விடுபட்டவை 03 ஜூன் 2008
இன்று சென்னையின் அனேக இடங்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலும் (இதை இடையில் தடை பண்ணியதாக நினைவு!), ஸ்பீக்கர் பாக்ஸ்களிலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக கழக பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. “கட்டு கட்டா கள்ளப் பணம் வச்சிருக்குற கும்பல் இது, அத்தனையும் அள்ளிவிட்டு, ஓட்டு கேட்டு வீடு தேடி வருவாங்க.. விரட்டியடிங்க…” என்றும், ”உப்புக் கருவாடும், ஊறவச்ச சோறும் கூட கிடைக்கலையே எனக்கு.. கொள்ளை கொள்ளையா பணத்தை சேர்க்குறியே ஒனக்கு!” என்றும் ஆளும் அரசை விமர்சிக்கின்ற பாடல்கள். கொஞ்சம் நின்று கவனித்தால் தான் தெரியும் இவை கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியின் போது அ.தி.மு.க அரசை விமர்சித்து எழுதப்பட்டவைகள் என்று! இல்லாவிட்டால்.. நடப்பு அரசுக்கும் பொருந்துகின்ற மாதிரித்தான் இருக்கிறது வரிகள்.
இதை எல்லாம் விட காமெடி, கருணாநிதி என்றோ.. பேசிய பேச்சுக்களையும் பல இடங்களில் ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்கள். ஒரு இடத்தில், ”…மானங்கெட்ட இந்த காங்கிரஸ்காரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்..” என்று காங்கிரசை விளாசிக்கொண்டிருந்தார். :))
(இப்போது தி.மு.க காங்கிரசுடன் கூட்டனியில் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்)
-OoO-
1975 ஜூன் 25 ல் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட எமெர்ஜென்சி காலத்தை பற்றி ஒரு மூத்த பத்திரிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறிய பல சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. அப்போது அவர் பள்ளி மாணவனாக இருந்தாராம். அவரோடு பேசியதில் அன்றைய நிலை குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. 1975ல் நன்கு விபரம் தெரிந்த வயதில் இருந்த பதிவர்கள்.. அப்போது நெருக்கடி நிலையை தமிழக மக்கள் எப்படி உணர்ந்தார்கள்.. எதிர்கொண்டார்கள். என்னென்ன அடக்குமுறைகள் இங்கு நிகழ்தது என்பதை எழுதலாம். என் போன்ற விபரம் தெரியாத பலருக்கும் அது உபயோகமானதாக இருக்கும். அச்சமயம் தமிழக சூழல் குறித்து சரியான பதிவுகள் இல்லை என்றே நினைக்கிறேன்.
-oOo-
விழுப்புரம் பயிரலங்கு போய் இருந்த போது தூரிகா வெங்கடேஷ் கூகிள் ரீடர் பற்றிய வகுப்பு எடுத்தார். அதில் ஒருவரின் பதிவுகள் எவ்வளவு பேரால்.. சேர்க்கப்பட்டிருக்குன்னு பார்க்க முடியும்னு சொன்னார். சரி.. நம்ப பதிவை எத்தன பேரு ரீடர் மூலம் படிக்கிறாங்கன்னு சோதிச்சுப் பார்த்தேன். http://blog.balabharathi.net/feed/ (இது தான் சரியான ஃபீட்) என்ற முகவரியில் 29 பேரும்! http://blog.balabharathi.net/ என்ற முகவரியில் 9 பேரும் இருந்தாங்க! ஆக.. 38 பேர் என் பதிவையும் பார்க்கிறார்கள் என்ற போது கொஞ்சம் மகிழ்ச்சி வரத்தான் செய்தது.
உண்மையில் எல்லோரும் இந்த தின குறிப்புகள் நல்லா இருக்குன்னு சொல்லும் போது கொஞ்சம் பயம் வருது. ஒரே மாதிரியே எழுதனுமேன்னு. யாருக்காகவும் நான் இதை எழுத வில்லை. என் மன ஆறுதலுக்காகவே எழுதுகிறேன்னு சொல்லிகிட்டு எழுத வேண்டியதிருக்கு. அதனால.. சுவாரஸ்யம் இல்லைன்னு யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க!
எனக்கு நேரமும், மனசும் ஒத்துழைச்சா.. தினம் என் எண்ணங்களை பதிவு செய்து கிட்டே இருப்பேன். பின்னூட்டங்கள் இல்லைன்னாலும் கூட எழுதிகிட்டே இருப்பேன்!
-OoO-
என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கமும் ஒருவர். அவரின் சிறுகதைகளும் கட்டுரைகளும் மிகவும் பிடிக்கும். அது போல எல்லாம் என்னால எழுதமுடியுமான்னு தெரியலை. அவரின் 77 சிறுகதை கொண்ட தொகுப்பின் மின்னூல் வடிவம் நூலகம். டாட் காமில் கிடைக்கிறது. அதன் சுட்டி இதோ!
-oOo-







