அபூவின் செல்லக்குட்டி – புதிய சிறார்நாவல்

விரைவில்..
Posted in சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை | Tagged , , , | Leave a comment

அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை

“எங்கே இருந்து கிடைச்சுச்சுடா…?” என்று கேட்டான் தமிழ்ச்செல்வன்.

இடம் : தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம்.

“நாங்க குடி இருக்கிற வீட்டு மாடியிலடா…!” என்று கூறும்போதே அப்துல்லாவின் குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது.

“எப்படிடா கிடைச்சது..?”

“மாடியில காயப்போட்ட துணிகளை எடுத்து வந்துடுன்னு சொல்லிவிட்டு, எங்க அம்மா வீட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மாடிக்குப் போனேன். அங்கே காக்கைகள் கூட்டமாக அமர்ந்து, ‘கா..கா..’ன்னு கரைஞ்சுகிட்டு இருந்துச்சு. என்னடான்னு பார்த்தேன். ரெண்டு கிளிக் குஞ்சுகளை அதுங்க கூட்டமாகச் சேர்ந்து கொத்திக்கிட்டு இருந்துச்சுங்க. நான் ஓடிப்போய், ஒரு துணியை எடுத்து, காக்கைகளை விரட்டி அடிச்சேன்” என்று தனது சாகசத்தைச் சொன்னான்.

“ம்! அப்புறம்?” 

“யாருக்கும் தெரியாம அந்த ரெண்டு கிளிகளையும் அட்டைப் பெட்டிக்குள்ள போட்டு, மாடிப்படிக்குப் பக்கத்திலேயே ஒளிச்சு வச்சிருக்கேன்.”

“மூச்சு முட்டாது?”

“அதெல்லாம் ஆவாதுடா… அட்டைப்பெட்டியில் சின்னச் சின்னதா ஓட்டைகள் போட்டிருக்கேன்!”

“எனக்கு ஒண்ணு குடுடா!” என்று கேட்டான் ஹரிஹரன்.

“இருடா அவசரப்படாதே… அது எப்படியும் குஞ்சு பொரிக்கும். அப்ப உனக்குத் தாரேன்.”

“அப்ப எனக்கு?”

“எனக்கும் ஒண்ணுடா?”

“எல்லாருக்குமே தருவேன்டா..” என்றான் அப்துல்லா.

விளையாட்டு வகுப்பு முடிந்து, அடுத்த பாடவேளைக்கு வகுப்பறைக்குள் வந்தும்கூட அவனது மனம் அந்தக் கிளிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

பள்ளி விட்டதும் முதல் ஆளாய் பாய்ந்து வெளியில் வந்தான் அப்துல்லா. ஓட்டமாய் ஓடித் தன் வீட்டை அடைந்தபோது, கதவு சாத்தி இருந்தது. உள்ளே அம்மா இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டவன், புத்தகப் பையை வாசல் ஓரமாக வைத்துவிட்டு, இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மொட்டை மாடிக்கு ஓடினான்.

அங்கே இருந்த தட்டு முட்டு சாமன்களுக்குள் ஒளித்துவைத்த அட்டைப்பெட்டியைத் தேடினான்; அதைக் காணவில்லை.

சுற்றும் முற்றும் தேடினான்; எங்கும் கிடைக்கவில்லை. ஓடிவந்த களைப்பும் சோர்வும் சேர்ந்துகொள்ளப் பெட்டியை யார் எடுத்திருப்பார்கள் என்ற குழப்பத்துடன் கீழே இறங்கினான்.  வாசலில் வைத்த பையைத் தூக்கிக்கொண்டு, கதவைத் தட்டினான்.

அம்மா அசினா வந்து கதவைத் திறந்தார். இவனது முகத்தைக் கண்டு, “ஏண்டா மூஞ்சி என்னவோபோல இருக்கு?” என்று கேட்டார்.

இவன் பதில் ஏதும் சொல்லவில்லை. மனத்தில் கிளிகள் நிறைந்திருந்தன. வகுப்பு நண்பர்களின் முகங்களும் வந்து வந்து போயின.

“சொல்லுடா!” என்று அம்மா, அன்பாக அவனது தலையை வருடிக்கொடுத்ததும் அடைத்துக்கொண்டிருந்த துக்கம் அழுகையாய் வெடித்தது.

அழுதுகொண்டே கிளிகளைப் பற்றிச் சொன்னான். அம்மா அசினா, அறைக்குள் சென்று அந்த அட்டைப் பெட்டியை எடுத்து வந்தார்.

“இந்தப் பெட்டிதானே?” என்று நீட்டினார்.

கண்களைத் துடைத்துக்கொண்டு, அட்டைப் பெட்டியை மிகுந்த ஆர்வத்துடன் பறித்து, திறந்து பார்த்தான்.

காலில் நூல் கட்டப்பட்டிருந்த கிளிகள் காயம்பட்ட தன் சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டன.

“இந்தக் கிளிகள என்ன செய்யப்போற?”

“காயத்துக்கு மருந்து போட்டு, நாமே வளர்ப்போமா?  ஒரு கூண்டு வாங்கிக் கொடுத்துடுங்கம்மா!”

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அதைப் பறக்க விட்டுவிடு.”

“மாட்டேன். நான்தான் வளர்ப்பேன்.”

“உனக்கு விமலா டீச்சரைப் பிடிக்கும்தானே? கிளிகளை என்ன செய்யறதுன்னு அவங்கக்கிட்டயே கேப்போம்” என்ற அம்மா, அப்துல்லாவின் வகுப்பு ஆசிரியர் விமலாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அவரிடம் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னார் அசினா.

“இந்தாடா! உங்கள் டீச்சர் உன்கிட்டயே பேசுகிறார்களாம்!” என்று மொபைலை இவனிடம் நீட்டினார் அம்மா.

“ஹல்லோ டீச்சர்.”

“இந்த பாரு தம்பி, பறவைகள் சுதந்திரமாகப் பறக்க வேண்டியவை. அவற்றைக் கூண்டில் அடைச்சு வளக்குறது தப்பு. அப்படிச் செய்யக்கூடாதுன்னு சட்டமே இருக்கு.”

“யாருக்கும் தெரியாமல் வளர்க்கலாமே!”

“நல்லா படிக்கிற பையன் பேசுகிற பேச்சா இது? தப்புடா தம்பி! சட்டம் கூடாதென்று சொல்லுறப்போ, அதை மீறி நாம எதையும் செய்யக்கூடாது. அதுமட்டுமில்ல, இது இயற்கைக்கு எதிரானதும் கூட!”

“அப்படியென்றால்?”

“மீன் தரையில் வாழுமா? மனுசன் தண்ணீருக்குள்ள வாழ்வானா? முடியாதில்லையா? அது மாதிரி, பறவைகளும் பறந்து வாழவேண்டியவையே.”

“அப்ப, இதை என்ன செய்வது டீச்சர்?”

“வன இலாக்காவின் எண் வாங்கியோ அல்லது ப்ளூ கிராஸ் எண் வாங்கியோ அவங்களுக்குச் சொல்லிடு. காயம் பட்ட கிளிகளை அவங்களே வந்து வாங்கிட்டு போய் மருந்து போட்டுக் காப்பாற்றி, சுதந்திரமாகப் பறக்க விடுவாங்க” என்றார் ஆசிரியர் சத்யா.

===

மூன்று வாரங்களுக்குப் பின் அப்துல்லா மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தான். அருகிலிருந்த வேப்ப மரத்தில் கிளிகள் கூட்டமாக வந்து அமர்ந்தன. அவற்றில் இரண்டு கிளிகள் இவனைப் பார்த்து ‘கீ..கீ.. கீ’ என்று பேசின. இவனுக்குத்தான் அவை அடையாளம் தெரியவில்லை.

  • தேன்சிட்டு -அக்டோபர் 2023 இதழில் வெளியான கதை

 +++++++++++++++

Posted in சிறுகதை, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை | Tagged , , , , , , | Leave a comment

பூரணம் -பெற்றோர் ஒன்றுகூடல்

பூரணம் அழைப்பிதழ்

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஈரோடு ஜெயபாரதி அம்மாவின் அழைப்பில் சித்தார்த்தா பள்ளிக்குச் சென்று சிறப்புக்குழந்தைகளின் பெற்றோரிடம் உரை நிகழ்த்தினேன்.

அக்கூட்டத்தில் பேசிய விஷயங்களில் ஒன்று சிறப்புத்தேவை உடைய பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதின் அவசியம் . அதன் தேவை குறித்தும் பேசிவிட்டுத் திரும்பினேன். அடுத்த சில மாதங்களிலேயே அங்கே பெற்றோரின் சங்கம் ஒன்று தொடங்கப்பட்ட து.

மாதம் ஒரு துறைசார் வல்லுநரை அழைத்துவந்து உரையாடவைப்பது என்று அவர்களின் செயல்பாடுகளின் தொடக்கமாக இருந்தது.

இதோ இப்போது மீண்டும் அதே பள்ளியில் பெற்றோரிடம் உரையாட அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆம்! இம்முறை நீங்கள் குடும்பத்துடன் வந்து உரையாடுங்கள். கனி பாட்டுப் பாடட்டும் என்று ஜெயபாரதி அம்மா அழைத்தபோது மறுக்கமுடியவில்லை.

எங்களைப் போலவே எங்கள் செல்வன் கனியின் வளர்ச்சியைக்கண்டு பூரிப்பவர் அவர். அழைப்பிதழில் கனியின் பெயரையும் போட்டுவிடுகிறோம் என்று அவர் சொன்னபோது எங்களால் மறுப்பேதும் சொல்லமுடியவில்லை.

வரும் டிசம்பர் 23ஆம் தேதி பூரணம் பெற்றோர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈரோடு பயணமாகிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். (அழைப்பிதழில் எண் உள்ளது)

நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் ஈரோட்டில் உள்ள சிறப்புத்தேவை உடைய குழந்தைகளின் பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

~~~~

தொடர்புடைய சுட்டிகள்:

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , | Leave a comment

ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- (ஜேக்கப் ராக்)

ஜேக்கப் இசை அமைப்பாளர் ராப் லாஃபர் உடன்
ஜேக்கப் இசை அமைப்பாளர் ராப் லாஃபர் உடன்

19 வயது ஜேக்கப் ராக், ஓர் ஆட்டிச நிலையாளர். இவரால் சிறு வயதில் பேச முடியாததால் அறிவுத்திறனில் குறைவானவர் என்றே மதிப்பிடப்பட்டார். அவரது குடும்பத்தினரின் தொடர் முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பின்னர் ஐ பேடில் தட்டச்சு செய்து, தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். எழுத்துப் பிழைகளோ இலக்கணப் பிழைகளோ இல்லாத கச்சிதமான வாக்கியங்களை ஜேக்கப் எழுதுவதைக் கண்டு வியந்தனர் அவரது பெற்றோர். தட்டச்சு செய்யக் கற்றக்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பின், ஒருநாள் தனது பெற்றோரிடம் ’தனது மனத்திற்குள் 70 நிமிடங்களுக்கான சிம்பொனி குறிப்பு ஒன்று’ இருப்பதாகத் தெரிவித்தார்.

அவரது பெற்றோர் ’ராப் லாஃபர்’ எனும் இசை அமைப்பாளரை அணுகினர். ஜேக்கப்பின் மனதில் இருந்த சிம்பொனிக்கு வடிவம் கொடுக்க உதவினார் ராப் லாஃபர். மறக்க இயாலத சூரிய உதயம் (Unforgettable Sun Rise) எனும் தலைப்பிலான அந்த சிம்பொனி 2023 செப்டம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இசையரங்கில் அரங்கேறியது.

“என் அறிவைக் காட்டவும், எனக்கான அடையாளத்தை உருவாக்கவும் முடிந்திருக்கிறது என்பது எனக்கு மிக மிக நிறைவைத் தருகிறது” என்கிறார் ஜேக்கப்.

“நீங்கள் இத்தனை நாளும் என்னை குறைத்தே மதிப்பிட்டு வந்தீர்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கவனித்துக் கொண்டும்தான் இருந்தேன். இதோ, இங்கு நான் இருக்கிறேன்” என்று அவன் உலகுக்குச் சொல்ல விரும்புகிறான் என்கிறார் ஜேக்கப்பின் தந்தை பால் ராக்.

“ஆம் பிள்ளைகளே… நாங்கள் உங்களை புரிந்துகொள்ளவே முயன்று வருகிறோம்” என்று எங்களுக்கும் சொல்லத்தோன்றுகிறது. இந்த துண்டு வீடியோ உங்கள் கண்களை ஈரமாக்கினால் நீங்களும் என் தோழனே…!

-யெஸ்.பாலபாரதி

Posted in AUTISM - ஆட்டிசம், தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , | 1 Comment

என்னை மன்னிப்பாயா நண்பா!


இருபது வயதுகளின் தொடக்கக் காலத்தில் எப்போதும் நண்பர்கள் குழுவுடனேயே சுற்றித்திரிவோம். அப்போது என் நெருக்கமாக இருந்த நண்பன் ராமகிருஷ்ணன். மிகவும் நல்லவன். தைரியசாலி. பிறக்கு உதவும் குணம் கொண்டவன். முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்கும் தன்னால் உதவும் குணம் கொண்டவன். எப்போதும் ஒன்றாகவே சுற்றுவோம். சின்ன ஊர் என்பதால் காலையில் விடிந்ததும் அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தேனிர் கடைக்குச் சென்றுவிடுவேன். அவனும் எழுந்து வந்துவிடுவான். பெரியதாக வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கவேண்டிய நெருக்கடி இல்லாத குடும்பப் பின்னணி எங்கள் இருவருக்கும் என்பதால் வேலைக் குறித்து எல்லாம் அலட்டிக்கொண்டதில்லை.

எங்கள் ஊரன ராமேஸ்வரம் பெரிய கோவிலுக்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான தூரம் என்பது 3 கிலோமீட்டர்களுக்குள் தான் இருக்கும். பேருந்து டிக்கெட்டின் விலை அப்போது 60 பைசாக்கள். திடீரென ஒருநாள் காலை 15 பைசாக்கள் உயர்ந்தி, 75 பைசா டிக்கெட் விலை என்று சொல்லிவிட்டனர்.

ராமகிருஷ்ணன் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது. கூடுதல் காசு இல்லை என ஒரு வயதான பாட்டியை, பேருந்தில் இருந்து நடத்துனர் கீழே இறக்கிவிட்டார். அந்தப் பாட்டி சத்தம்போட்டபடி அழுது புலம்ப, நானும் ராமகிருஷ்ணனும் என்னவென்று விசாரிக்கும் போதுதான் டிக்கெட்டின் விலை ஏற்றப்பட்ட தகவல் தெரிந்தது. “என்னடா இப்படிச் செய்யுறாய்ங்க?” என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, எங்களின் இன்னொரு நண்பனான செந்தில் வந்தான். நாங்கள் மூவரும் பேசி முடிவு செய்தோம்.

அப்போது நாங்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்னும் அமைப்பில் இருந்தோம். அதனால் உடனடியாகச் சாலை மறியல் செய்வது என்று முடிவெடுத்து, நான்கு முனைச் சந்திப்பான திட்டக்குடி என்னும் இடத்தில் நடுச்சாலையில் அமர்ந்து மறியல் செய்யத்தொடங்கிவிட்டாம். இருப்பதோ மூவர். உள்ளூர் ஆட்கள் வேடிக்கைப் பார்க்க, மேலும் சிலரைத் துணைக்கு அழைத்தோம். அந்தப் பாட்டி வந்து அமர்ந்துகொண்டார். அதற்குள் எந்தப் பக்கமும் வாகனங்கள் செல்லமுடியாமல் அவை வரிசைகட்டத்தொடங்கின.

மேலும் நண்பர்கள் வந்து சாரைச் சாரையாக வந்து அமர்ந்துகொண்டனர். போக்குவரத்துப் பணிமனையில் இருந்து அதிகாரி எல்லாம் வந்து பேசியும் நாங்கள் மசியவில்லை. அப்புறம் இராமநாதபுரத்திலிருந்து உதவி ஆட்சியாளர் ஒருவர் வந்து பேச்சு வார்த்தை நடத்தி, பழைய டிக்கெட் விலையே வசூலிக்கப்படும் என அவர் கொடுத்த உறுதியினால் எங்களின் அன்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்படி மக்களுக்கான பல போராட்டங்களில் உடன் நின்றவன் அவன். ஒரு சின்னச் சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போய் விட்டது.

எல்லா நண்பர்களின் பாஸ்போர்ட் படங்களையும் வாங்கிச் சேமித்து ஒரு ஆல்பம் தயாரித்துக்கோண்டிருந்தேன் நான். இன்றைய நாட்கள் போல அன்று புகைப்படங்களை நினைத்தபோது எடுத்துக்கொண்டு இருக்கமுடியாது. படம் பிடிக்க ஸ்டூடியோவுக்குச் செல்லவேண்டும். கருப்பு வெள்ளைப் படம் எடுக்க ஒரு விலையும், வண்ணப்படம் எடுக்க ஒரு விலையும் கொடுக்க வேண்டியதிருக்கும். அதனால் படம் எடுத்துக்கொடுப்பதற்கு ஒருவித சோம்பல் பலரிடமும் இருந்தது. அவர்களில் ஒருவன் ராமகிருஷ்ணன். அவன் படமே கொடுக்கவில்லை.

ஒருநாள் எனது ஆல்பத்தை அவனிடம் காட்டிக்கொண்டிருந்தேன். அதில் இருந்த எனது வண்ண பாஸ்போர்ட் படத்தை எடுத்து வைத்துக்கொண்டான். “உன் படம் கேட்டால் தரமாட்டாய், என் போட்டோவை மட்டும் நீ எடுத்துக்கொள்வாயா? திருப்பிக்கொடுடா..?” என்று நான் கேட்க, அவன் மறுக்க, அவனிடமிருந்து எனது புகைப்படத்தைத் திரும்பவும் எடுத்துக்கொள்ளும் போட்டியில் நாங்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டோம். சாலையில் போவோர் வந்து விலக்கி வைக்கும்படியான சண்டை.

ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து கசங்கிய நிலையில் எனது படத்தைப் பிடுங்கி, நானே கிழித்துபோட்டுவிட்டேன். அவனோ என் மூக்கில் ஓங்கிக் குத்த, சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கொண்டியது. அவன் கோபமாகச் சென்று விட்டான். நானும் திரும்பிவிட்டேன். அதன் பின்னர்ச் சில முறை அவனும் சில முறை நானும் பேசிக்கொள்ள முயன்றபோது முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டோம். அதன் பின்னர் நானும் ஊரைவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

இது நடந்து எப்படியும் ஒரு வெள்ளிவிழா காலம் கடந்திருக்கும். அற்பகாரணத்திற்காகப் போட்டுக்கொண்ட சண்டையை நினைத்தால் இன்றும் வருத்தமாக உள்ளது. அவன் அன்பைப் புரிந்துகொள்ள என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன். என்னை மன்னிப்பாயா நண்பா!

(அந்திமழை இதழில் எழுதியது)

Posted in Uncategorized | Leave a comment