தகப்பனாய் உணர்தலும் சுகமே!

உறக்கத்தில்
கடிகார முட்கள்
போல
கட்டிலில் சுற்றி வந்தாலும்
பசியெடுக்கும் நடுசாமத்தில்
சரியாக அவன் அம்மாவை
அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான்
பசியை உணர்ந்தவள் தாய் தான் என
எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ
குழந்தைகள்

இன்னுமா உன் மகன் பேசவில்லை
என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு
பயந்து
உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின்
பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன்
தினம் அவனுக்கு.
சொற்களற்ற அவனது உலகத்தில்
பெயர்கள் அழிந்து
வெறும் சப்தங்களாக வெளியேறுகின்றன
அவனிடமிருந்து

தோற்றுப்போன முயல் கதையும்
தந்திரக்கார நரி கதையும்
பிடிப்பதில்லை மகனுக்கு
தொலைக்காட்சியின்
பொம்மைப்படங்களோடு
நொடிக்கொருதரம் மாறும்
வண்ணங்களையுமே விரும்புகிறான்
உணவருந்த வைக்கும்
அன்னபூரணியாகிவிட்டது
தொலைக்காட்சி பெட்டி
நான் கேட்டு வளர்ந்த கதைகள்
கேட்பாரின்றி
என்னோடு முடிந்துவிடப்போகிறது

வீட்டினுள் விளையாடிக்கொண்டிருக்கும்
சமயமானாலும்
வேலைக்குச்சென்று திரும்பும்
அம்மாவின் ஆட்டோ சத்தத்தை கேட்ட வினாடி
சரியாக அடையாளம் கண்டு
வாசலை ஒட்டி உள்ள ஜன்னலருகே ஓடுகின்றன
குழந்தைகள்

This entry was posted in கவிதை and tagged , , , . Bookmark the permalink.

7 Responses to தகப்பனாய் உணர்தலும் சுகமே!

  1. ஸ்பெ, ப்ரியன் நன்றி! 🙂

  2. ரோகிணி says:

    கடைசி கவிதை /நிகழ்வு # நெகிழ்ச்சி

  3. ezhil says:

    Thala Super 🙂

  4. nilaamaghal says:

    பசியை உணர்ந்தவள் தாய் தான் //
    🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.