Aug 31

சினேகிதனின் அப்பா

அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது.

அங்கே இருந்தவரை, ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை ஏதேனும் ஒரு இடத்தில் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு ஞாயிறு மகேஸ்வரி பூங்காவுக்கு அருகில் காத்துக்கொண்டிருந்த அந்த இளைஞனை சந்தித்தேன். ஒல்லியான உருவம். கல்லூரி மாணவன் போன்ற தோற்றம். என்னைவிட சின்னபையனாக இருந்தான். பேசப்பேச.. அவனுக்கும் எனக்கும் ஒரே பெயர் என்பது தெரியவந்தது.

வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அழைத்துப்போனான் இன்னொரு சந்திப்பில். நண்பனுடன் அவன் வீட்டுக்கு போய் இருந்தேன். மாகிம் ரயில் நிலையத்திலிருத்து நடந்து போகும் தூரம் தான் அவன் வீடு. அங்கே சாரம்(கைலி-லுங்கி) கட்டிய ஒரு மனிதரை பார்த்தேன். அவர் நண்பனின் அப்பா என்பது அவன் சொல்லி இருந்த அடையாளங்களில் தெரிந்தது. என்னை வீட்டினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் இவன். வீட்டுக்குள் போனதும் யாரோ வந்து அழைக்க அவர்களிடம் பேசுவதற்கு சென்று விட்டான் நண்பன். அவரும் அழகான ஆங்கிலத்தில் பேச தொடங்கிவிட்டார்.

இரண்டுமூன்று நாட்களாய் சவரம் செய்யாத முகம், மேல் பட்டனை கழட்டி விட்டிருந்த சட்டை. கட்டம் போட்ட சாரம். அவரின் உருவத்திற்கும் அவர் பேசிய மொழிக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. மிகச்சாதரணமாக ஒரு மனிதரிடமிருந்து மிக அழகான ஆங்கிலம் உச்சரிப்பு சரளமாக வருவதைக்கண்டு கொஞ்சம் வியப்பு தான் மேலிட்டது எனக்கு. தயங்கித் தயங்கி அவரிடம் சொன்னேன், ’அப்பா.. எனக்கு இங்லீஸுல பேச வராது. நாம தமிழிலேயே பேசலாமேன்னு’, அவரும் சிரிச்சுகிட்டே தமிழில் பேசத்தொடங்கினார். இங்லீஸ் கத்துக்குங்கப்பா… வாழ்கையில ஒரு லாங்வேஜ் கத்துகிடுறது நல்லது என்றார். தமிழில் பேசிக்கொண்டிருந்தவர் கொஞ்ச நேரத்திலேயே அவரையுமறியாமல் ஆங்கிலத்துக்கு தாவிவிட்டார். :( நான் அசடு வழிய சிரிச்சுகிட்டே உட்கார்ந்திருந்தேன்.
**
இன்னொரு சமயம் நண்பனைத்தேடி அவன் வீட்டுக்கு போய் இருந்தேன். அவன் வெளியே போய் இருந்தான். வரும் சமயம் தான் உட்காருங்க என்று உட்கார வைத்துவிட்டார்கள். அப்போதும் அவனின் அப்பாவிடம் பேசிக்கொண்டிருதேன். இம்முறை அவரின் தமிழிலேயே தான் பேசினார். வீட்டுக்குள் சென்று நண்பன் எழுதிய படைப்புக்களை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காட்டினார். சின்னப்பையன் தான் சுமாரா எழுதுறான் என்றார். உள்ளுக்குள் ஒரு பெருமை இருந்தாலும், என்னப்பா.. இப்படியெல்லாமா எழுதுறது? ஜெயகாந்தன் மாதிரி எழுதவேணாம். நான் சொன்னா கேட்க மாட்டான் நீ சொல்லு என்ன? என்றார்.

**
ஒரு ஞாயிறு மதியம் அந்த நண்பனைப் பார்க்க போய் இருந்தேன். மதியம் அவன் வீட்டில் தான் சாப்பாடு. சாப்பிட்டு முடித்த பின், உட்காந்து பேசிக்கொண்டிருக்கும் போது தான் பார்த்தேன். சுவரில் ஒரு படம் வரைந்து ஒட்டப்பட்டிருந்தது. யார்ரா அது? என்று அவனிடம் கேட்டபோது அவன் சொன்னான் – அம்மாவை ஓவியமாக வரஞ்சு இருக்கேன் என்று. அடப்பாவி.. இது ஓவியம் மாதிரி இல்ல.. கார்டூன் மாதிரி இருக்கு.. பேசாம நீ கார்டூன் வரைய ஆரம்பி என்று சொன்னேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அவன் அப்பா உள்ளறைக்குச் சென்று ஒரு நோட்டை எடுத்து வந்து என்னிடம் நீட்டினார். இதுல நிறைய வரஞ்சு வச்சு இருக்கான் என்று. நண்பர் அவரை எரித்துவிடுவது போல பார்த்தான். அந்த நோட்டு முழுவதும் இவன் வரைந்து வைத்திருந்தது ஓவியங்கள் அல்ல.. கார்டூன்கள்.

கடைசி பக்கம் பாருப்பா.. என்றார் அப்பா.

பார்த்தேன். நண்பனின் அப்பா மாதிரியான தோன்றத்தில் ஒருவருடைய கார்டூன் அது. என்னையத்தான் இப்படி வரஞ்சு இருக்கான் என்று சிரித்தார். எத்தனை பேருக்கு இந்த சகிப்புத்தன்மை வரும். தன் பையன் தன்னை கேலிச்சித்திரமாக வரைந்து வைத்திருந்ததைப் பார்த்து சிரித்துக்கொண்டும், பெருமைப்படவும் எத்தனை பேரால் முடியும். அவருக்கு முடிந்தது. அவர் பையனை மிகவும் நேசித்தார். பெண்குழந்தைகளுக்கு பிறகு பிறந்த ஆண் மகன் என்பதால் இவன் மீது அவருக்கு பாசமும், கர்வமும் அதிகம். என்மீதும் மரியாதையான அன்பைச் செலுத்தினார் அவர்.

கேலிச்சித்திரங்களில் கவனம் செலுத்திய நண்பன், பின்னாளில் கார்டூன் படங்கள் மட்டும் போடத் தொடங்கினார். மும்பை தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார். பின்பு குமுதம் வார இதழின் மூலம் உலகம் அறிந்த ஒரு கார்டூனிஸ்ட்டாக மாறி இருக்கிறார் அந்த நண்பர் – கார்டூனிஸ்ட் பாலா தான் அவர்.
என் அப்பாவிடம் இருக்கும் பல குணங்களை நான் இவரிடம் கண்டிருக்கிறேன். அவரை ஒவ்வொரு முறையும் அப்பா என்று அழைக்கும் போதெல்லாம் அது வெறும் சத்தமாக வந்த சொல் அல்ல. என் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தை என்று பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

விபரம் புரியத்தொடங்கும் பதினைந்தாவது வயதில் என் அப்பா இறந்துபோனார். அவரின் நினைவுகள் எல்லாம் புகைமூட்டத்தின் நடுவே கொஞ்சமாய் தான் நினைவு இருக்கிறது. அப்பாவின் இடத்தில் இருந்து வளர்த்து எல்லாம் பெரிய அண்ணன் தான் என்பதால்.. அப்பா என்ற ஸ்தானத்தின் மீது எனக்கு எப்போதும் பாசமும், மரியாதையும் உண்டு. அதை அந்த பாலாவின் அப்பாவிடம் கண்டேன். குடும்பத்தின் மூத்தபிள்ளையாய் என்னை மதித்து பல முறை குடும்ப விஷயங்களை பகிர்ந்துகொண்டவர்கள் அவர்கள். பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் மணம் முடித்து, பேரன் பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்தவர்.

அந்த பாசம் காட்டிய அப்பா.. சமீபகாலமாய் கொஞ்சம் உடல் நலமில்லாமல் இருந்து வந்தார். நேற்று இரவு எட்டுமணியளவில் உயிர் பிரிந்தது என்ற துயரச்செய்தி கிடைத்தது. :(
அப்பாவை இழந்து பிரிவில் வாடும் நண்பனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட என்னால் சொல்ல முடியவில்லை. என் தகப்பனை இழந்து நிற்பது போன்ற உணர்வில் இருக்கும் நான் எப்படி அவர்களுக்கு ஆறுதல் சொல்லமுடியும். :( :(

Popularity: 3% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Aug 23

ഓണാശംസകള്‍ …

ശ്രാവണ പുലരികള്‍ ചിരിതൂകുന്നു …..

നാട്ടിലെങ്ങും വസന്തകാലം ….

മനസുകളില്‍ ആഹ്ലാദത്തിന്റെ തിരതള്ളല്‍ …

ഓരോ ഓണക്കാലവും ബാല്യകാല സ്മരണകളുടെ

പൂക്കളമൊരുക്കി വരുന്ന വിരുന്നുകാരാണ്…

എല്ലാവര്‍ക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ

ഓണാശംസകള്‍ …

நன்றி :) 
படம்: கலேஷ்குமார்
மூலக் கவிதை: அஜிஷ்

Popularity: 3% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Aug 18

பக்கத்து வீட்டு ரவுசு…

பக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை.

வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான்.

கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக சுத்தாமல். பையன் இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான்.

இவனது கோக்குமாக்கை பார்த்தவர் அவனை தடுத்து நிறுத்தி.. ’ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க?ன்னு கேட்டிருக்கார்.

அவனோ, ”என்னோட பாட்டி அனுமாரை தினம் பதினோரு சுத்து சுத்தச்சொன்னாங்க… நான் ஏதோ நியாபகத்துல அதிகமா சுத்திட்டேன். அதனால.. கூடுதல சுத்துனதை இப்போ எடுத்துகிட்டு இருக்கேன்”னு சொல்லி இருக்கான்.

:) )))

—-

ஒரு நாள் அந்த பையனை அவன் அப்பா போட்டு அடித்துக் கொண்டிருந்தார். குறுக்கே புகுந்து ’சின்னப்பையனை ஏன் சார் இப்படி அடிக்கிறீங்க?’ன்னு தடுத்து கேட்டேன்.

”இவன் பண்ண காரியத்துக்கு கொஞ்ச வா முடியும்”னு கேட்டார்.

அப்படி என்ன தான் செஞ்சுட்டான்னு கேட்டேன். அவரு அருகில் இருந்த ஒரு வாளியை காட்டினார். அதில் முக்கால் வாளி தண்ணீர் இருந்தது. சோப்பு நுரை நங்கு பொங்கி இருந்தது. சரி.. பையன் சோப்பை தண்ணியில போட்டுட்டான் போலன்னு நினைச்சு.. சின்ன பையன் தெரியாம சோப்பை போட்டிருப்பான் சார்ன்னு சொன்னேன்.

அதுக்கு அவரு, ”அட நீங்க வேற.. தெரிஞ்சு தான் போட்டிருக்கான். தெருவுல சுத்துற.. குட்டி நாய் மெலிஞ்சு இருக்கே ஏன்னு நேத்திக்கு கேட்டான்.. வீக்கா இருக்குறதுனால அப்படி இருக்குன்னு சொன்னேன். இப்ப என்னடான்னா… குளிக்கிறதுக்கு வச்சிருந்த ’டேவ்’ சோப்பை வாளி தண்ணியில கரைச்சு வச்சு.. நாயை குடி குடின்னு கட்டாயப்படுத்திகிட்டு இருந்தான். ஏண்டா இப்படி பண்ணுனன்னு கேட்டா… அந்த சோப்புல தான்.. பாலும், பாதாமும் கலந்து இருக்குறதா.. டீவியில காட்டுனாங்களே.. அதனால தான் கரைச்சு நாய்க்கு கொடுத்தேன். ஆனா குடிக்க மாட்டேங்குதுன்னு சொல்லி ஒரே அடம். அடிக்காம என்ன பண்றது சொல்லுங்க”ன்னு என்னை பார்த்து கேட்டார்.

ஞே!!

—–

பக்கத்து வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த ஆட்டோ. அதில் இருந்து இறங்கும் போதே அந்த பையனை திட்டிக்கொண்டே இறங்கினார் அவன் அப்பா. என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் ஓடி வந்து ஒட்டிக்கொண்டான் அவன். எப்போதும் அவனை காப்பாற்றும் அம்மாவின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

சரி.. பையன் பெரிய அளவுல ஏதோ சேட்டை பண்ணிட்டான் போல.. வீட்டுக்குள் போனதும் அடிபின்னப்போறாய்ங்கன்னு பயந்துகிட்டே, ’பையன் நம்ம வீட்டுலேயே கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமே’ன்னு சொன்னேன். “ஆமா.. இவன் செஞ்ச வேலைக்கு விளையாட்டு ஒன்னு தான் கொற..வாடா..”ன்னு அவனை நோக்கி கை நீட்டினார். பையன் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.

”அட.. விடுங்க சார்.. என்ன பண்ணீட்டான்னு இப்படி கோவப்படுறீங்க?”

“பக்கத்துல இருக்குற சர்ச்ல இன்னிக்கு ஒரு பங்ஷன். பிரண்டு கூப்பிட்டார்னு குடும்பத்தோட போய் இருந்தோம். பாதர் பைபிள் படிச்சுகிட்டு இருந்தார். அவங்க எல்லாரும் ஜெபம் பண்ணினாங்க.. அப்போ பார்த்து இவன் திடீனு எழுந்திருச்சி ஜம்ப்..ஜம்ப்ன்னு சத்தம் போட்டுகிட்டே குதிக்க ஆரம்பிச்சுட்டான். எல்லோரும் என்னைய ஒரு மாதிரியா பார்க்க.. அவமானமா போச்சு. அதான் உடனே கிளம்பி வந்துட்டோம்” என்றார். வழி நெடுக ஆட்டோவில் வைத்து பையனுக்கு செம அர்ச்சனை. ஆனால் பையன் வாயை திறக்கவே இல்லை என்ற கோபம் வேறு அவருக்கு.

பையனை தடவிக்கொடுத்துக்கொண்டே அவனிடம் காரணம் கேட்டேன். “ க்ளாஸ்ல தூக்கம் வந்தா வாத்தியார் எல்லோரையும் ஜம்ப் பண்ணச்சொல்லுவாரு. அது மாதிரி எனக்கு சர்ச்ல போனதும் தூக்கம் தூக்கமா வந்துச்சு.. தீடீர்ன்னு கண்ணை முழிச்சு பாத்தா.. எல்லோரும் குதிப்போமாகன்னு சொன்னாரா… நான் ஜம்ப் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.” என்றான் பாவமாக.

”இதுக்கு தான் குதிச்சியா..டேய்.. அவரு ஜெபிப்போமாகன்னு தாண்டா சொன்னாரு..” என்று பல்லை கடித்துக்கொண்டு அவனது அப்பா வரவும் இவன் என் பிடியிலிருந்து நழுவி தெருவில் ஓடத்தொடங்கினான்.

—-

Popularity: 6% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Older Entries »

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly