September 27th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார்.

ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை அங்கு காணலாம். எல்லோரும் இவருக்கு தகவல் தந்து விடுவார்கள். சில இடங்களில் அழைப்பு இல்லாமலேயே நண்பர்களுடன் அந்த மாதிரி இடங்களுக்குப் போவதும் உண்டு. இவரின் தாராள உதவும் குணம் ஊர் முழுக்க இவரது புகழைப் பரப்பியது. குடும்ப விவகாரங்கள், வியாபார தகராறுகள், சண்டை சச்சரவுகள் எல்லாவற்றையும் தீர்க்கும் பொறுப்பும் இவரிடம் வந்து சேர்ந்தது. சில சமயங்களில் கோர்ட் விவகாரங்களும் இவரது தீர்ப்புக்கு வருவதுண்டு. கௌவரவ நீதிபதியாக பன்னிரெண்டு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பிளேக் நோய் பரவி பெரும் பீதியேற்பட்டிருந்த நேரம். மக்கள் நகரங்களை காலி செய்து தங்களின் வசதிக்கேற்ப வேறு இடம் மாறிக் கொண்டிருந்தார்கள். ஏழை மக்கள் போக வழியின்றி உள்ளூருக்குள்ளேயே பயத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். பிளேக் நோயினால் இறந்தவர் வீட்டில் எல்லோரும் சடலம் உட்பட மற்ற எதையும் தொடாமல் வீட்டையே கொளுத்தி தெருவில் நின்று கொண்டிருந்த அவலமும் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் தான் துளியும் அஞ்சாமல் இறந்தவரின் சடலத்தை தோளில் தூக்கி சுடுகாட்டிற்கு கொண்டு போய் எரியூட்டி, ஈமச்சடங்குகளை இவரே முன்னின்று செய்தார்.

இப்படி பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட பலருக்கு இவர் செய்த உதவிகளினால் ஈ.வெ.ராவின் புகழ் மேலும் பரவியது. வாரம், பத்து நாட்களுக்கு மேலாக பிளேக் நோய் பாதிக்கப்பட்டவர்களோடு ஈ.வெ.ரா நேரம் செலவழிப்பதை கண்டு அஞ்சிய தேவையற்ற நண்பர்கள் எல்லோரும் விலகி ஓடினார்கள்.

ஈ.வெ.ராமசாமி, எத்தனையோ சமூகம் மறுத்த, தீய பழக்கமுடைய நண்பர்களோடு நெருக்கமாகத் தொடர்பிலிருந்த போதும், மது அருந்துதல் என்ற பழக்கத்திற்கு மட்டும் அடிமையாகவே இல்லை. எப்போதாவது வெற்றிலை பாக்கு போடுவதுண்டு. புகைபிடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இவற்றையும் கூட தனது நாற்பதாவது வயதில், அறவே நிறுத்தினார். நல்ல பண்பாளர்கள் அறிவாளிகளின் உறவுகள் வந்து சேரத் தொடங்கியது இச்சமயத்தில்தான். பா.வே.மாணிக்கனார், கரூர் பெரும்புலவர் மருதையா, கைவல்ய சாமியார் ஆகியோரின் நட்புகள் வளரத் தொடங்கியது.

புலவர் மருதையா புராண புரட்டுக்களை பிரித்து மேய்வதில் வல்லவர். எதிர்காலத்தில் ஈ.வெ.ராவின் திடமான கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது இவரது நட்பு. கைவல்யம் என்னும் வேதாந்த நூலை நன்கு கற்றுத் தேறியவர் என்பதால் கைவல்ய சாமியார் என்று பெயர் பெற்றவர், பார்ப்பனீயத்துக்கு பரம விரோதியாய் இருந்தார். ஈ.வெ.ரா காங்கிரஸ்காரராய் இருந்த போது அவரை கடுமையாகக் கண்டித்தவர்களில், இவரும் முக்கியமானவர். பார்ப்பனர் அல்லாதவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்ற கைவல்ய சாமியாரின் எண்ணமும் பெரியாருக்கு பிற்காலத்தில் உறுதுணையாக இருந்தது.

தேடிச் சென்று காவாலித்தனம் செய்து கொண்டிருந்த ஈ.வெ.ரா தன் அரிசி மண்டியை விட்டு அதிகம் வெளியே போவதை குறைத்துக் கொண்டார். அப்படியே எங்காவது போவதாக இருந்தாலும் கடை அடைத்தபின் போய்விட்டு, காலையில் கடை திறக்க வந்துவிடுவார். பொது காரியங்களில் இவரின் ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர்

தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஈ.வெ.ரா. உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண் செலவு என்பவர், இவை எல்லாம் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே செய்கின்றன என்பதை உறுதியுடன் நம்பியவர் - தேவஸ்தான கமிட்டியின் தலைவரானதும், தமது பொறுப்புணர்ந்து கமிட்டிக்குட்பட்ட பல கோவில்களை புணரமைத்தார். மகனின் செயல்பாடுகளினால் உள்ளம் குளிந்தார் வெங்கட்டர். காலியாகிவிடுவானோ என்று பயந்த மகன் இவ்வளைவு பொறுப்பானவனாக மாறியதைப் பார்த்தால் எந்த தந்தைக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.

கோவில் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில் நிலங்களின் குத்தகைத் தொகையை ஏற்றினார். கோவிலுக்குப் பழுது வராமல் புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளை தொய்வின்றி செய்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் போது கடனிலிருந்த கமிட்டியை தலை நிமிரச் செய்தார். பல ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டு அப்பதவிகளில் இருந்து நீங்கும் போது சுமார் நாற்பத்தியையாயிரம் ரூபாய் தேவஸ்தான கமிட்டிக்கு என சேர்த்து வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் நாற்பத்தியையாரம் ரூபாயெனில் இன்றைய மதிப்புக்கு கற்பனை செய்து கொள்ளவும்.

இந்த சமயத்தில்தான் ஈரோடு நகர பாதுகாப்புக் கழகத் தலைவராகவும் ஆனார். 1919ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் வரையிலும் சேர்மன் பதவியில் இருந்தார். அதற்கு முன் கௌரவ நீதிபதி, தாலுக்கா போர்டு உபதலைவர், வியாபாரிகள் சங்கத் தலைவர், ஜில்லா போர்டு மெம்பர் என பல பதவிகளை வகித்தாலும் ஈ.வெ.ரா ஈரோடு நகராட்சித்தலைவராக இருந்து ஆற்றியுள்ள சேவையே நேரடி அரசியலில் இறங்குவதற்கு முன்பான அவரது வாழ்வில் அதிகபட்ச புகழை பெற்றுத்தந்தது.

(தொடரும்)

February 12th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார்.

நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள்.

வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார்.

மொட்டைத் தலையில் கொஞ்சமாய் முடி வளர ஆரம்பித்த நிலையில் இருந்த ராமசாமி கதவைத்திறந்தார். அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நிற்க, வெங்கட்டரோ.. ‘பிள்ளைவாள் இருக்காரா.., எங்கே என் பிள்ளை.. பிள்ளைவாள்.. பிள்ளைவாள்..’ என்று சத்தம் கொடுத்தபடியே ராமசாமியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்பிரமணியத்துக்கும்

வெங்கட்டரைப் பார்த்ததும் மர்மாக இருந்தது. ‘வாங்க..வாங்க..’ என்று வாய் வரவேற்றாலும் மனதில் குழப்பங்கள் அதிகமானது. யார் சொல்லி வந்திருப்பார்? ராமசாமி இங்கிருப்பது எப்படி இவருக்கு தெரியும்? தான் தகவல் கொடுத்ததாக ராமசாமி தன்னை தவறாக நினைப்பாரோ? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

‘உட்காருவது இருக்கட்டும்.. மொதல்ல என் பையன் ராமசாமி இங்கிருக்கான்னு தகவல் கிடைச்சதே.. அவனைக் கூப்பிடுங்கோ.. நான் பார்க்கனும்..’

சுப்பிரமணியத்துக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அவரின் அருகிலேயே தலை குனிந்து நிற்கும் மகனை அடையாளம் காணமுடியாதவராக வெங்கட்டர் இருந்தார். இவர்கள் இருவரின் அமைதி வெங்கட்டருக்கு சற்று எரிச்சலைத் தந்தாலும், வெளிக்காட்டாமல், ‘பிள்ளைவாள்.. பையனை கூப்பிடுங்கோ.. அவனைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.. இப்படியே அமைதியா இருந்தா எப்படி..? ராமசாமீ.. ராமசாமீ.., வெளியில வாப்பா..” என்று குரல் கொடுத்தார் வெங்கட்டர்.

சுப்பிரமணியம் ராமசாமியின் முகத்தைப் பார்த்தார். இனிமேலும் அமையாக நிற்பது சரியல்ல என்று முடிவு செய்த ராமசாமி ஒரு அடி முன் வந்து நின்றார். இவர்களின் செயல்கள் வெங்கட்டருக்கு விளங்க வில்லை. ‘நைனா.. நான் தான் நைனா..’ என்று ராமசாமி.. சொன்னது தான் தாமதம்.. வெங்கட்டருக்கு குரல் அடையாளம் தெரிந்தது. அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் கண்ணீராக வெளிவந்தது. ஆசையாக மகனை இறுக்கித் தழுவிக்கொண்டார். தந்தையின் பாசமும், கண்ணீரும் ராமசாமியின் கண்களையும் ஈரமாக்கியது.

தந்தையும் மகனும் இணைந்தது சுப்பிரமணியத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. வெங்கட்டரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று அமர வைத்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.


பெரியார் சில சம்பவங்கள்…

குத்தூசி குருசாமி விடுதலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். பெரியாரிடம் வந்தார் குத்தூசி, ‘அய்யா.. இன்னைக்கு செய்தி போடுவதற்கு ஏதும் சிறப்பான செய்தி இல்லையே என்ன செய்யலாம்? என்று கேட்டாராம்.

‘இவ்வளவு தானா… காலையில வந்த ‘இந்து’ பத்திரைக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எது எல்லாம் சரி என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் அனைத்தும் தவறு என்று பதில் எழுதுங்கள். எது எல்லாம் தவறு என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் எல்லாம் சரி என்று பதில் கட்டுரை எழுதுங்கள்.’ என்றாராம் பெரியார்.

அடுத்த நாளே கிளம்புவது என்பது வெங்கட்டரின் எண்ணம், ஆனால் சுப்பிரமணியோ சில நாட்கள் தங்கிவிட்டுப் போகும் படி வேண்டிக் கொண்டார். ராமசாமியின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அப்போது தான் ஐத்ராபாத்தில் இருக்கும் நகைகளை வர வைக்க முடியும். அப்பாவையும், உடன் வந்தவர்களையும் படுக்க வைத்து விட்டு, சுப்பிரமணியத்திடம் வந்து ஐத்ராபாத் முருகேச முதலியாருக்கு தந்தி கொடுத்து தாம் கொடுத்துவிட்டுப் போன நகைகளை அனுப்பி வைக்கும் படி ஒரு தந்தி அனுப்பச் சொன்னார்.

சுப்பிரமணியமும் அதன் படி செய்ய, முருகேச முதலியார் தன் வேலையாள் மூலம் நகைகளை ஒரு பெட்டியில் போட்டு கொடுத்து அனுப்பினார். அந்த நகைப்பெட்டியை வெங்கட்டரிடம் கொண்டுவந்து கொடுத்தார் ராமசாமி.

இத்தனை நாட்களின் தம் மகன், நகைகளை விற்றுத்தான் ஊர்சுற்றி, சாப்பிட்டு இருப்பான் என்று நினைத்துக்கொண்டிருந்த வெங்கட்டருக்கு நகைகளைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது.

‘ராமசாமி… என்னப்பா.. இது.. நகை எல்லாம் அப்படியே இருக்கு போலிருக்கே…, அப்ப இத்தனை நாள் சாப்பாட்டுக்கு என்னப்பா செய்தாய்?’ என்று கேட்டார் வெங்கட்டர். ‘ஈரோட்டில் நீங்கள் போட்ட அன்ன தானங்களை எல்லாம் காசியில் வசூலித்தேன் அப்பா’ என சிரித்த படியே விளக்கிச் சொன்னார் ராமசாமி. காசியில் அவர் செய்திருந்த கலாட்டாக்களைக் கேட்ட எல்லோரும் சிரித்தனர். வெங்கட்டருக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், ராமசாமி பட்ட துயரங்களை நினைத்தால் துக்கமாக இருந்தது.

எல்லா நகைகளையும் திரும்பக்கொடுத்து அணிந்துகொள்ளச்சொன்னார் வெங்கட்டர். ராமசாமியோ மறுந்தார். நகைகளை விற்றுத்தான் இத்தனை நாள் சாப்பிடிருப்பான் என்று ஊரில் இருக்கும் மற்றவர்கள் கருதாமல் இருக்கவாவது நகைகளை அணிந்துகொள் என்று வற்புறுத்தி அணிந்து கொள்ளச் சொன்னார். வெங்கட்டரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு, நகைகளை அணிந்துகொண்டார் ராமசாமி.

எல்லோரும் எல்லூரை விட்டு சென்னை வழியாக ஈரோடு வந்து சேர்ந்தார்கள். வீட்டில் ஏக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. வந்திறங்கிய சில தினங்களிலேயே ராமசாமிக்கு பொறுப்பு வரவேண்டும் எனில் ஏதாவது பெரிய பொறுப்பு கொடுக்க எண்ணினார் வெங்கட்டர்.

சின்னதாய்யம்மையாரிடம் கலந்து பேசி, ‘வெங்கட்ட நாயக்கர் மண்டி’ என்றிருந்த பெயரை ‘ஈ.வெ.ராமசாமி மண்டி’ என்று பெயர் மாற்றி, கடையின் சாவியை ராமசாமியின் கையில் ஒப்படைத்தார் வெங்கட்டர்.


ஈ.வெ.ரா.வின் தனித்துவமாக உருப்பெற்றது அப்போது தான். கடைப் பொறுப்புக்கு வந்த பின் ஈ.வெ.ரா.வின் போக்கில் நிறைய மாற்றம் கண்டார் வெங்கட்டர். மண்டியை மகனுக்கு கொடுத்து விட்டாலும் தினமும் மண்டிக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வெங்கட்டர். வியாபாரத்தில் ஈ.வெ.ரா.வின் நுட்பம் கண்டு வியந்தார்.

ஈ.வெ.ரா. பொறுப்பு ஏற்றபின் வியாபாரம் முன்பை விட சூடு பிடிக்கத்தொடங்கி இருந்தது. தோற்றத்திலும் ஈ.வெ.ரா மாறிப் போயிருந்தார். முறுக்கிவிட்ட மீசையும், தலையும் தலைப்பாகையுமாய் பணக்கார வியாபாரிகளுக்கான அடையாளத்திலிருந்தார். புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள். எல்லோரின் கணக்கு களையும் வெங்கட்டர் போல, தனி நோட்டு போட்டு எழுதாமல், துண்டுத் துண்டான காகிதங்களை- லேயே எழுதி வைத்திருந்தார் ஈ.வெ.ரா. அவரவர்க்கான கணக்கு பார்க்கும் போது சிரமமின்றி துண்டு காகிதத்தை எடுத்து சரி பார்த்துக்கொண்டார். கணக்கு நேர் செய்பப்பட்டவுடன் வாடிக்கையாளரின் முன்னாலேயே அவரின் கணக்குத் துண்டுப் பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார்.

வியாபரம், தன் குடும்பம் என்று மட்டும் இருந்து விடாமல். ஊரின் விசயங்களிலும் அக்கரை காட்டினார் ஈ.வெ.ரா. அவரின் சமயோசிதம், வழக்குகளில் சரியான தீர்ப்பு வழங்கும் முறையால்.. அவரின் புகழ் பரவத்தொடங்கியது. ஒரு வியாபாரியாக மட்டுமல்லாது, சமூக அக்கரையுள்ள மனிதனாகவும் அறியப்பட்டார்.

மகனின் வளர்ச்சி கண்டு பூரித்துப் போன வெங்கட்டர், இனி நிம்மதியாக ஆன்மீகத்தில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தவராய்.., மண்டிப் பக்கம் வருவதை குறைத்து, பூஜை, பஜனை என்று ஈடுபடலானார்.

(தொடரும்)

January 28th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை.

ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம்
எழுதினார் வெங்கட்டர். இவர் எதிர் பார்த்தபடி பதில் சாதகமாக வரவில்லை. அந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகும் செல்வந்தர் பலருக்கும் போக்கிடமாக இருந்தது இரண்டு இடங்கள். ஒன்று டிராமாகக் கம்பெனி, இன்னொருன்று தாசிகள் வீடு. அதையும் விட்டு வைக்க வில்லை வெங்கட்டர். ஒவ்வொரு டிராமாக் கம்பெனியாக அலைந்தார். தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி தாசி வீடுகளில் சோதனை போனச்சொன்னார். எங்கும் ராமசாமி சிக்கவில்லை.

ராமசாமி அங்கு வந்திருக்கிறானா.. எனக்கு அவன் மீது கோபம் இல்லையென கூறுங்கள் என்று ஈரோட்டுக்கு வெளியே இருக்கும் பல மைனர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் எங்கிருந்தும் இவர் எதிர் பார்த்த பதில் இல்லை.

அனா கணக்கில் காசு புழங்கிய அக்காலத்தியேயே ராமசாமியைத் தேடி சுமார் இரண்டாயிரம் ரூபாய் வரையும் செலவளித்தார் வெங்கட்டர். ஆனால் அனைத்தும் பட்ட மரத்திற்கு விட்ட நீராகி விட்டது. இனி பையன் எங்கும் கிடைக்க மாட்டான். ஒரு பையனை இழந்தோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் குடும்பத்தினர்.

பெயருக்கு அப்படியான முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஈ.வெ.ரா.வைப் பற்றி பேசாத நாளே இல்லை எனலாம். கடைக்கு வந்து போகும் அனைத்து வியாபாரிகளிடமும் பையனைப் பற்றிய தகவல்களை சொல்லிக்கொண்டே இருந்தார் வெங்கட்டர்.

****

பெரியார் சில சம்பவங்கள்…

பெரியாரை வடலூரில் இருக்கும் வள்ளலாரின் வாழ்விடத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள். நடக்கவே சிரமப்பட்டு தட்டுத் தடுமாறி ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி வந்தார் பெரியார். அம்மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியபடி ஊரன் அடிகளும் மற்றவர்களும் உடன் வருகிறார்கள். ஒரு பிரதான அறைக்குள் மற்றவர்கள் நுழைய, வாசலிலேயே நின்று விடுகிறார் ஈ.வெ.ரா.

உடன் நடந்து கொண்டிருந்தவர்களுக்கு குழப்பம். ஏன் நின்றுவிட்டார்.. காரணத்தை ஈ.வெ.ராவிடமே கேட்க, அந்த அறையின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பினைக் காட்டுகிறார் பெரியார்.

அதில் கொலை,புலை, தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம் என்று எழுதி இருக்கிறது.

பெரியாரோ சுத்த அசைவம். அறிவிப்பை மீறி எப்படி உள்ளே போக முடியும்?! ஊரன் அடிகளோ கட்டாயப்படுத்தி, ”பரவாயில்லை. நீங்கள் வாருங்கள். உங்கள் மீது எங்களுக்கு
மிகுந்த மரியாதை உண்டு” என்கிறார்.

”உண்மைதான் .. அதைப் போலவே நீங்கள் வைத்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளையும், நான் மதித்தால் அல்லவா, நீங்கள் எனது கருத்துக்கள் மீதும் மரியாதை வைப்பீர்கள்? மற்றவர்கள் உங்களிடம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்களோ… அப்படி நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம். வாங்கய்யா.. மற்ற பகுதிகளைப் பார்ப்போம்..” என்று அவரின் அழைப்பையும் மீறி திரும்பி நடக்கலானார் ஈ.வே.ரா.

எல்லூரில் ராமசாமி இறங்கிய போது இரவு நேரமாகி விட்டது. சுப்பிரமணிய பிள்ளையின் சரியான விலாசமும் கையில் இல்லை. ஈரோட்டில் மராமத்து இலாக்காவில் பணியாற்றியவர் என்ற தகவலும், அவரது அடையாளமும் தவிர வேறு ஏதும் தெரியாது. ரயில் நிலையத்தில் சிலரிடம் இதை கூறி விசாரித்தார். உருப்படியான பதில் கிடைக்க வில்லை.

கால் போன போக்கில் அப்படியே நகரத்துக்குள் வந்தார். எதிர் பட்ட தமிழர்கள் சிலரிடம் விசாரித்த போது அவரது வீட்டு விலாசம் தெரிந்தது, சுப்பிரமனியம் வீட்டை நோக்கி நடக்கலானார் ஈ.வே. ராமசாமி.

நேரம் நள்ளிரவை தொட்டுக்கொண்டிருந்தது. வீட்டை அடையாளம் கண்டு, கதவைத் தட்டினார். ‘எவரூ..’ என்று சத்தம் வந்ததே ஒழிய கதவு திறக்கப்படவில்லை. ‘ஈரோட்டு ராமசாமி வந்திருக்கேன்’ என்று இவரும் தெலுங்கில் சொன்னபிறகு கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த சுப்பிரமணியத்துக்கு, உடல் மெலிந்து, மொட்டைத் தலையுடன் இருக்கும் ராமசாமியை அடையாளம் தெரியவில்லை. ‘நீங்க..’ என்று வார்த்தையை அவர் இழுத்தார். தன்னை அடையாளம் தெரியாமல் தான் சுப்பிரமணியம்
குழம்புகிறார் என்றுணர்ந்த ஈ.வெ.ரா, தன்னை விபரமாக அறிமுகம் செய்து கொண்டார்.

நம்பவே முடியாமல் அவரை கூர்ந்து நோக்கியதும், முகம் பிடிபட்டது. மகிழ்ந்து போன சுப்பிரமணியம் ராமசாமியை வீட்டுக்குள் அழைத்து உபசரித்தார். மாற்று உடைகளை கொடுத்து ஆண்டிக் கோலத்தில் இருந்து விடுதலையாக்கினார். நடுநிசியிலும் ராமசாமிக்காக அவசர அவசரமாக உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

தந்தையோடு கோபம் கொண்டு தான் வீட்டை விட்டு ஓடிப் போனது தொடங்கி, மோதிரத்தை விற்று எல்லூர் வந்து சேர்ந்தது வரை எல்லா கதைகளையும் சுப்பிரமணியத்திடம் கூறினார்.

வியந்து போன அவர், ‘அப்பாவுக்கு தகவல் கொடுத்திடலாமா’ என்று கேட்க, ‘அப்படி
செய்வதாக இருந்தால் தான் மீண்டும் ஓடிவிடுவேன். உங்களுக்கு தொல்லையில்லை எனில் என்னை தங்க வைத்திருங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் ஈ.வே.ரா. தான் யாருக்கும் தகவல் கொடுக்க மாட்டேன் என்று சுப்பிரமணியமும் உறுதியளித்தார். அவர் வீட்டிலேயே விருந்தினராக தங்கிக்கொண்டார் ராமசாமி.

எத்தனை நாட்களுக்குத்தான் சும்மா உண்டு, உறங்கி, கதை பேசியே நாட்களை கழிக்க முடியும். ஒரு மாதம் தங்கியாகிவிட்டது. ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் காலாற நடக்கலானார் ராமசாமி. மார்க்கெட் பக்கம் வந்ததும், பழைய வியாபர உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு கடையாகப் போய் பொருட்களின் விலை கேட்டு, அதன் தரம் பார்த்தபடியே நடக்கலானார்.

ஒரு விடுமுறை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, வேலையாள் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சுப்பிரமணியமும், ஈ.வெ.ரா.வும் மார்க்கெட் பக்கம் போனார்கள். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராமசாமி அடுத்த கடைக்கு போனார். அது ஒரு எள் கடை. அங்கே ஒருவர் எள்ளை அளந்து கொண்டிருந்தார். ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து இரண்டு கையாளும் கசக்கி நுகர்ந்து பார்த்தார் ராமசாமி. அளந்து கொண்டிருந்தவரிடம் எள்ளின் விலையை விசாரித்தார். அவர் விலை சொன்னதும் கையில் எடுத்த எள்ளை அப்படியே போட்டு விட்டு சென்றுவிட்டார். அது எள் வியாபாரியான ஸ்ரீராமுலு என்பவருடையது. அவருக்கு எள்ளின் தரம் பார்த்து, விலை கேட்டுச் சென்ற நபர் பெரிய வியாபரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டார். கடையை விட்டு வெளியே வந்தௌ ராமசாமி எங்கே போகிறார் என்பதை நோட்டம் விட்டார். ராமசாமி அடுத்த கடைக்குள் போன சிறிது நேரத்தில் சுப்பிரமணியமுடன் வெளியே வந்தார். பின்னடியே பொருட்களை சுமந்தபடி வேலையாள்.

ஸ்ரீராமுலு, அவர்களின் பின்னால் போய்க் கொண்டிருந்த வேலையாளை நிறுத்தி ராமசாமியைப் பற்றி விசாரிக்க, ஈரோட்டு வெங்கட்ட நாயக்கர் மகன் இவர் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஸ்ரீராமுலுவால் பொறுக்க முடியவில்லை. எத்தனை முறை நான் ஈரோட்டுக்கு சென்று வெங்கட்டரிடம் வியாபரம் செய்திருப்பேன். ஆனால் அவரின் மகன் என் கடையில் பொருள் வாங்காமல் வேறு எங்கெல்லாமோ வாங்கிப் போகிறார். அன்றைய தினமே, ”உங்கள் மகன் என் கடைக்கு வந்து எள்ளை எடுத்துப் பார்த்து, விலை கேட்டு, வேறு எங்கேயே வாங்கிவிட்டுப் போகிறார். விலை படியவிஒல்லை என்றால் சொல்ல வேண்டியது தானே.. நான் குறைத்திருக்க மாட்டேனா… எத்தனை முறை உங்களிடம் வணிகம் செய்திருப்பேன். நாணயம் குறைவாக நடந்துகொண்டதுண்டா..நான்! தங்கள் மகனுக்கு கடிதம் எழுதுங்கள்.. என்னிடமும் வந்து வணிகம் செய்யுமாறு எழுதுங்கள்” என்று ஒரு கடிதத்தை எழுதி வெங்கட்டருக்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீராமுலு.

கடிதம் பார்த்த வெங்கட்டர் நம்முடியாமல் கடிதத்தை மீண்டும் மீண்டும் பல முறை
வாசித்தார். வீட்டில் எல்லோருக்கும் தகவலைச் சொன்னார். குடுப்பத்தினர் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது. இனி கிடைக்கவே கிடைக்காது என்று முடிவு செய்து விட்ட ஒரு அவசியமான பொருள் திரும்பக் கிடைத்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுமோ, அது போல பலமடங்கு அதிகமான சந்தோசத்தில் துள்ளிக்குதித்தனர் குடும்பத்தினர். வெங்கட்டருக்கு இருப்பு கொள்ள வில்லை. உடனடியாக இருவரை உடன் அழைத்துக்கொண்டு ஸ்ரீராமுலுவைத் தேடி புறப்பட்டார்.

ராமசாமி வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தால் என்ன செய்வது, அதனாலேயே இருவரை அழைத்துக்கொண்டார். மாலை வேளையில் ஸ்ரீராமுலுவின் கடைக்குப் போய் சேர்ந்தார். அவரிடம் விபரம் பெற்றுக்கொண்டு, சுப்பிரமணிய பிள்ளையின் முகவரியையும் பெற்றுக்கொண்டு, அவர் வீடு நோக்கி புறப்பட்டனர்.

(தொடரும்)