♗யெஸ்.பாலபாரதி ♗ on July 3rd, 2009

அவன் - அது= அவள்

வலி. வேறுபாடுகளைக் கடந்து மனித இனத்திற்குப் பொதுவான உணர்வாக வலி உணரப்படுகிறது. அன்பு செய்தலும், உணர்வுகளை சுகித்தலும் பொதுவான சந்தோஷங்கள். வலி – பொதுவான துக்கம். வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை விதமான வலிகள்; லௌகீக விஷயங்களின் போதாமை உண்டாக்கும் வலி; உறவுகளின் புறக்கணிப்பின் வலி; ஆணுக்கொரு வலி; பெண்ணுக்கொரு வலி; குழந்தைக்கொன்று; பருவங்களுக்கேற்ப மாறுபடும் வலி; ப்பா… எத்தனை விதமான வலிகள்; ஒவ்வொரு வலியின் துக்கத்துடன் வெறொன்றை எந்தக் கணத்திலும் ஒப்பிட்டுவிட முடியாத அளவுக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு தனித்துவமாயிருக்கிறது? மனித ராசிகள் உருவாகும் போதே ஒவ்வொன்றும் எப்படித் தனித்த அடையாளத்துடன் இயற்கையாக உருவாகிறதோ, அத்தனை விதமாக இருக்கின்றன வலிகள்.

இயற்கையில் படைக்கப்பட்ட திருநங்கைகளுக்கும் வலி என்று ஒன்று உண்டு என்பதையே இப்பொழுதுதான் தனித்த அடையாளத்துடன் உணர முடிகிறது. ஆணின் வலியாகவும் அற்று, பெண்ணின் வலியாகவும் அற்று, ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருமாறத் துடிக்கிற இயற்கையின் வலியை சமூகம் உணர மறுத்திருக்கிறது. தனக்குப் புரியாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை கொடுமைப் படுத்தி புறக்கணிப்பது நம் சமூகத்திற்கு எளிதாக இருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் வலியிலிருந்து ஒரு வலி மொழிவழி நம் மனதைக் குத்திக் கிளறுகிறது. அழுகி, நாற்றமெடுத்துப், புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூக அமைப்பின் மரியாதைக்குரிய பிரஜை நீயும்தானே என முகத்தில் காறித் துப்புகிறது. ‘மிகையாக உணர்ச்சிவசப் படும் தருணத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துப் போ’ என நம்மை விரட்டுமோ என்ற பயம் தூக்கத்திலும் கொப்பளிக்கிறது. ‘நான் கடவுள்’ படத்தில் வரும் அயோக்கியத்தனமான வசனமான ‘வாழத் தகுதியற்றவர்களுக்கு வழங்கப் படும் மரணம் வரமே’ போன்ற ஆதிக்க வெறியினால் எத்தனை உயிர்கள் காலங்காலமாக இந்த மண்ணை விட்டு வெளியேறியிருக்கக் கூடும்?

யெஸ். பாலபாரதி எழுதியுள்ள அவன் – அது = அவள் நாவலின் கடைசிப் பகுதியிலிருந்து துவங்கி அந்த நாவலுக்குள் செல்லலாம் என நினைக்கிறேன். ‘இனி என்ன பண்ன முடியும் சொல்லு? பொட்டயாப் பொறந்ததே தப்பு. அதுலயும் கல்யாணம் காட்சின்னு ஆசப்படுறது அதவிட தப்பு. பாக்கலாம்…. இன்னும் எத்தனை காலத்துக்குன்னு. முடியிற வரைக்கும் சமாளிப்பேன். என்னைக்கு முடியாம போகுதோ… அன்னிக்கு எதாவது டிரெயினுக்கு முன்னால பாஞ்சுடுவேன்’ என்று எழுந்து நடக்கத் தொடங்கினாள் கோமதி.

சாவின் விநாடியை கணந்தோறும் அனுபவித்துக் கொண்டே, வாழ்வின் கடைசி வரை முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்ற தீராக் காதலுடன் வாழ்பவர்கள் திருநங்கைகள். அப்படியான தீராக் காதலுடன் உள்ள கோபியாக இருந்து கோமதியாக மாறிய திருநங்கையே நாவலின் மையம். கற்பனை பாத்திரங்களற்று, பொய்க்கலப்பற்ற உண்மைச் சம்பவங்களின் புனைவே இந்நாவல். இந்நாவலில் சமூகத்தின் பிரதிநிதிகளாக வரும் அநேக ஆண்களும் பெண்களும் வேடிக்கை பார்க்கிறார்கள்; கேலி பேசுகிறார்கள்; வன்கொடுமை செய்கிறார்கள்; பலாத்காரம் செய்கிறார்கள்; வெறி கொப்பளிக்கும் மிருகம் ஒன்றினைப் போல் பல்லிளித்துக் கொண்டு மேல் விழுந்து பிராண்டியிருக்கிறார்கள். இவற்றில் எழுதுகின்ற நானும், படிக்கிற நீங்களும் கூட நமக்கான சிறு பங்களிப்பை நிச்சயம் செய்திருப்போம் என்ற குற்றவுணர்விலிருந்து மேலெழ முடியவில்லை.

ஆணாய் இருந்து பெண்ணாய் மாறத்துடிக்கும் உடலின் பரிதவிப்பு. ஆணின் உடலுக்குள் வாழ நேரும் பெண் மனசின் வெட்கம். இயல்பாகவே நாணம் கமழ, புதிய ஆண்களிடமிருந்து விலகி நின்றுத் தவிக்கும் இயல்பு… நாவலின் சின்னச் சின்ன வரிகளில் கடக்கின்றன. பெண் மனசும் ஆண் உடலுமாய் இருக்கும் கோபிக்கு உடலின் சிறு பாகமும் வெளித்தெரிவது கூச்சமேற்படுத்துகிறது. கைலியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு நடப்பது நிர்வாணமாய் இருக்கிற உணர்வை உண்டாக்குகிறது. கடைக்குப் போக நேர்கிற தருணங்களில் எல்லாம் காலிப் பசங்களை கடக்க நேர அவனின் மனம் படும் பாடு; தழைய கட்டியிருக்கும் கைலியை அவன்களுக்காக வேண்டி முட்டிக் கால் அளவுக்கு மடித்துக் கட்டிக் கொண்டு செல்வதும்; மனம் கூச்சத்திலும் வெட்கத்திலும் தடுமாறுவதும்; தன்னை ஒம்போது எனக் கூப்பிடப் போகிறார்களே என்ற பயமும்; சின்னஞ் சிறிய காட்சியென்றாலும் நுட்பமாக பதிவாகியுள்ளது.

பெண் பற்றிய சித்தாந்தக் கேள்வியெல்லாம் தொலைத்து விட்டு திருநங்கைகள் பெண்ணின் இயல்புகளை வலியப் பிடித்துக் கொள்கிறார்கள். விதவிதமாய் அலங்காரம் செய்து கொள்வது, கைநிறைய வளையல்களை அணிவது; அழுத்தமான வண்ணங்களில் ஆடைகளைத் தேர்ந்தெடுத்தல், இல்லாத மார்பகத்தை, மிகையாக்கி, இரண்டு மடங்கு பெரியதாக்கிக் காட்டுதல், நீள நீளமாய் பூவைத்தல், கண்மையும், உதட்டுச் சாயமும் அழுத்தமாய் வைத்தல்… என பல வழிகளைக் கையாண்டு தன்னை பெண் என எப்படியும் அடையாளப் படுத்திவிட வேண்டும் என்ற தவிப்பு திருநங்கைகளிடம் அதிகமிருக்கிறது. கோபி முதன் முதலில் கல்யாணி அக்காவின் பாவாடை தாவணியைப் போட்டுக் கொண்டு கன்னம் வீங்க சங்கரண்ணனிடம் உதை பட்டாலும் பெண்ணின் உடையை அணிய வேண்டும் என்ற வேகம் குறையவில்லை. காரணம், பெண்ணின் ஆடைதான் பெண் என நம்புவதற்கான, அடையாளப் படுத்துவதற்கான ஆயுதமாக கோமதியின் மனம் தீவிரமாக நம்புகிறது. கோபி தன்னையொத்த திருநங்கைகளிடம் உறவு வைத்துக் கொண்டதும், கூவாகத் திருவிழாவிற்குச் சென்றதும், மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பின்னும் கூட, வீட்டின் பாதுகாப்பான வாழ்வு தேடித் திரும்பவில்லை. வீட்டிற்குச் சென்றால ஆணின் உடையணிய வேண்டும் என்ற வெறுப்பின் மிகுதியிலேயே தன்னைக் கண்டெடுத்த திருநங்கைத் தாயுடன் மும்பைக்கு கிளம்புகிறான். பேச்சின் நடுவில் அவனின் புதிய தாய் அவளை ‘டீ’ போட்டுக் அழைத்தவுடன் உண்டாகும் மனச் சந்தோஷம் நமக்குப் புரியுமா என்பது சந்தேகமே.

வாழ்வின் சகல தரப்பு மனிதர்களாலும் கைவிடப்பட்ட திருநங்கைகள் தங்களை ஒரு குழுவாக (ஜமாத்) இணைத்துக் கொள்கிறார்கள். பிறந்து வளர்ந்த இடங்களில் அடையாளம் கண்டறிந்த பின்னர் அவமானப் படுத்தப்பட்டு , கொடுமைப் படுத்திய பின் வெண்தணலாய் சுடும் சமூகத்தின் நடுவீதிகளில் வீசியெறியப் படுகிறார்கள். முட்டுச் சந்துகளில் மோதிப் பார்த்து, பார்த்து விடா முயற்சியினால் மனம் தளராமல் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் குருட்டெலிகளைப் போல், திருநங்கைகள் தனக்கான குழுவைச் சென்றடைகிறார்கள். அதற்குள் வாழ்வின் முன் பாதி படுகொலைக் காதையாய் விரிவடைகிறது. உறவுகளால் துரத்தியடிக்கப் பட்ட இவர்களுக்கு ஜமாத்தில் புது உறவு உருவாகிறது. ஆண்களே இல்லாத குடும்பங்கள்; ஆணுக்கான விழைவுடன். அம்மா- மகள் – அக்கா- தங்கை-பாட்டி-பேத்தியாய் நீளும் உறவுகள்.

உறவுகளுக்குள் நிலவும் அன்பு உண்மையானது; பனித்துளியைப் போல தூய்மையானது;பாதுகாப்பற்ற சமூக வெளியில், அவர்கள் இறுகிக் கோர்த்த கரங்களோடு பாதுகாப்பு வளையங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். சின்னஞ்சிறிய கூட்டுக்குள் அன்பு வளர்த்து, பெருவெளியில் உலவுகிறார்கள். தொட்டதிற்கெல்லாம் தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பதும், கட்டியணைத்து அன்பு செய்தலும், சிறைகளற்ற அன்பும் அவர்களுக்கானது. ரத்த பந்தமே இல்லாமல் உருவாக்கப் பட்ட உறவிற்காக உயிரையும் தரத் தயாராயிருக்கும் உறவுகள்; பிச்சையெடுத்து வாழ்ந்தாலும், தந்தா பண்ணி வாழ்ந்தாலும், அந்தப் பணத்தை தனதாக்கிக் கொள்வதில்லை. பொது; அங்கு எல்லாம் பொது; வேலை, பணம், சொத்து, சுகம், துக்கம், வலி… எல்லாம் பகிரப்படுகிறது. ஆதித் தாயின் தாய்வழிச் சமூகத்தின் பொதுவுடமை கோட்பாட்டின் கூட்டு வாழ்வே திருநங்கைகளின் வாழ்வு. தனம்- சுசீலா – சுந்தரி – கோமதி – இவ்வாழ்வின் தொடர்ச்சிகள்.

பொது நீரோட்டத்திலிருந்து விலகி நிற்கும் நரிக்குறவ இனத்தின் தனித்துவ மொழி இன்றைக்கும் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. திருநங்கைகளும் தமக்கான பிரத்யேகமான வார்த்தைப் பிரயோகங்களை வைத்துள்ளனர். வட இந்திய மொழிகள், இந்தி ஆகிய மொழிகளின் கலப்புடன் ஏராளமான வார்த்தைகள் – சேலா, பாம்படத்தி, ஜியோ, சக்கா, தந்தா, மோரி, சண்டாஸ், ரிவாஜ், சக்ஜா, இஜடா, ஆஸிக் போன்ற ஏராளமான வார்த்தைகள் அவர்கள் புழக்கத்தில் உள்ளன. நாவலில் திணிக்கப் படாமல் வரும் இவ்வார்த்தைப் பிரயோகங்கள நாவலாசிரியரின் ஆளுமையை அடையாளப் படுத்துகின்றன.

‘ஏ வயத்தக் கழுவிப் பொறந்த பயடா’ என வருந்திக் கொண்டு கோபியை கைப்பிடிக்குள் இருந்து நழுவ விட்டுவிடக் கூடாது என பரிதவிக்கும் கோபியின் அம்மா மங்களம் – தாய்மை உணர்வின் பரிதவிப்போடு பதிவாகியிருக்கிறார்.

சமூகம் விரித்த கண்ணியில் தான் பிழைத்த கதையின் துக்கம் கண் இமைக்குள் முள்ளாய் இருக்கையில், தன்னைப் போலொரு சிறுவனும் தன்னந்தனியனாக மாட்டிக் கொண்டு வாழ்வின் கோர முகத்தை சந்தித்துவிடக் கூடாது என்ற பதற்றத்துடன் வரும் திருநங்கை அகஸ்டின்…. சில காட்சிகளில் பதிவானாலும் மிக முக்கிய பாத்திரமாய் பரிணமிக்கிறார். கோபி – கோமதியாகும் ஆசையால் அவசரப் படாமல் இருந்திருந்தால், அகஸ்டின் கோபியை கலெக்டராக்கவில்லை என்றாலும் கண்ணிவெடிக்குள் சிக்காமலாவது அகஸ்டின் காத்திருப்பார். தன் துயரத்தை பாதுகாப்பு வளையமாக விரித்துப் பிடித்திருந்த அகஸ்டினை கோபி மண்ணுக்குள் ஊறிச் செல்லும் புள்ளப் பூச்சியாய் கடந்து செல்கிறான்.

பேய் பிடித்ததால்தான் தன் மகன் இப்படி புத்தி குழம்பி நடக்கிறான் என மங்களம் பேயோட்ட, நாட்டு உளவியல் நிபுணரான சாமியார் மணியப்பிள்ளையை அழைத்து வருகிறார். இயல்பாக சாமியாரும், கோபியும் பேசிக் கொள்ளும் உரையாடல் காட்சி நகைச்சுவையையும், மூட நம்பிக்கையின் முகத்திரையையும் ஒருசேர வெளிக் கொணர்கிறது. பெரியளவிற்கு பிரயத்தனங்களற்று பண்பாட்டு மீறலை வெளிப்படுத்துகிறது இவ்வுரையாடல்.

திருநங்கைகளை நெருங்கிச் செல்வதற்கு பொருத்தமான காரணங்களோடு இரு பத்திரிக்கையாளர்கள் ராஜா-அன்பு அறிமுகம் இருக்கிறது. அன்பு கோமதியை கசக்கிப் பிழிவதும், கொடுமை செய்வதும், திடீரென குடிகாரனாக மாறுவதும் நாவலில் செயற்கைத்தனம் சேர்க்கிறது. எல்லா இயல்பான பாத்திரங்களைப் போலவே இப்பாத்திரங்களும் இருந்திருக்கலாம்.

முழுப் பெண்ணாய் மாற நிர்வாணம் (ஆண்குறி அகற்றும் செயல்) செய்யும் தருணங்கள் உடலை தூக்கி தூக்கிப் போடுகின்றன. ஆப்பிரிக்காவில் பாலுறவு பாதுகாப்பிற்காக பெண்களுக்குச் செய்யப்பட்ட ‘சுன்னத்’- தின் கொடுமையை மீண்டும் பார்ப்பது போல மனம் உடைந்து நொறுங்குகிறது. மயக்க மருந்துகளற்றுத் தாயம்மாவின் கைகளால் அறுத்தெறியப் படும் ஆண்குறியின் வழியே அறுத்தெரியப் படுவது ஆணின் அடையாளம் மட்டுமல்ல; பல தருணங்களில் அவனது உயிர். இது குறித்து பயமும், தயக்கமும் அற்று திருநங்கைகள் தாயம்மாக்களை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்; வாழும் ஆசையைக் கொன்று. நிர்வாணம் சரியாக நடைபெறாத பெண்ணுக்கு, சாவு தனியாக வரவேண்டியதில்லை. பெண்ணாகித் தீர வேண்டும் என்ற தீரா வெறியில் காவு கொடுக்கப் படுகின்றன திருநங்கைகளின் வாழ்வு.

திருநங்கைகள் அதிகம் சீரழியும் இடம் காவல் நிலையங்களாக இருக்கின்றன. காவலர்களின் வல்லுணர்வையும், வக்ரத்தையும் தனியாக ஆய்வு செய்தால், ஆய்வாளர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூட ஆய்வின் முடிவை எழுதி விடலாம். வக்கிர மிருகங்களின் அடையாளமாக இந்நாவலிலும் உள்ளனர் ஏராளமான காவலர்கள்.

கல்லி(சந்து)-யிலும், நாக்கா(நால்முனைச் சாலை)விலும் கவனிப்பாரற்று ரத்தச் சகதியில் கிடக்கும் திருநங்கைகளின் வாழ்வை, மொழியின் துணையோடு வெளிச்சப் படுத்தியுள்ள என் இனிய தோழனும் நாவலாசிரியருமான யெஸ். பாலபாரதிக்கு என் இனிய பாம்படத்தி (கை கூப்பிய வணக்கம்).

************************************************************
—-
கடந்த மாதம் புத்தகம் பேசுகிறது இதழில் வெளி வந்துள்ள விமர்சனம், – புத்தகம் பேசுகிறது, ஜூன் 2008

இதே நூலுக்கு இணையத்தில் வந்திருக்கும் விமர்சனங்களை.. நம் இணைய நூலகர் பாஸ்டன் பாலாஜி தொகுத்துள்ள பக்கம். http://snapjudge.blogspot.com/2008/07/balabharathi-avan-athu-aval-book.html அவருக்கும் என் நன்றிகள்.

தமிழ்மணத்திற்கும் நன்றிகள்

Tags: , ,

♗யெஸ்.பாலபாரதி ♗ on June 30th, 2009

”இப்பயெல்லாம் யாருடா சாதி பார்க்குறா?”

“டேய்.. என்ன பேசுறோம்னு யோசிச்சுத்தான் பேசுறியா? இல்ல..”

“இதுல.. என்னடா யோசிக்க வேண்டி இருக்கு, மெட்ராஸுல பார்க்குறத தாண்டா சொல்லுறேன்”

“என்ன பார்த்த.. என்னத்த சொல்லுறியோ.. சொமக்குறவனுக்குத்தாண்டா.. சொமையோட வலி தெரியும். போகப்போக.. நீயே தெரிஞ்சுக்குவ..”

“அதையே தான் நானும் சொல்லுறேன். கண்ணைத்திறந்து உலகத்தை பாருங்கடா”

”போடா இவனே..நீயே இப்படி பேசிகிட்டு இருக்குறது சரியா படல. கடைசியா கேக்குறேன், நாங்க ஆரம்பிச்சு இருக்குற அம்பேத்கர் மன்றத்துல சேர்ந்துக்கிற ஐடியா இருக்கா, இல்லையா.. அத மட்டுமாச்சும் சொல்லு”

”சாரிடா, நான் இருக்குறதோ மெட்ராஸுல, இங்க சங்கத்துல சேர்ந்து என்ன செய்யப்போறேன். அதனால நான் வரலைடா?”

“தெரியும்டா.. நீ இப்படித்தான் பேசுவான்னு தெரியும், நல்ல நெலமைக்கு வந்த பின்னாடி.. நீங்களும் மாறித்தான் போயிடுறீங்க, பழசை மறந்து தான் போயிடுறீங்க..”

“நீங்க என்ன வேணும்னா சொல்லுங்கப்பா.. நான் என்னோட கருத்த சொல்லீட்டேன். நான் கிளம்புறேன்.. இதுக்கு மேலையும் இப்படி ஒக்காந்து பேசிகிட்டு இருந்தேன்னா.. எங்க ஆத்தா.. கொண்ணுப்புடும்.”

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடையைக்கட்டினேன். பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னோடு ஒன்றாக படித்தவர்கள். எல்லொரும் பாதியிலேயே படிப்பை கைவிட்டு, ஊரிலேயே தங்கிவிட்டவர்கள். நான் மட்டும் எப்படியோ படித்து முடித்து, சென்னையில் வேலையில் இருக்கிறேன்.

நகரம். மாநகரம். பலதரப்பட்ட மக்கள் நிறைந்த இடம். நான் வேலைக்குச் செல்லும் அலுவலகத்திலோ, தங்கி இருக்கும் மேன்சனிலோ எங்குமே எவருமே என் சாதி குறித்து விசாரித்ததில்லை.

இன்னும் சொல்லப்போனால், உடன் பணியாற்றும் உயர்சாதியினர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கூட போட்டிருக்கிறார்கள். யதார்த்தம் இப்படி இருக்க.. இன்னும் சாதிய வேறுபாடுகள் பார்க்கப்படுகிறது என்று இவர்கள் சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

முனிசிபாலிட்டியில் வேலை பார்க்கும் என் அப்பவுக்கு வேண்டுமானால் இந்த விவகாரங்கள் புரியாமல் போகலாம். அவர் பழைய மனிதர். ஆனால் இவர்கள் இந்தகால இளைஞர்களாக இருந்தும் இப்படி சாதிய எண்ணத்துடன் இருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஊருக்கு திரும்பி வந்திருக்கிறேன். அதுவும் ஆடி மாத கோவில் திருவிழா சமயம் என்பதால் இரண்டு நாள் விடுப்பில் இன்று காலையில் தான் வந்து இறங்கினேன்.

எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாத திருவிழா மிகவும் விசேசமானது. கடற்கரையை ஒட்டி இருக்கும் உஜ்ஜய்னி மகாகாளி கோவில் வாசலில் தீமிதிப்பதற்காக விறகுகளை அடுக்கி வைத்திருப்பார்கள். ஊரில் இருக்கும் அத்தனை காவல் தெய்வங்களும் ஊர்வலமாக சென்று தீ மிதிப்பதை பூக்குழி இறங்குவது என்று சொல்லுவோம்.

சாதி வித்தியாசம் பார்க்காமல் அத்தனை சாமியாடிகளும் எல்லா ஏரியாவுக்குள்ளும் புகுந்து ஊர்வலம் போகும். உஜ்ஜய்னி கோவில் பூசாரி சங்கரன் பிள்ளை முதலில் கிளம்புவார். வடக்கு தெருவில் இருக்கும் வீரபத்திரன் கோவில் பூசாரி நடராஜன் சேர்வை, தெற்கு கரையோரம் இருக்கும் முனியசாமி கோவில் பூசாரி சதாசிவ பிள்ளை, பேச்சியம்மன் கோவில் பூசாரி சிகாமணி நாடார் என எல்லா சாதி சாமியாடிகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் சேரிக்கும் வரும், அங்கே இருந்து நொண்டிகருப்பன் கோவிலின் பூசாரியையும் அழைத்துக்கொண்டு, ஊர்வலம் கிளம்பி உஜ்ஜய்னி கோவில் வாசலை அடையும். பின்னர் ஒவ்வொரு சாமியாக குறி சொல்லி, தீக்குள் இறங்கி, மறுபக்கத்தை அடைவார்கள்.

எல்லா சாமியும் இறங்கிய பின் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஒன்றை தொடுவார் உஜ்ஜய்னி கோவில் சாமியாடி. அந்த பெட்டிக்குள் இருக்கும் வண்ண பட்டாடையைப் பொறுத்து, எதிர்வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்ற ஆரூடம் சொல்லப்படுவது தான் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வு.

மற்ற கோவில்கள் போல, எங்கள் கோவிலுக்கு நிரந்தர சாமியாடி கிடையாது. இரண்டு தமிழ் மாதத்திற்கு ஒரு குடும்பம் என்று சுழல் வடிவில் அந்த பொறுப்பு சுற்றி வரும். இம்முறை திருவிழாவுக்கு சாமியாடியாக இருக்கும் வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு வாய்த்திருக்கிறது. அதனாலேயே ஆத்தாளுக்கு தலைகால் புரியவில்லை. கட்டிக்கொடுத்த அக்காவையும் திருவிழாவுக்கு அழைத்திருந்தாள். இருக்காதா பின்னே.. பல வருடங்களுக்கு பிறகு எங்கள் குடும்பத்திற்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது.

வீட்டு வாசலை அடைந்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்டது அக்காவின் நான்கு வயது பெண். அவளைத் தூக்கி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்.

“ராசா.. வந்துட்டியாப்பா.., ஒன்னையத்தேடி வரணுமோன்னு நெனைச்சேன்.. நல்லவேள வந்துட்ட.. பின்னாடி போய் சீக்கரம் குளிச்சுட்டு, புது உடுப்பு எடுத்து வச்சிருக்கேன், அதை போட்டுட்டு ரெடியாகு, ஒங்க அப்பா இப்ப வந்திருவாரு..” பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் அம்மாவின் பரபரப்பு. நான் பின் கட்டுப்பக்கம் போய் குளித்து முடித்துவிட்டு வீட்டினுள் வருவதற்கும், அப்பா வரவும் சரியாக இருந்தது.

வழக்கத்துக்கு மாறாக மெலிந்து போய் இருந்தார். சாமியாடி என்பதால், தீமிதிக்க நாற்பது நாள் விரதம் இருந்திருப்பார் போல. கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக்கொண்டிருக்கும் போதே.. குளித்துமுடித்து, மஞ்சள் வண்ணத்தில் வேட்டியுடன் உள்ளே வந்தார்.

“அடியே.. நான் கோவிலுக்கு போறேன். நீங்க எல்லாம் பின்னாடியே வந்திருங்க” என்றபடியே ஓட்டம் பிடித்தார்.

அம்மா, அக்கா, அத்தான், குழந்தை சகிதமாக நாங்கள் கோவிலை அடைந்த போது, எங்கள் காமராஜர் நகர் முழுவதும் குழுமி இருந்தது. பூசாரியின் குடும்பமே தாமதமாக வந்ததை வினோதமாகப் பார்த்தார்கள்.

தோளுக்கு இரண்டு பக்கமாக மாலை போட்டிருந்தார் அப்பா.. கையில் வெள்ளி பூன் போட்ட பிரம்பு ஒன்று இருந்தது. பறை சத்தம் பலமாக இருந்தது.

டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்…டின்..டின்..

கொட்டுசத்தத்துக்கு ஏற்றவாறு அப்பா ஆடிக்கொண்டிருந்தார். பெண்கள் வரிசையாக வந்து நின்று குடம் குடமாக நீரை ஆடிக்கொண்டிருந்த அப்பாவின் காலில் ஊற்றினார்கள். இடுப்பில் இருந்த சுருக்கு பையிலிருந்து அவர் திருநீறு பூசும் போது, மூக்கில் மேல் கைவைத்து பவ்வியமாக பூசிக்கொண்டார்கள். ஆட்டமும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்.

காலனிக்குள் மற்ற சாமியாடிகள் கொட்டு சத்தத்துடன் பிரவேசிக்கத் தொடங்கியபோது, பறையின் வேகம் கூடியது. எங்கும் பறையெலி எதிரொலித்தது.

உஜ்ஜய்னி சாமியாடி முதலில் வந்து நின்றார். ஒர் அடி இடைவெளியில் எட்டுக்கும் மேற்பட்ட சாமியாடிகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். நொண்டிகருப்பு சிலையைப் பார்த்தபடியே.. நின்ற உஜ்ஜய்னி சாமியாடி.. மெதுவாக முன்னும் பின்னும் அசந்தபடி இருந்தார்.

டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்.
டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்…டின்..டின்..
டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்…டின்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டின்.. டண்டக்கும்..

பறையொலியின் வேகம் கூடக்கூட உஜ்ஜய்னி சாமியாடி.. வேகமாக ஆடத்தொடங்கினார். அவர் ஆட்டம் அதிகமானதும் அத்தனை சாமியாடிகளும் வேகமாக ஆடத்தொடங்கினார்கள்.

“ம்..ர்ர்ர்ம்ம்ம்ம்.. சூ..ம்ர்ம்ர்ம்ர்ம்ர்ம்ர்” என்று வினேதமாக ஓசை எழுப்பியபடி நாக்கை வெளி நீட்டி உள்ளுக்கும் மடித்து, செந்தூரம் பூசப்பட்ட முகத்திலிருந்து விழிகளை பிதுக்கி உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கி குதித்தார் உஜ்ஜய்னி சாமியாடி.

கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து, வேகமாக நடக்கத்தொடங்கியது சாமி. பின்னாடியே எல்லா சாமிகளும்.. வேகமெடுத்தன. அப்பாவும், தலையில் கரகத்துடன் பின் தொடர.. நாங்களும் கூட்டமாக தொடர்ந்தோம்.

காலணிக்கு வெளியே வரும் வரை இருந்த வேகம், வெளியே வந்ததும், குறைந்தது. கடற்கரை நோக்கி போகவேண்டுமென்றால்.. கள்ளர் தெருவாழியாக போய், மறவர் தெருவை அடைந்து, இட்டிப்பிள்ளை சந்துவழியாக கிழக்குத்தெருவையும் கடந்து விட்டால்.. அடுத்து கோவில் இருக்கும் சன்னதி தெரு வந்து விடும்.

ஒவ்வொரு தெரு வழியாக போகும் போதும், பெண்கள் குடம் குடமாக தண்ணிர் ஊற்றி, ஒவ்வொரு சாமியாடியிடமும், திருநீறு பூசிக்கொண்டார்கள். காலில் தண்ணீர் ஊற்றும் போது மட்டும் சாமியாடிகள் ஆடாமல், ஒரே இடத்தில் நின்று, முன்னும் பின்னுமாக அசைவார்கள். திருநீறு பூசிக்கொள்ளும் சமயங்களில் சிலருக்கு குறி சொல்லுவதும் நடந்தது.

நான்கு தெருக்களை கடந்து, கடைசியாக சன்னதி தெருக்குள் நுழையும் போது தான் கவனித்தேன். எல்லா சாமியாடிகளின் கால்களிலும் ஈரமிருந்தது. அப்பாவின் காலில் மட்டும் ஈரமில்லை. தூசுகளால் நிறைந்திருந்தது. இடுப்பில் இருந்த சுருக்கு பை கூட பிரிக்கப்படாமலேயே இருந்தது.


உரையாடல் போட்டிக்காக..

Tags: , , ,

♗யெஸ்.பாலபாரதி ♗ on June 27th, 2009

தீடீரென ஒரு பதிவரிடமிருந்து போன் வந்தது,

“தல.. எப்ப வெள்ளைக்காரன மாறினீங்க..?”

‘என்னங்க சொல்லூறீங்க?’

”மதம் மாறுவாங்கன்னு தெரியும்.. நீங்க ஒரு படத்துல விவேக்கு மலையாளியா மாறின மாதிரி.. வெள்ளைக்காரன மாறீட்டீங்களோன்னு சந்தேகமா இருக்கு?”

‘ஏதாவது புரியுற மாதிரி பேசுங்க தல.., என்னத்துக்கு இப்படி ஓட்டுறீங்க?’ என்றேன் கொஞ்சம் கடுப்புடன்.

”ஒங்க வலைப்பக்கம் போய் பார்த்தா.. ஏதேதோ எழுதி இருக்கு.. போட்டோவெல்லாம் போட்டு இருக்கு.. விசயம் என்னன்னு தெரிஞ்சுக்கத்தான் போன் போட்டேன்.”
சும்ம கலாய்க்கிறதுக்காக பேசுகிறார் என்று விட்டு விட்டேன். ஆதான் பலரிடமிருந்து போன் வரவே..
எனக்கு பகீரென்றது. லக்கியை போனில் பிடித்து விபரத்தை கூறினேன். யூசர் அடி, பாஸ்வேர்ட் விபரங்கள் கொடுத்தும் வலைப்பக்கத்தை திறக்க முடியவில்லை என்றார்.

சம்பவத்துக்கு முதல் நாள்தான் http://periyar.balabharathi.net/ என்ற டொமைன் ஏற்படுத்தி அதை ப்ளாகருக்கு மாற்றிவிடும் வேலையை ஒரு நண்பர் உதவியுடன் செய்து கொண்டிருந்தேன். அந்த வேலை வெற்றிகரமாக முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, balabharathi.net, blog.balabharathi.net ஆகிய பெயரில் இருந்த தளங்களை ஏதோ ஸ்பேனிஷ்காரனோ ப்ரெஞ்சுக் காரனோ அமுக்கி வச்சுகிட்டான் போலன்னு நினைச்சுகிட்டேன். நாம்தான் கணிணி கைநாட்டு ஆச்சே? இதை விட பயங்கரமவா யோசிச்சுற முடியும்?

சர்வரில் ஏதாவது கோளாறு இருக்கலாம் என்று மேலே உதவிய அந்த நண்பர் சொல்ல, அண்ணன் முகுந்த் அவர்களை பிராண்டி எடுத்ததின் பயனாக தளம் மீண்டும் கிடைத்தது. நிறைய டெக்னிக்கல் வார்த்தைகளைத் தூவி இது ஓர் உள்நாட்டுக் குழப்பம் என்றும், எந்த ப்ரெஞ்சு/ஸ்பேனிஷ்க் காரனுக்கும் இதில் தொடர்பில்லை என்றும் தெளிவு படுத்தினார்கள். நேற்று இரவே தவறுகள் களையப் பட்டு 24 மணி நேரத்தில் தளம் மீண்டும் வழக்கம் போல செயல்படும் என்றார் அண்ணன் முகுந்த். அவருக்கு என் நன்றிகள். அந்த சகலகலா வல்ல நண்பருக்கும் நன்றியோ நன்றி.

இப்போதைக்கு சுபம்!!!

ப்பு:- தொலைபேசியில் தொடர்ச்சியாக வலைநலம் விசாரித்த நண்பர்களுக்கு என்றும் நன்றி. இந்த சமயத்தில் என்னை யாரும் மறந்துவிடக் கூடாது என்ற கொலைவெறியுடன் பாகசவைத் தட்டியெழுப்பும் சிபிக்கு எனது கண்டனங்கள். (கெட்ட வார்த்தை பயன்படுத்தினா தமிழ் மணத்திலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தால் ப்பு மட்டுமே போடப் பட்டுள்ளது, _ விடுபட்டுள்ளது. :) )