கடந்து போதல் – மா.சிவக்குமார்

கடந்து போதல் (சாமியாட்டம் – பாலபாரதி)

தூங்கிய பிறகு எளிதில் எழுந்து விடாதவரையும் எழுப்பி விடும் ஓலம். ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர்.  மும்பைக்கு மாற்றலாகி வந்ததும் ஊர்க்கார அண்ணாச்சிக்கு சொந்தமான வீட்டு வாடகைக்கு கிடைத்து விட்ட நிம்மதியில் இருந்தவர்களை நடு இரவில் எழுப்பி உட்கார வைக்கிறது பயங்கரமான அந்த அலறல்.

அலறல் மர்மமாக இல்லை, இவர்களைத் தவிர குடியிருப்பில் வேறு யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. மும்பையில் பணிக்குப் போக வர செலவாகும் நேரத்தையெல்லாம் தாண்டி அடுத்த நாள் மாலையில் விசாரிக்கப் போகிறார்கள். வாட்ச்மேன், வீட்டு சொந்தக்கார அண்ணாச்சி என்று சுற்றி வந்து உண்மை தெரிந்து கொள்கிறார்கள். எப்படிப்பட்ட உண்மை!

நம்முடைய தினசரி வாழ்க்கை, போக்குவரத்து கவலைகள், இரவில் நிம்மதியாகத் தூங்கக் கூட விடாத சத்தத்தின் மீது வரும் கோபம், கணவன்/மனைவி விவாதங்கள், இரவுச் சமையலுக்கு காய்கறி வாங்குதல் இவற்றை எல்லாம் தாண்டி இன்னொரு உலகம் இயங்குகிறது. நாம் அமைதியாக உட்கார்ந்து இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கும் போது நான்காவது வீட்டில் நமக்குத் தொடர்புடையை வடுக்கள் ஆழமாக பதிந்திருக்கலாம் என்ற உண்மையை உறைக்கச் சொல்லும் கதை.

படிக்க ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கும் மர்மம், கதாநாயகர்களுடனேயே நம்மை பயணிக்க வைத்து மறக்க முடியாத பதிவை மனதில் ஏற்படுத்துகிறது.

கோட்டிமுத்து
பாரதியின் ஒரு பாட்டு
பொம்மை

Popularity: 1% [?]

Posted in சிறுகதை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged | Leave a comment

பொம்மை – மா.சிவக்குமார்

பொம்மை (சாமியாட்டம் – பாலபாரதி)

உழைக்கும் வர்க்க வாழ்க்கைப் போராட்டங்களின் சித்தரிப்பு.

‘பிரபல’ நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அந்த சம்பளத்தில் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை.  ஆட்குறைப்பில் வேலை போன எதிர்த்து போராடும் வழிகள்  பலன் தரப் போவதில்லை.

குறைவான சம்பளத்தில் ஜவுளிக் கடையில் ‘பொம்மை’யாக நிற்கும் மாற்று வேலை. மனைவியின் தம்பிக்கு சொந்தமான வீட்டில் குடியிருப்பதால் வாடகை கொடுக்கத் தேவையில்லை. ஓரளவு சமாளிக்க முடிகிறது.

இந்த நிலையில் மனைவியின் தம்பி ஊரிலிருந்து வரும் வைபவம். ‘குறைந்த பட்சம் கறி எடுத்து சமைக்க வேண்டாமா? மச்சான் வருகைக்காக ஒரு நாள் லீவு எடுத்து வீட்டில் இருக்க வேண்டாமா?’

குடும்பச் சூழல், உரையாடல்கள், குழந்தை வளர்ப்பு, பொருளாதார நிலை, வேலை விபரங்கள் என்று பன்னீரின் உலகத்துக்குள் நுழைந்து அவனது கவலைகளிலும் திட்டமிடலிலும் நாமும் மூழ்குகிறோம்.

கடைக்கார சேட்டிடம் சம்பள முன்பணம் கேட்க வேண்டும். வேலை முடிந்து கடை முதலாளி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு வருகிறான். கோரிக்கை சேட்டின் புத்திசாலித்தனத்தால் மழுங்கடிக்கப்பட்டு முதலாளித்துவ நிலையில் நிராகரிக்கப்படுகிறது.  சேட்டின் பணம் வேறு இடத்தில் சரணடைகிறது.

‘சாலை விளக்குகள் மஞ்சள் ஒளியை உமிர்ந்தபடி இருக்க’ வயதான பிச்சைக்காரர்கள் மூடப்பட்ட கடை வாசல் இருளில் படுக்கை விரிக்கிறார்கள். இருப்பவர்களின் உலகமும் இல்லாதவர்களின் உலகமும் அருகருகே, எந்த உறுத்தலும் ஏற்படுத்தாமல் இயங்குகின்றன.

பின் குறிப்பு :
கதைக்குள் ஒரு கதையாக ஒரு நிகழ்ச்சி. கரடி வேடம் போடும் பன்னீரின் 3 வயது குழந்தைக்கு பொம்மையை விட உள்ளே இருக்கும் அப்பாதான் வேண்டும். அது ஒரு தனிக்கதையாக இந்த சிறுகதைக்குள் ஒட்டாமல் நிற்கிறது.

கோட்டிமுத்து
பாரதியின் ஒரு பாட்டு

Popularity: 1% [?]

Posted in சிறுகதை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged | Leave a comment

சாமியாட்டம் – கேபிள் சங்கர்

சாமியாட்டம்

samiyattam
மூத்த பதிவரும், பத்திரிக்கையாளருமான யெஸ்.பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு இந்த சாமியாட்டம். இதற்கு முன்னால் இவர் அரவாணிகளைப் பற்றிய நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை அடங்கிய இந்த தொகுப்பு 2003 –2011 வரை இவர் எழுதிய சிறுகதைகளின் மொத்தமாம்.  உட்காந்து எழுதியிருக்காரு போல. பாலபாரதியுடன் பேசி பழகியவர்களுக்கு, கதை வாசிக்கையில் அவரின் குரலில் கேட்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு கம்பீரமான குரல் மனுஷனுக்கு. சிரித்தால் ப்ரம்ம ராட்ஷசன் போலச் சிரிப்பாரு. சரி.. நாம கதைகளுக்கு வருவோம்.
1. கோட்டி முத்து.மனநிலை பிழன்றவனோ என்று யோசிக்க வைக்கும் கேரக்டர். இம்மாதிரியான ஆட்கள் ஊருக்கு ஒருத்தர் நிச்சயம் இருப்பார்கள். தனக்கென்று யாருமில்லாமல் ஊருக்காக நேர்ந்து விட்ட ஆளாக சுற்றியலையும் இவனைப் போன்றவர்களின் முடிவு என்னவாக இருக்குமோ அது போலவே தான் இவன் முடிவும் இருக்கிறது.

2. பாரதியின் ஒரு பாட்டு

மும்பையில் பள்ளியில் படிக்கும் ஜெயா என்கிற மாணவியின் கதை. பாலியல் ரீதியாய் பாதிக்கப்படும் அப்பெண்ணின் மன உணர்வுகளை, அந்நிகழ்வை தைரியமாய் எதிர் கொள்வதைப்  பாரதியின் பாட்டோடு இணைத்து சொல்லிய கதை. ஒரு பக்கத்தில் நடந்த சம்பவத்துக்கு மூன்று பக்கம் மும்பையில் இட்லி விற்று பிழைப்பை நடத்தும் ஒரு அடிமட்ட தொழிலாளியின் பொருளாதாரப் பின்னணி பற்றி சொல்லியிருப்பது சுவாரஸ்யம் என்றாலும்.. கதைக்கு தொடர்பில்லாததால் ஒட்டவில்லை.
3.பொம்மை
இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதையிது. பிழைப்புக்காக மிக்கி மவுஸ் உடுப்பை மாட்டிக் கொண்டு, தன் மச்சினன் வந்திருப்பதால் கொஞ்சம் அட்வான்சும், ஒரு நாள் லீவும் கேட்டு விட வேண்டுமென்ற மனைவியின் கட்டாயத்திற்கு உட்பட்டு முதலாளிக்கும், மனைவிக்குமிடையே மாட்டிக் கொண்டு அலையும் ஒரு சாதாரணனின் கதை. ஆரம்பம் முதல் முடிவு வரை அவனூடே பயணிக்க வைக்கும் எழுத்து.
4. கடந்து போதல்
ஆரம்பித்த வேகத்தில் ஒரு ஹாரர் சிறுகதையோ என்று எண்ண வைத்தாலும், முடிவு இப்படித்தானிருக்கும் என்று ஊகிக்க முடிந்த கதை.

5.தண்ணீர் தேசம்

குடிக்க தண்ணியில்லாமல் வாடும் மக்கள் வாழும் ஊரில் பெப்ஸி நுழைந்திருப்பதைப் பற்றி கதை. இதிலும் கடைசி பக்கத்திற்காக மூன்று பக்கம் விவரணைகள்.

6.துரைப்பாண்டி

மும்பையில் குடும்ப வறுமைககாக இட்லி பக்கெட்டை தூக்கியலையும் சிறுவனின் கதை. இம்மாதிரியான சிறுவர்களின் வாழ்கையைப் பற்றியும், அவர்களின் ஏக்கங்களையும் பளிச்சென முகத்தில் அறைந்தார் போல சொல்லியிருக்கிறார்.
7. பேய்வீடு
வழக்கமாய் கிராமத்து மக்களிடையே புழங்கும் பேய்க் கதைகளும், அதை மிகைப்படுத்திச் சொல்லும், ஆட்களைப் பற்றியுமான கதை. எதிர்பார்த்த முடிவு.
8. நம்பிக்கை
நிலாவுல யாரு உக்காந்திருக்காங்க? என்று அப்பாவிடமோ அம்மாவிடமோ சிறு வயதில் கேட்டால் அங்க ஒரு ஆயா வடை சுட்டுக் கொண்டிருப்பாள் என்று சொன்னதை நாம் வளரும் வரையில் நம்பிக் கொண்டிருப்போம். அது போல சவ ஊர்வலத்துடன் ஏன் பொரியையும், சில்லறைக் காசையும் போடுகிறார்கள் என்று கேட்டதற்கு கிடைத்த பதிலை நம்பியிய பாண்டி என்கிற சிறுவனைப் பற்றிய கதை. கனவுகளில் ஆரம்பித்து, சட்டென ஃப்ளாஷ்பேக்குக்கு போய், விழித்த ஒரு வரியில் நிஜத்துக்கு வந்த ஸ்டைல் அசத்தல். கதை முடிந்த பின்னும் வாலாய் அதை விளக்குவது கொடுக்க வேண்டிய இம்பாக்டை கொடுக்காமல் விட்டு விடுகிறது.

9. சாமியாட்டம்

புத்தகத்துக்கான தலைப்புக் கதை. ஊரில் சாமியே ஆனாலும் தலித்துகளை இன்னும் புறக்கணிக்கிறார்கள் என்பதை கடைசி ஒரு வரியில் சுளீரென்று சாட்டையில் அடித்தாற் போல் சொல்லிய கதை.
10. விடிவெள்ளி
ஆட்டோ ட்ரைவர் ஒருவரின் மூத்த மகளுடய வரதட்சணை ப்ரச்சனையை மையமாய் வைத்த நிதர்சன கதை. இதன் முடிவை பெரும்பாலானவர்களுக்கு புரிந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இண்ட்ரஸ்டிங்
11. வேண்டுதல்
மகனை தேடியலையும் தம்பதிகளின் நம்பிக்கையை பற்றிய கதை. நல்ல கதை. இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கிறது. இதிலும் கதையை மீறிய விஷயங்கள்.
12.நகரம்.
இயந்தரமயமாகிவிட்ட நகர வாழ்க்கையில் மனிதத்தன்மையே இல்லை என்று நினைத்தவனுக்கு சடுதியில நடக்கும் ஒர் நிகழ்வு மூலமாய் இல்லை என்பதை  உணர்த்தும் ஈரமுள்ள கதை.
எல்லா கதைகளும் மும்பை, ராமேஸ்வரம் அதனைச் சுற்றியே சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கதைகளில் ஒரு கட்டுரைத்தன்மை இருப்பது கதை படிக்கும் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. அதே போல ஒவ்வொரு கதையிலும், கதை மாந்தர்களின் வேலை, அவர்களின் வாழ்க்கை நிலை, போன்றவற்றை எல்லாம் சொல்லிவிட்டுத்தான் கதைக்கே வருகிறார். அது எல்லாக் கதைகளுக்கு தேவையில்லை என்று எனக்கு படுகிறது. ஆனால் அதே விவரங்கள் கதையை மீறி நமக்கு பல விஷயங்களை அளிக்கவும் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
—————–
நன்றி-  http://cablesankar.blogspot.com/2012/01/blog-post_25.html

Popularity: 1% [?]

Posted in சிறுகதை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged , | Leave a comment