சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக கைதட்டல் குழந்தைகளிடமிருந்து கலாமுக்கு கிடைத்தது. வழமைபோல கலாம் மேடையில் உறையாற்றும் போது குழந்தைகளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்சொன்னார். அது பெண் குழந்தைகளுக்கான பள்ளி என்பதால்.. உறுதிமொழியில் வரதட்சனை கொடுக்கமாட்டேன் போன்றவைகளும் இடம் பெற்றிருந்தது.
நேருவுக்கு பிறகு குழந்தைகளிடம் அதிகம் அன்பு காட்டும் தலைவர் இவர் தான். அதிகமாக பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை பார்த்து பேசுகிறார்- என்று அருகில் இருந்த ஒருவர் சொன்னார். நேரு காலம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்.. கலாம் ஜனாதி பதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது டெல்லியில் இருந்தேன். அதனால் கொஞ்சம் நெருக்கமாக அவரின் குழந்தைகள் அன்பு விசயத்தை பார்த்திருக்கிறேன். ஆனாலும் ஒரு நெருடல் இருக்கிறது. இதுவரை இவர் சென்று வந்த பள்ளிகளின் மொத்த எண்ணிக்கையில் பத்து சதம் கூட தேறாது.. அரசு பள்ளிக்கு அடித்த விசிட்! அத்தனையும் தனியார் பள்ளிகள் தாம். அப்போ.. அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள்… குழந்தைகள் இல்லையா?! கனவு காணவும் அதில் வெற்றி பெறவும் தனியார் பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதா..! 🙁
~~~~
என் வாகனம் புதிது என்பதால்.. 1500 கி.மீட்டர் வரைக்கும் 30 முதல் 40 கி.மீட்டருக்கு மேல் வேகம் கூடாது என்று சொல்லி அனுப்பினார்கள். அதற்கு மேல் வேகம் போனால் வாகனம் தினறுகிறது. சரி என்று நானும் அவர்கள் சொன்னவிதமே போனால்.. சைக்கிளில் போகிறவன் என்னை ஓவர் டேக் செய்து போகிறான். ஆட்டோக்காரன் கிண்டலாக சைடு கொடுத்து இம்சிக்கிறான். எவனையுமே கண்டுகொள்ளாமல் நான் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். லக்கி பலமுறை சொல்லி இருக்கிறான். சென்னை நகருக்குள் இரு சக்கரவாகனத்தின் வேகம் 40 கி.மீ. அதன் படி போனால் தேவையில்லாமல் எந்த சிக்னலிலும் காத்திருக்க வேண்டியதிருக்காது என்று. அது உண்மை தான். முப்பதிலிருந்து நாற்பதற்குள் போவதால் ரெட் சிக்னலில் மாட்டுக்கொள்வதில்லை. எங்காவது மாட்டிக்கொண்டாலும் கூட சில நிமிடங்களுக்கு மேல் காத்திருந்ததில்லை. சென்னைக்குள் பாதுகாப்பான பயணத்திற்கு இரு சக்கர ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வண்டி ஓட்டினால் நல்லது. என்ன சில நேரங்களில் கைக்கிளில் போகிறவரும் நடந்து போகிறவரும் நம்மைக் கடந்து போகக்கூடும். 🙂
~~~~
ஜே.கே ரித்தீஷ் நடித்த ‘நாயகன்’ பார்த்தேன். உண்மையில் படம் நன்றாக இருக்கிறது. நடிப்பதற்கு அவர் நன்றாக முயற்சி செய்கிறார். படத்தை ஜாலியாக ரசிக்க முடிகிறது. ராஜேந்தர், விஜயகாந்த், சரத், ரஜினி, கமல் போன்றவர்கள் எல்லாம் டூயட் பாடி ஆடும் போது நிச்சயம் ரித்தீஷும் ஆடலாம். கொஞ்சம் கொஞ்சமாக நான் ரித்தீஷின் ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.
~~~~
பதிவர் சந்திப்புக்கு நிறைய புதுப்பதிவர்கள் வந்திருந்தார்கள். நேரம் ஆறு மணி என்று குறிப்பிட்டிருந்ததாலோ என்னவோ.. நம்மவர்கள் கொஞ்சம் லேட்டாக வர இருட்டில் பலரின் முகம் மனதில் பதிவாகவே இல்லை. இனிமேல் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும் போதே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம். திடீரென சந்திப்புக்கு ஞாநி வந்தது.. தொடர்ந்து தமிழ்ப்பதிவுகளை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்பதைக்காட்டுகிறது. அவரைப் பற்றி நம்மவர்கள் எழுதும் பதிவுகளையும் படிப்பார் என்றே நம்புகிறேன்.
~~~~
8 Responses to விடுபட்டவை 05.10.08