மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 5]

மரப்பாச்சி சொன்ன அதன் கதையை எல்லாம் கேட்ட பிறகும் பூஜாவால் நம்ப முடியவில்லை. இமைகளை மூட மறந்து அப்படியே அமர்ந்திருந்தாள்.

“ஏய்… என்னடி… இப்படி உட்கார்ந்திருக்க…?” என்றபடியே பூஜாவின் தோள் தொட்டு உலுக்கினாள் ஷாலு.

“என்ன சொல்லுறதுன்னே தெரியலையேடி… இப்படி ஒரு மரப்பாச்சி பேசினால்… ஷாக் ஆகாம இருக்க முடியுமா?”

“ஹா…ஹா…” என்று சிரித்த மரப்பாச்சி, “பூஜா நீ இன்னும் ஷாலுவின் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே…? எதுவானாலும் சொல்லு. நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொன்னது.

“எப்படிச் சொல்லுறதுன்னு தெரியலை.”

“அந்தத் தாத்தாவைப் பத்தித்தானே பேசிக்கிட்டு இருந்தோம். அதுக்குல்ல மறந்துபோச்சா?” என்று கேட்டாள் ஷாலு.

“அதெல்லாம் இல்லடி… அந்தத் தாத்தா ரொம்ப மோசம்டி… கெட்டவரா இருக்காரு…” என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கியபடி.

“ஏன் என்னாச்சு..?” என்றது மரப்பாச்சி.

“தினமும் ஸ்கூல் வேனில் இருந்து இறங்கியதும், அவங்க வீட்டுக்குப் போய் ஸ்கூல்பேக்கை வச்சுட்டு, ஃப்ரஷ் ஆகிட்டு, டான்ஸ் கிளாஸோ, டியூசனோ எது இருக்கோ… அதுக்குக் கிளம்பிடுவேன்.”

“ம்”

“அப்படி அவங்க வீட்டுக்குப் போகும் போது, அந்தத் தாத்தா…” என்று பேசுவதை நிறுத்தினாள் பூஜா.

“சொல்லுடி..” என்று கேட்டாள் ஷாலு.

“அவங்க வீட்டுக்குப் போகும் போதெல்லாம் என்னைய கூப்பிட்டு, மடியில உட்கார வச்சி, இங்க, இங்கன்னு எல்லா இடத்துலையும் தொடுறார். எனக்கு வலிக்குது தாத்தா விடுங்கன்னு சொன்னாலும் விடமாட்டார். அவரைப் பார்த்தாவே பயமா இருக்கு…” என்று அவர் தொடும் இடங்களை எல்லாம் தொட்டுக்காட்டினாள் பூஜா.

“ஐயே.. அங்க எல்லாம் ஏன் தொடுறார்”

“யாருக்கு தெரியும். இறுக்கி பிடிச்சுக்குவார். அவர் பிடியில் இருந்து தப்பிக்கவும் முடியாது. இதை வெளியே யார் கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்கார்”

“அம்மாகிட்ட சொல்ல வேண்டியதுதானே?” என்று கேட்டது மரப்பாச்சி.

“அதுதான் அவர் சொல்லி இருக்காரே… யார்கிட்டயாச்சும் சொன்னா… என்னையத்தான் அடிப்பாங்களாம். ஸ்கூலுக்குக் கூட அனுப்பாம, வீட்டுக்குள்ளயே பூட்டி வச்சிடுவாங்கன்னு அந்தத் தாத்தாதான் சொல்லி இருக்காரே… அப்புறம் எப்படி அம்மாகிட்ட சொல்லுவேன். எனக்குப் பயமா இருக்கே…!” என்றாள் பூஜா.

என்ன பதில் சொல்வது என்று ஷாலுவுக்குத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் அங்கே மௌனம் நிலவியது.

மரப்பாச்சி, “சரி, நான் ஏதாவது சொல்லுறதுக்கு முன்னாடி, சில கேள்விகள் கேட்கிறேன். ரெண்டு பேரும் பதில் தெரிஞ்சா சொல்லுங்க” என்று பேச்சைத் தொடங்கியது. இருவரும் சரி எனத் தலையை ஆட்டினர்.

“நம்ம போடுற ட்ரஸுல ரெண்டு வகை இருக்கு தெரியுமா?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ‘தெரியவில்லை’ என்பது போல உதட்டைப் பிதுக்கினர்.

“அதாவது, வெளியாடை, உள்ளாடை அப்படின்னு ரெண்டு வகை இருக்கு. இல்லையா?

“ஆமா…”

“இந்த உள்ளாடைகள் மறைக்கிற பகுதிகள் அந்தரங்கமானது. நம்மைத்தவிர வேற யாரும் அங்கே தொடக்கூடாது. அது தப்பு. நம்மைக் குளிக்க வைக்கும்போது, அம்மாவோ, அப்பாவோ அங்கே தொடலாம். மற்ற நேரங்களில் யாரும் அந்தப் பகுதியைத் தொடக்கூடாது” என்றது மரப்பாச்சி.

“ஆனால்… நீ சொல்ற எல்லா இடத்துலையும் அந்தத் தாத்தா கை வைக்கிறாரே…?” என்று வருத்தமாகச் சொன்னாள் பூஜா.

“அப்படி… யாராச்சும்… அந்தரங்கமான இடத்தில் தொட்டால்… உடனடியா… நாம சத்தம் போட்டு கத்தனும்”

“கத்தனுமா?”

“ஆமா… ‘ப்ளீஸ் ஹெல்ப்…’ ‘காப்பாத்துங்க… காப்பாதுங்க’ன்னு சத்தம் போட்டு கத்தனும்.”

“அப்புறம்..”

“அந்த இடத்தை விட்டு, ஓடிவந்துடனும். கண்டிப்பாக அம்மா கிட்டப்போய்ச் சொல்லனும்.”

“சொன்னா… என்னைத்தான் அடிப்பாங்கன்னு அந்தத் தாத்தா சொன்னாரே…”

“நிச்சயமா அடிக்க மாட்டாங்க…. ஏன்னா.. நாம தப்பு எதுவுமே பண்ணலை இல்லையா… அந்தத் தாத்தா செய்றதுதான் தப்பு. அந்த மாதிரி தப்புச் செய்றவங்களைப் போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுத்துடுவாங்க. அதனாலதான் அவர் பொய் சொல்லி உன்னை மிரட்டிப் பார்க்கிறார்.”

“அப்படின்னா.. நான் தாத்தாவைப் பத்தி, அம்மாகிட்ட சொல்லட்டுமா..?”

“கண்டிப்பாகச் சொல்லு. பயப்படாதே… அதே மாதிரி, அம்மாகிட்ட சொல்லக்கூடாதுன்னு அவர் மிரட்டினதையும் சொல்லிவிடு.”

பூஜா தலை குனிந்த ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள். ஷாலுவும், இளவரசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்ன யோசிக்கிற பூஜா?” என்று கேட்டாள் ஷாலு.

“அம்மாட்ட சொல்ல பயமா இருக்கு. என்னையை ரூமுக்குள்ள அடைச்சு வச்சுட்டாங்கன்னா…” என்று இழுத்தாள் பூஜா.

“அப்படி எல்லாம் நடக்காது. தைரியமாக இன்னிக்கே போய் அம்மாகிட்ட சொல்லிவிடு. என்னையும் கூட்டிக்கிட்டு போ… உனக்குத் தைரியம் வரும். அம்மாகிட்டேயும் சொல்லிடலாம். அப்புறம் நாளையில இருந்து, அந்தத் தாத்தா உன் பக்கமே வரமாட்டார்” என்றது மரப்பாச்சி.

“மரப்பாச்சி சொல்லுறதுதான்டி… சரி… நீ இதை எடுத்துகிட்டு போ… நாளைக்குத் திருப்பிக்கொண்டுவந்து கொடு” என்றாள் ஷாலு.

பூஜா விடைபெற்று கிளம்பினாள். ஹோம் ஒர்க் எல்லாம் செய்து முடித்துவிட்டு, இரவு உணவையும் முடித்துவிட்டு, உறங்கிப்போனாள் ஷாலு.

(box news)

பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் (Safe Touch – Unsafe Touch) : நமது உடலில் சில உறுப்புகள் அந்தரங்கமானது. நீங்கள் ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ உங்கள் அந்தரங்கப் பகுதியை யாரையும் தொட அனுமதிக்கக்கூடாது. உங்களைக் குளிப்பாட்டும்போது அம்மாவோ, அப்பாவோ அப்பகுதிகளைத் தொடுவது வேறு. உடலின் அந்தரங்கமான பகுதியை உங்களுக்கு ரொம்பவும் கூசும் படியோ, வலி எடுக்கும்படியோ பிறர் எவர் தொட்டாலும் உடனடியாகச் சத்தம் போடவேண்டும். நீங்கள் சொல்வதைக் கேட்காமல் யாரேனும் மீறி தொட்டால், உடனடியாக ஓடிப்போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடவேண்டும். இன்னும் தெரிந்துகொள்ள அப்பா இல்லாட்டி அம்மா கிட்ட கேளுங்க.

This entry was posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 2 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.