங்கள் விழுந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தேன். ஒன்று என் அம்மா அனுப்பிய பழைய கடிதம். நான் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, மும்பையில் படுக்கையில் விழுந்தபோது, ஊருக்கே வந்துவிடும்படி அன்பொழுக கேட்டுக்கொண்ட கடிதம். அம்மா அதிகம் படிக்காதவள். ஆனாலும் அவளின் கையெழுத்து குண்டுகுண்டாக அழகாய் இருக்கும். பழைய தமிழில் இருந்த எழுத்துக்களை மீண்டும் படித்தபோது, தாய் மேலான காதல் இன்னும் அதிகமானது. இன்னொன்றும் அம்மாவுக்கான கடிதம் தான், எழுதியவன் நான். ஆனால் என் அம்மாவுக்கு அல்ல! அது துரைப்பாண்டியின் அம்மாவுக்கான கடிதம்.

துரைப்பாண்டி. உங்களில் பலரும் கூட இவனைப் பார்த்திருக்க கூடும். பதினோரு வயது நிரம்பியவன்(1999-ல்). கட்டையான உருவம், மெலிந்த தேகம், ஏக்கம் வழியும் கண்களுடையவன். பெரிய அலுமினியப்பாத்திரத்தில் இட்லிகளைச் சுமந்து விற்பனை செய்பவன். நான் அவனை முதலில் பார்த்தது மாகிம் தொடர்வண்டி நிலையத்தின் அருகில். பால் முகம் மாறா அவனது பருவமும்,உருவமும் என்னை ஏதோ செய்ய… அவனை அழைத்தேன். அருகில் வந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

“க்யா சையே…?” என்றன்.

“அடேய்.. நா தமிழ்காரண்டா…”

“என்ன வேணும்ண்ணே… இட்லியா.. தோசயா?”

“அதெல்லாம் இருக்கட்டும்.. ஓம் பேரென்னப்பா..?”

‘என்னத்துக்கு கேக்குறீங்க?’

“சும்மாத்தான்… சொல்லேன்..”

‘தொறப்பாண்டி’

“எந்த ஊரூப்பா…?”

‘சும்மா.. தொணத்தொணங்காதண்ணே…யாவரத்துக்கு போவனும்..’ என்று நழுவப்பார்த்தவனைத் தடுத்து, ‘ரெண்டு ரூவாயிக்கு இட்லி கொடு’ என்றேன்.

வழவழப்பான ஆங்கிலப் பத்திரிக்கையின் இரண்டு காகிதத்தை ஒன்றன் மீது ஒன்றாய் வைத்து, இட்லிவைத்து, சட்டினியையும் சாம்பாரையும் ஒன்றாய் ஊற்றி நீட்டினான். அதுவரை அப்படி சாப்பிட்டதில்லை நான். அவனிடம் பேச வேண்டுமென்பதற்காக… தோளில் கிடந்த பையை சரி செய்தபடி, இரு கையாலும் பெற்று கொண்டேன்.

இட்லி காகிதத்தை இடது கைக்குள் அடக்கி, வலது கையால் ஒரு இட்லியை விண்டு வாயில் போட்டபடியே கேட்டேன்.

“ம்… இப்போ சொல்லு?”

‘மதுர..’

“மதுரயில..”

‘மேலூருக்கு பக்கம்’

“அதா(ன்) எங்க…”

‘என்னத்துக்கு இவ்ளோ கேக்குறீங்க… நீங்க ஆரூ?’ என்றன் சற்றே எரிச்சலுடன்.

”அடேய்ய்ய்… நானும் மதுரக்காரந்தா(ன்)… இங்கென ஒரு பத்திரிக்கையில வேல பாக்குறேன்.”

‘பத்திரிக்கையினா…’

“பேப்பர்ரா.. நீயூஸ் பேப்பர்! நம்ம ஊரூல தந்தி பேப்பர் வரும்ல… அது மாதிரி…”

பேப்பர் காரைய்ங்களா நீங்க… அய்யய்யோ… ஆள விடுன்னே… எங்க சேட்டு யாரு கூடயும் பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு! சீக்கரம் துண்ணுட்டு காசு காசு கொடுத்துரூங்க.. நா போயிறேன்’ என்றபடி வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினான்.

“தொரப்பாண்டி.. உன்னய பத்தியெல்லாம் எழுத மாட்டேண்டா… எழுதினாலும் எங்க எடிட்டர் போட மாட்டார்… சும்மா தாண்டா கேட்டேன்.”

‘எடிட்டர்னா…?’

“ம்… எனக்கு சேட்டு மாதிரி..! அத வுடு தெனம் இங்கிட்டுதா வருவியா..?”

‘ஆமா… என்னத்துக்கு கேக்குறீங்க…’

“தெனம் இட்லி திண்ணலாம்னு தான்”

காலியான காகிதத்தை கசக்கி வீசிவிட்டு, அவனிடமே… வேறு காகிதம் வாங்கி… கைகளைத் துடைத்துகொண்டேன். காசை வாங்கிக்கொண்டவன் பாத்திரத்தைத் தலைக்கு ஏற்றி… சிட்டாய்ப் பறந்து விட்டான். அதன்பின் அவனிடம் ரோட்டு ஓரத்திலேயே இட்லி சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. நான்கு மாதங்கள் தொடர்ந்து அவனிடம் சாப்பிடத் தொடங்கியதில் நெருக்கமானவனாகிப் போனேன் அவனுக்கு.

வீடியோ தியேட்டர்களில் பார்த்த புதுப்படம், டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டியது, சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காத போலீஸ்காரர்கள், தலையைத் தட்டி பாக்கெட்டைக் காலி செய்த மராட்டியர்கள் என்று பேச ஏகப்பட்ட விஷயங்கள் அவனுக்கிருந்தது. ஆனால் அவற்றை காது கொடுத்து கேட்க அவனுக்கு நான் மட்டுமே இருந்தேன்.

வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவனைச் சந்திப்பது கிடையாது. மற்ற நாட்களில் எனக்காக அவனோ.., அவனுக்காக நானோ காத்திருந்து சந்தித்து விட்டுப் போவது வாடிக்கையாகியிருந்தது. சந்தித்ததும் அருகிலிருக்கும் தேனீர்கடைக்கு போய் தேனீர் குடிப்பதும் எங்களது வாடிக்கையாகியிருந்தது. அந்த ’பையா’க்காரனின் கடை எங்களது மீட்டிங் பாய்ண்ட் ஆனது. சந்திக்க முடியாத தருணங்களில் கடைக்காரனிடம் செய்தி சொல்லிப் போவோம்.

எப்போதும் அவன் பேசும் போது அவனது கண்கள் இங்குமங்குமாய் அலை பாய்ந்து கொண்டே தானிருக்கும். ஒரு முறை காரணம் கேட்டதற்கு, “எங்க சேட்டு கிட்ட எட்டு பசங்க இருக்காய்ங்கண்னே… நா இப்டி ஒங்க கூட பேசுறத பாத்துப்புட்டா… அவருகிட்ட சொல்லீடுவாய்ங்கண்னே…அதா சுத்தி முத்தி பாக்க வேண்டியதாயிருக்கு..”என்றான்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் குடும்பத்தைபத்திச் சொல்லுவான்… கூலி வேலை பார்த்து வந்த அப்பாவின் மரணத்திற்குபின் அம்மா கூலி வேலைக்கு போய்வருவதை… அக்காவைத் தாய்மாமனுக்கு மணம்முடித்து கொடுத்ததை.. மூன்றாவது படிக்கும் தங்கையை நன்கு படிக்க வைக்க வேண்டுமென்ற தனது கனவு பற்றி… என எல்லா கதைகளையும் சொல்லுவான். அக்காவின் திருமணத்திற்கு கடன் கொடுத்த தூரத்து உறவுனர் மூலமே மும்பைக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். சம்பளம் எவ்வளவு என்பதே தெரியாமல் தினம் பதினாறு முதல் பதினெட்டு மணி நேரம் வேலை பார்த்து வந்தான். வீட்டுக்கடன் தன்னுடைய வேலை மூலம் அடைபட்டு வருவதாகவும் சொன்னான். ஐந்தாவதுடன் தனது படிப்பு நின்று போனது குறித்து அதிகம் கவலை இல்லை அவனிடம். ஆனால்… பள்ளி நண்பர்கள், உறவுக்காரர்களின் பிரிவு, தெருவில் விளையாடுவது என்பது போன்றவற்றை இழந்ததில் ஏக வருத்தமுண்டு அவனுக்கு. அது பற்றிச் சொல்லும்போதே அவனது ஏக்கம் கண்களின் வழி நீராய் வழிந்தோடும்.

ஒரு சனிக்கிழமை தாமதமாய்ப் போய் சேர்ந்ததினால் துரைப்பாண்டியை சந்திக்க முடியாமல் போனது. தேனீர்க்கடை’பையா’விடம் மறுநாள் கண்டிப்பாய் சந்திக்கும் வரும்படி சொல்லி இருந்தான்.

ஞாயிற்றுக்கிழமை அவனை சந்திக்க காலையிலேயே கிளம்பினேன். எனக்காகக் காத்திருந்தான். என்னைப்பர்த்ததும் அவனது முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் பரவத்தொடங்கின.

“அப்படி என்னப்பூ… அவசரம் சண்டே வரச்சொல்லியிருக்க..?”

சில நிமிட மவுனத்திற்குப் பின் தழுதழுத்த குரலில் சொன்னான்… ‘நா… ஊருக்கு…போறேண்னே…’

“ஏண்டா..?” என்றதுமே… பொலபொலவென அழுது விட்டான். அழுது முடிக்கட்டுமென காத்திருந்தேன். விசும்பியபடி.. அவனே தொடர்ந்தான்… ‘ரொம்ப அடிக்கிறாய்ங்கண்னே… முந்தா நாத்து கூட சூடு வெச்சுட்டாய்ங்கண்னே…’ என்று தேம்பியவை தேற்றினேன்.

“நா டிக்கெட்டு எடுத்து தரவாடா…”

“ம்…ஹூம்… வேணாம்னே…. ஆத்தாலுக்கு லெட்டர் போட்டா… மாமா வந்து கூட்டிகிட்டு போயிருவாருண்னே…நீங்க லெட்டர் எழுதித்தாங்க போதும்…” என்றான் கண்களை துடைத்தபடி… எங்கள் பேச்சின் பொருள் புரியாவிட்டாலும்.. துரைப்பாண்டியின் துயரத்தை உணர்ந்தவன் போல, ரெண்டு தேனீர் கிளாஸை நீட்டினான் கடைக்காரன். நாங்கள் எடுத்துக்கொண்டதும்… துரைப்பாண்டியின் தலையில் தடவிக்கொடுத்தபடி உள்ளே போய் விட்டான். தோள்பையைத் திறந்து வெள்ளைக் காகிதத்தை எடுத்து… அவன் சொல்லச் சொல்ல… எனக்கு என்னவோ செய்தது. அழுது விடக்கூடாது. அது அவனையும் பாதிக்கும் என்பதால் கட்டுப்படுத்திக்கொண்டு, அவனது வார்த்தைகளை எழுத்துக்களாக உருமாற்றினேன்..!

அன்புள்ள ஆத்தவுக்கு..
பாண்டி எழுதுவது! எப்டி ஆரம்பிக்கிறதுனே தெரியல… அன்னக்கிளி பாப்பா எப்டி இருக்கு? ஸ்கூலுக்கு போவுதா? அக்காவும், மாமாவும் நம்ம வூட்டுக்கெல்லாம் வாராகளா…
ஆத்தா… எனக்கு இங்கென இருக்கவே பிடிக்கல.. ராவுல படுக்க லேட்டாவுது ரவைக்கு வெரசா எழ வேண்டி இருக்கு.. அவனவ(ன்) பொற மண்டையில தா தட்டுறாய்ங்க..! எல்லாத்தையும் விட நா சின்னவனா இருக்குறதுநாள என்னையவே அதிகமா வேல வாங்குறாய்ங்க…
ஏ..ஆத்தா.. கடனே வாங்காம நாமொல்லாம் வாழ முடியாதா…? சித்தப்பூன்னு சொல்லித்தானே.. இவரு கூட இவரு கூட அனுப்பிச்ச.. இங்கன அவர எல்லோருமே ‘சேட்டு’ன்னு தா சொல்லுறேம்… சின்னமாவும் சரியில்ல..எப்பவும் வஞ்சுகிட்டே இருக்குது… ரெண்டு நாளக்கி முந்தி ரவைக்கு எழ லேட்டாகிடுச்சுன்னு சூடு வச்சுட்டய்ங்க..!

வேணாந்தா…இந்த ஊரு வேணா…

நம்ம ஊருக்கு வரணும்போல இருக்குது… மாமாவை அனுப்பிச்சி..என்னய..கூட்டிக்க ஆத்தா… இனி நா ஓங்கிட்ட சுடு சோறு கேக்க மாட்டேன்… பாலு மாமா பட்டறய்க்கே போறேன்… நீ எது ஊத்தினாலும் அதையே குடிக்கிறேந்தா.. என்னைய கூட்டிக்க..ஆத்தா…

அன்னக்கிளி பாப்பா, அக்கா, மாமா, உன்னையனுட்டு..எல்லாத்தையும் பாக்க ஆச ஆசயா இருக்குத்தா… என்னய கூப்பிட்டுக்கத்தா…’’

அன்பு மகன்
துரைப்பாண்டி

எழுதி முடித்ததும் வாசித்து காட்டினேன். முகத்தில் சற்று தெளிவு தெரிந்தது…தான் எப்படியும் மீட்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அவன் கண்களில் தெரிந்தது.

“முகவரிய.. அதா… அட்ரஸ..சொல்றா தம்பீ”

‘ம்.. அம்மா பேரு நம்புத்தாய்ண்னே…’ என்று அவன் ஆரம்பிக்கும் போதே… ‘இங்கன என்னடா பண்ற…?’ என்று வந்து நின்றான் பதினெட்டு வயதில் ஓர் இளைஞன். அவன் தலையிலும் இட்லி பாத்திரமிருந்தது. அவனைப் பார்த்ததும் உதறல் எடுத்தது… துரைப்பாண்டிக்கு…, ‘இவரு மதுரக்காரர்ணே… தெனம் எங்கிட்ட தா சாப்பிடுவாரு… அதா…. பேசிக்கிட்டு இருந்தேன்… அப்ப..வரேன் சார்..’ என்றபடியே இட்லி பாத்திரத்தோடு கிளம்பி, அந்த இளைஞனோடு நடக்கத்தொடங்கினான். அவனோ… என்னை விசித்திரமாய் பார்த்தபடியே.. போனான்.

அன்றுதான் துரைப்பாண்டியை கடைசியாக பார்த்தது. அதன்பின் சந்திக்கவேயில்லை. அவனது அம்மாவுக்காக எழுதிய கடிதமும் சேரும் முகவரியற்று.. என்னிடமே இருக்கிறது. ‘’இப்போது… எப்படி(?) இருப்பான்..? ‘’ என்ற கேள்வி மட்டும் இன்றும் குடைந்து கொண்டே இருக்கிறது என்னுள்.
——————————————————

நினைவுக்கு:

———–

1. “க்யா சையே…?”= என்ன வேணும்?

2. சேட்/ சேட்டு = முதலாளி

3. பையா = உ.பி மாநிலத்தவரை மும்பையில் குறிப்பிடும் சொல்.
———

பிரசுரம் ஆனது தான் என்றாலும், கோப்புக்காக வலையேற்றி உள்ளேன்.

December 16th, 2006 by ♠யெஸ்.பாலபாரதி

ஒன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் சொந்த மண்ணை மிதிப்பதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது. குதிரை வண்டிகளும் மிதி ரிக்ஷாக்களும் நிறைந்திருந்த ரயில் நிலையத்தில் இப்போது ஆட்டோக்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. எஸ். எஸ். கலைவாணர் வீதியில் நிறைந்திருந்த குடிசைகளில் பல கட்டிடங்களாக உருமாறியிருந்தன.

மீன்பிடித் தொழில் மட்டுமே பிரதானமாயிருந்த ஊரில், துணிக்கடை, மருந்துக்கடை போல தெருக்கொரு டாஸ்மார்க் கடையின் போர்டுகளைப் பார்க்க முடிந்தது. சைக்கிள் குறைந்து ஸ்கூட்டரிலும், ஹீரோ ஹோண்டாவிலும் பறந்தபடி இருந்தார்கள் இளைஞர்கள். சைக்கிளின் பின்புறம் கேன் கட்டி வலம் வரும் பால்காரர்கள், எம்-80இல் போய்க் கொண்டிருந்தார்கள்.

புராண புண்ணியதலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த ஊர், முதல்முறையாக, அறிவியல்பூர்வமாகவும் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டது, அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகுதான்.

கடைவீதியில் டீக் குடிக்க நின்ற போது சூடாக போட்டுக் கொண்டிருந்த சுவிங்கத்தை எடுத்துத் தின்றேன். பழைய சுவை மாறாமலிருந்தது.
ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. கலர் டீவி, ப்ரிஜ், மெத்தையுடன் கட்டில், பச்சை வண்ண தொலைபேசி.. குளித்து சாப்பிட்டுவிட்டு, வழக்கமாக நண்பர்கள் கூடும் லாலா மிட்டாய்க்கடைக்குப் போகலாம் என்று கிளம்பினேன். மருதுபாண்டியர் சிலையைக் கடந்து நடந்து போய்க் கொண்டிருக்கும்போது எதிரில் வந்த டேங்கர் லாரி ஒன்று மோதுவது போல் வந்து நின்றது.

“டே(ய்).. சுந்தரம்…”

“பங்கா.. எப்படா வந்த?”

“நேத்திக்கு..”

“ஒரு போன் கூட பண்ணலியேடா… அதுசரி.. இப்ப எங்கடா போற..”

“சும்மா அப்படியே வந்தேன்டா”

“அப்ப சரி.. வண்டியில் ஏறிக்கோ, ‘ஓலைக்குடா’ வர போய்ட்டு வந்திடுவோம்”

ஏறிக் கொண்டேன்.

ராமேஸ்வரத்தைச் சுற்றி இருக்கும் பல மீனவ கிராமங்களில் ஓலைக்குடாவும் ஒன்று. ஊரின் வட கிழக்குப் பகுதியில் கடற்கரையை ஒட்டினாற் போலிருக்கும் கிராமம். முன்னூறுக்கும் குறையாத குடிசைகள். ஒரு தொடக்கப் பள்ளி, சின்ன தேவாலயம், மினி தபால் நிலையம் மட்டுமே கொண்ட சிற்றூர். மருத்துவ வசதிகளுக்கு கிராம மக்கள், ராமேஸ்வரத்திற்குத் தான் வருவார்கள்.

மருத்துவ தேவைகளுக்காக மட்டுமன்றி அவர்கள் ராமேஸ்வரத்துக்கு வருவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அது நல்ல தண்ணீருக்காக. நாடு பொன்விழா கண்ட பின்னும்கூட ‘ஓலைக்குடா’ போல பல கிராமங்களுக்கும் குடிதண்ணீர் வசதி மட்டும் ஏனோ வாய்க்கவில்லை. பல வருடங்களாக மக்கள் ஆறு கிலோமீட்டர் நடந்து வந்து, ஊருக்குள்ளிருந்துதான் குடிதண்ணீர் தூக்கிச் செல்வார்கள். சில சமயங்களில் சைக்கிளின் கேரியரில் இரண்டுபுறமும் குடம் கட்டிச் செல்லும் பெண்களையும் பார்க்கமுடியும். வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓலைக்குடா போன்று பல கிராமங்கள் உள்ளன.

“ஏண்டா.. இன்னுமா அங்ஙன தண்ணிப் பிரச்சனை தீரல?”

“ஆமாண்டா.. வர்றவனுங்க எல்லாம் இத முடிச்சிட்டுத் தான் மறுவேல பார்ப்பானுங்க.. போடா…”

“ஏண்டா சலிச்சுக்கிற.. உனக்குத்தான் பணம் கெடைக்குமில்ல?”

“டே.. எனக்கு வெறும் சம்பளம் தாண்டா.. தண்ணி வித்து காசு பார்க்கிறவங்க வேற ஆளுங்கடா..”

“ஒலகம் முழுக்க தண்ணி விக்கறாங்க.. நம்மூர்ல விக்கிறது புதுசு இல்லடா.. ஆமா! ஓலக்குடா இன்னும் அப்படியேதா இருக்கா”

“ம்ம்.. நீ போனப்ப இருந்த ஊரு இல்லடா இப்ப.. ரொம்ப மாறிப்போச்சு.. ஊருக்குள்ளாற டெலிபோன் வசதியெல்லாம் வந்திருச்சு. தார் ரோடு போட்டுடாய்ங்க.! ரெண்டு மூணு பெரிய ஸ்டோர்ஸ் எல்லாம் வந்துடுச்சுடா..”

“ஆனா, குடிக்க தண்ணி மட்டும் இன்னும் சொமக்குறாய்ங்கன்னு சொல்லு”

“அடப் போடா இவனே.. ! தண்ணிய சொமக்குற காலமெல்லாம் மலையேறிப் போச்சுடா.. தேவைக்கு ஒரு போன்! தண்ணி சப்ளைக்குன்னே ஊருக்குள்ளாற ஏழு டேங்கர் ஓடுது”

எங்கள் பேச்சினிடையே கிராமத்தில் நுழைந்துவிட்டோம். முதலில் இருந்த வீடுகளில் இருந்து குடத்துடன் பெண்கள் காத்திருந்தார்கள். டேங்கர் லாரி நின்றதும் நாகசுந்தரம், கிளீனருடன் நானும் கீழே இறங்கினேன்.

முதல் வீட்டிலிருந்து ஒரு கட்டையானவர் வந்து டேங்கரின் பைப் அருகில் நின்று கொண்டு குடத்துக்கு இரண்டு ரூபாய் வசூலித்து தண்ணீர் விடத் தொடங்கினார். அவர்தான் தண்ணீர் ஏற்பாடு செய்துதருபவராக இருக்கலாம். டேங்கருக்கு மொத்தமாக பணம் கொடுத்து, கிராமத்தில் சில்லரையாக வசூலித்துப் பணம் பண்ணும் சின்ன முதலாளி!

கிளீனரை மட்டும் விட்டு விட்டு வண்டியின் முன்பக்கம் வந்தோம். சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை நீட்டியபடியே நாகசுந்தரம் கேட்டான். “விட்டுட்டியா?”

“நா விட்டுட்டேன்.. அது தான் விட மாட்டேங்குது..” என்றபடி எடுத்து பற்ற வைத்தேன்.

“மாப்ளே கிறிஸ்டோபரைப் பார்க்கலாம்னு நெனைக்கிறேன். வர்றியா?”

“இல்லடா.. வண்டிய ஓட்டணும். நீ வேணா அவே வீட்லேயே ஒக்கார்ந்து பேசிகிட்டிரு.. நா வண்டியோட வர்றேன்”

கிறிஸ்டோபரின் வீடு ஊரின் கடைசியில் இருந்தது. அவனும் எங்களோடு படித்தவன் தான். நான் ஊரை விட்டு போன சில மாதங்களிலேயே, மணவிழா பத்திரிக்கை அனுப்பி இருந்தான். வாழ்த்துத் தந்தி கூட அனுப்ப முடியாமல் போய்விட்டது.

நடக்க.. நடக்க.. நிறைய மாற்றங்களைக் கிராமத்தில் பார்க்க முடிந்தது. குடிசையாக இருந்த துவக்கப் பள்ளி காங்கிரீட் கட்டிடமாக வளர்ந்திருந்தது. பல வீடுகள் மாடி வைத்து கட்டப் பட்டிருந்தன. தேவாலயத்தின் மேல் நியான் விளக்கில் சிலுவை செய்திருந்தார்கள். எல்லா வீட்டு வாசலிலும் குடத்துடன் பெண்கள் காத்துக் கிடந்தார்கள்.

பல வீடுகள் தங்களை மாற்றிக் கொண்ட போதும், கிறிஸ்டோபரின் வீட்டை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை. பழைய குடிசை மாறாமல், அப்படியே இருந்தது. வேலி மட்டையைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

“கிறிஸ்டோபா..”

“ஆரது..?” ஆண்குரல்.

“வெளியில வர்றது!”

சிறிது நேரத்துக்குப் பின் வெற்றுடம்புடன் துண்டு மட்டும் கட்டியபடி வெளியில் வந்தார் கிறிஸ்டோபரின் அப்பா. ஒன்பது வருடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார். கண்களை இடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார்.

“ஆரப்பு… அடையாளந்தெரியலயே..”

“நாந்தாப்பா..” என்னை அடையாளப்படுத்திக் கொண்டதும் சட்டென உணர்ந்து கொண்டவராய்..”வாப்பூ.. நல்லாருக்கியா ராசா?” என்று கைகளைப் பற்றித் திண்ணையில் அமரச் சொன்னார்.

சிறிது நேரம் பழக்கம் பேசிக் கொண்டிருந்தோம். கிறிஸ்டோபர் கடலுக்குப் போயிருப்பதாகவும், அவன் மனைவி தண்ணீர் பிடிக்கப் போயிருப்பதாகச் சொன்னவர், ‘சென்னீ’ என்று உள் நோக்கிக் குரல் கொடுத்தார். ஐந்து வயதில் ஒரு சிறுமி ஓடி வந்தது.

“ஓடிப் போய்.. பால்ராசு கடையில் சித்தப்பூக்கு ஒரு கலர் வாங்கியா..” என அக்குழந்தையை விரட்டினார்..

“அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்பா.. சொம்புல தண்ணி கொடுங்க போதும்” என்றேன் நான்.

“ஒரு சொட்டு தண்ணீ கூட இல்லப்பூ. இருந்ததுல ஒல வச்சிருக்கா.. மருமக எடுத்துட்டு வந்தாத் தான் தண்ணியே! நம்ம ஊருக்குள்ளார பெரிய கடையெல்லாம் வந்தாச்சுப்பூ..ஏ.. ஓடு.!” என்று ஜென்னியை முடுக்கிவிட, அது ஓடிவிட்டது.

பல வருடங்கள் கழித்து.. மணமான நண்பனைப் பார்க்க வெறுங்கையோடு வந்தது மனதை உறுத்தியது. பழக்கம் பேசிக் கொண்டிருக்கும்போதே.. குழந்தை ஜென்னி வந்து நின்றாள்.
அவள் கையில் வியர்த்து வழிந்தபடி இருந்தது “லெஹர் பெப்ஸி” பாட்டில்!
***********