”… யதார்த்த நாவல் என்றால் நமது அதிநவீனத் தமிழ்ப் படைபாளிகளிடம் இதழ்க்கடையோரம் இளக்காரமானதோர் கீற்றொன்று காணப்படும். யதார்த்தவாதத்துக்கும் எல்லை ஒன்று இன்மை எனும் தன்மை உண்டு. வெளிப்பாட்டின் தீவிரத்தன்மை தரிசனத் தேடல் இவை இருக்கும் படைப்பாளிக்கு எந்த வடிவமும் சிறந்த வடிவம் தான்…” – நாஞ்சில்நாடன் (கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித்தொப்பி நாவலின் முன்னுரையில்..)
இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதுக்காக தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்பு தேர்வு செய்யப்படிருக்கிறது. என்னை கவர்ந்த எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமான படைப்பளி. இவரின் கதைகளில் இருக்கும் வாழ்க்கை என் சொந்த வாழ்க்கையோடு சில சமயங்களில் மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளதால்.. எப்போதும் என்னால் மறக்கமுடியாதபடைப்பாளி இவர்.
தன்னுடைய முதல் நாவலான தலைகீழ் விகிதங்கள் வெளிவந்த அனுபவத்தை புத்தகம் பேசுகிறது மாத இதழில் அவர் பகிர்ந்துகொண்டது. இங்கே. அனேகமாக அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால், 32 ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் அந்த நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
அச்சு அசலான எழுத்தும் அவருடையது என்று அவரது நூல்களை வாசித்த எவரும் மறுக்க மாட்டார்கள். மெல்லிய நகைச்சுவைகளை அவருடைய புனைவுகளில் பார்க்கலாம். அதே சமயம் புனைவற்றவைகளில் இவருடைய நகைச்சுவையுணர்வு கரைபுரண்டு ஓடும்.
நான் முதலில் இவரது கதைகளை பேய்க்கொட்டு என்ற சிறுகதை தொகுதி வாயிலாகவே முதலில் அறிமுகமானது. அப்புறம் மும்பை போன சமயத்தில் எட்டுதிக்கும் மதயானை நாவல் படித்து கிறங்கிப்போய் இருந்த சமயத்தில் தான், எழுத்தாளர் அம்பை வீட்டில் இருந்து வாங்கிச்சென்ற நாவல் தான் தலைகீழ் விகிதங்கள். மும்பையில் இருந்த சமயங்களில் அம்பையிடமிருந்து நிறைய நூல்களை வாசிக்க வாங்கிச்செல்வது வழக்கமாயிருந்தது (அப்போதைய பொருளாதார சூழல் நூல்களை காசுகொடுத்து வாங்கும் நிலையில் இல்லை).
மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு போகும் போது, அங்கே நாஞ்சில்நாடன், ஞான.ராஜசேகரன், கலைக்கூத்தன் போன்றோரின் செயல்பாடுகள் குறித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்வார் தமிழ்ச்சங்கத்தின் துணைச்செயலாளர் சங்கொலி பாலகிருஷ்ணன் என்பவர். இவரும் சிறுகதையாளர் தான். நானும் நண்பர் மதியும் குயில்தோப்பு சிற்றிதழை தொடங்கியபோது, இவரது முகவரியைத்தான் இதழில் தொடர்ப்பு முகவரியாக கொடுத்திருந்தோம். கம்பராமாயணத்தில் அதன் சுவைக்காக மிகுந்த ஈடுபாடுகொண்டவராக இருந்திருக்கிறார் நாஞ்சில்நாடன்.
நேரடியாக இணையத்தில் நாஞ்சில்நாடன் இயங்காவிட்டாலும் இவரது வாசகர் சுல்தான் என்பவரால் இவரது எழுத்துக்கள் வலையேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வலைப்பதிவின் முகவரி: http://nanjilnadan.wordpress.com
ஒவ்வொரு முறையும் இவ்விருது வழங்கப்படும் போது இலக்கிய உலகில் பெரும் சர்ச்சை எழும். அது இம்முறை இருக்காது என்று நம்புகிறேன். இவ்விருதுக்கு சரியானநபரை இம்முறை அகாதமி தேர்வு செய்திருப்பதாக நம்புகிறேன்.
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான எழுத்துக்கு சொந்தக்காரரான நாஞ்சில்நாடனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். சிறிது நேரத்துக்கு முன் அவருக்கு தொலைபேசி வழி வாழ்த்து சொல்ல முயன்றபோது, அவரது எண் தொடர்ந்து பிசியாக இருந்துகொண்டே இருந்த்து. அப்படியும் விடாப்பிடியாக முயற்சித்து வாழ்த்துகளை சொல்லிவிட்டேன். 🙂
—
பிற சுட்டிகள்:
நாஞ்சில்நாடன் விக்கியில் : http://ta.wikipedia.org/wiki/நாஞ்சில்_நாடன்
அழியாச்சுடர்கள் வலைப்பதிவில்: http://azhiyasudargal.blogspot.com/search/label/நாஞ்சில் நாடன்
கேணியில் நாஞ்சில் நாடன்:
கிருஷ்ணபிரபு: http://thittivaasal.blogspot.com/2010/03/blog-post.html
பிரபாகரன் : http://tprabakaran.blogspot.com/2010/03/blog-post_15.html
நாஞ்சில்நாடன் பற்றி எஸ்.ரா: http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997298571472509.html
நாஞ்சில்நாடன் நேர்காணல்கள்:
தீராநதியில் : http://kadarkarai.blogspot.com/2008/04/blog-post.html
விகடனில்: http://dhalavaisundaram.blogspot.com/2008/04/blog-post.html
நாஞ்சில் நாடன் பற்றி அடிக்கடி ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதி இருக்கிறார். அங்கே சுவையான அவருடைய அனுபவங்களும் கிடைக்கும் வாசிக்க.. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு என்ற கட்டுரைத்தொகுப்பையும் எழுதி இருக்கிறார் ஜெமோ. http://www.jeyamohan.in/?p=135
—
புகைப்பட உதவி: தம்பி விழியன்
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது என்ற செய்தி மெய்யாகவே மகிழ்வைத் தருகிறது. நல்ல இலக்கியம் படைக்கும், அதுவும் மக்கள் இலக்கியம் படைக்கும் படைப்பாளர்களுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைப்பதில் எல்லோரும் கொண்டாடுவோம். இந்த மகிழ்ச்சியில் எல்லோம் இணைவோம்.
Pingback: ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | விடுபட்டவை