சம்பவம்-1
பன்னாட்டு தனியார் வங்கி ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் ஓர் இளம் பெண் வாரம் ஒருமுறை வந்து இவரை சந்தித்து பேசிவிட்டுப் போகிறார். தமிழ் மீடியத்தில் படித்த அந்த பெண்ணுக்கு ஆங்கிலத்தில்.. பேசவோ, எழுதவோ பெரிய தயக்கம் இருந்து வந்துள்ளது.
அத் தயக்கத்தினை போக்கி ஆங்கிலமும் எளிமையான மொழி தான் என உணர்த்தி, ஆங்கிலம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கில ஆசிரியர். மெத்தப்படித்தவர்களிடமும் தயக்கமின்றி ஆங்கிலத்தில் உரையாட முடிந்ததால் தான் அந்த வங்கியில் வேலை கிடைத்ததாக அப்பெண் குறிப்பிட்டார் என்னிடம்!
————

சம்பவம்- 2
இவரிடம் ஆங்கிலம் பயின்ற பலரும் இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனாலும் இவரது உழைப்பு தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பல புதிய மாணவர்கள் இவரை தேடி வந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். இவரைத் தேடி இவரது இல்லம் போனபோது, பழைய மாணவர்கள் சிலரையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அனைவருமே ஆசிரியர் வால்டர் ஜெயபாலனை புகழ்கின்றனர். பலர் அஞ்சல் அட்டை மூலம் தங்கள் சந்தேகங்களை கேட்டபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கிறார் இவர்.
————
வால்டர் ஜெயபாலன் இது தான் அவர் பெயர். 72 வயதாகும் இவரைப்பற்றி நண்பர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டு தொடர்பு கொண்டேன். பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தாலும் சென்னைத் தமிழுக்கு மாறாமல் இன்னும் தென்தமிழகத்தின் மொழிநடையில் பேசிய இவரின் பேச்சில் மனசை பறிகொடுத்தேன்.
என் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவம். நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் ஆங்கில ஆசிரியர் ஆங்கிலச்சொற்களுக்கு தமிழில் பொருள் கூறிக்கொண்டிருந்தார். ஆளாளுக்கு, பேனா, நோட் புக், டேபிள், சேர் என்று தமிழ்படுத்தி கேட்டுக்கொண்டிருக்க.. நான் மட்டும், “ப்ளாஸ்டிக்- என்றால் தமிழில் என்ன சார்” என்று இயல்பான சந்தேகத்தை கேட்டதும், நான் ஏதோ கிண்டல் செய்வதாக நினைத்து, என்னை குச்சியால் பின்னி எடுத்துவிட்டு, க்ளாஸ் ரூமுக்கு வெளியே முட்டி போட்டு நிற்க வைத்து விட்டார். இப்படியான ஆசிரியர்களையே சந்தித்து வந்திருக்கும் எனக்கு இவரின் இனிமையும், எளிமையாக புரியவைக்கும் மனநிலையும் கண்டு வியந்து போனேன். இவரிடம் பேசப் பேச.. அட.. இப்படி ஒரு ஆங்கில ஆசிரியர் எனக்கு கிடைக்காமல் போய் விட்டாரே என்று வருத்தம் மேலிட்டது மறுக்கவியலாத உண்மை.

வழக்கமான பாணியில் இல்லாமல் ஆங்கிலம் கற்பிப்பதற்கென்றே புதிய முறையையும் கண்டு பிடித்திருக்கிறார் வால்டர் ஜெயபாலன் அவர்கள்.
போனிக்(phonic)-என்று பெயரிடப்பட்ட அம்முறையில் – ஆங்கில உயிர் எழுத்துக்களான AEIOU என்பதை A= அ, E=எ, I=இ, O=ஒ, U=உ என்று குறித்துக்கொண்டு, மற்ற எல்லா ஆங்கில எழுத்துக்களையும் மெய்யெழுத்தாக கொள்ளச்சொல்லுகிறார் இவர்.
இப்படி எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தை வாசிக்கச்சொல்கிறார். இது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (குறிப்பாக ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு) எளிமையான முறை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
இவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொண்ட பலர் இன்று பல்வேறு இடங்களில் பணி புரிந்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இப்போதும் வால்டர் ஜெயபாலனைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுக்கொள்கின்றனர். ஏதாவது சந்தேகம் இருந்தால் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதினால் கூட நான் பதில் போடுகிறேன் என்று சொல்கிறார்.
இவரின் இரு மகன்களும் தற்போது வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார்கள். 1995ல் அரசு இவருக்கு ஓய்வைக் கொடுத்து விட்ட போதிலும், இன்றும் தன் பணிக்கு ஓய்வு கொடுக்காமல் உழைத்து வருகிறார்.
இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்லியாகவேண்டும். கடந்த பதினான்கு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு ஆங்கில மொழியை மிகவும் எளிமையாக போதித்து வரும் இந்த முன்னாள் ஆசிரியர், பணத்திற்காக அல்லாமல் இலவசமாக தொண்டாற்றி வருகிறார். இந்த ஆசிரியரைப் பற்றிய ஓரு விஷுவல் செய்தி குறிப்பு:
–
நன்றி:- ஜி தமிழ் தொலைக்காட்சி.
(மீள் பதிவு)
Popularity: 13% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: ஆங்கிலம், ஜிதமிழ் தொலைக்காட்சி, பாடம், மனிதர்கள், வால்டர் ஜெயபாலன், english, walter jeyabalan
சம்பவம்-1

பொதுமக்கள் குறைகேட்பு
ஒரு இளம் காதல் ஜோடி அவர்கள். பையன் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் இஸ்லாமிய மத்த்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் வீட்டில் தெரிய கடும் எதிர்ப்பு. அதுவும் பெண் குடும்பத்தினர் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போல. வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொள்கின்றனர்.
பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய அந்த பகுதி காவல் நிலையத்தார், பையனின் அண்ணனை அள்ளிக்கொண்டு வந்து ஸ்டேசனில் வைத்துவிட்டார்கள்.
புதுமணத்தம்பதியினர் தஞ்சம் அடைந்த இடம் புறநகர் காவல் ஆணையாளர் அலுவலகம். தாங்கள் விரும்பி திருமணம் செய்துகொண்டதாகவும், பையனின் அண்ணன் சிறைபட்டிருக்கும் செய்தியையும் புறநகர் கமிஷனரிடம் புகாராக தெரிவிக்கின்றனர். அவர்களின் எதிரிலேயே மைக்கில் (வாக்கி டாக்கி), அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை அழைக்கிறார் கமிஷனர். அவர் இல்லை. உடனடியாக அவரது செல்போனில் தொடர்புகொண்டு, இப்புகார் குறித்து கேட்கிறார். மென்று முழுங்கி எதிரிலிருந்து பதில் வருகிறது.
“மொதல்ல அந்த பையனை அனுப்புங்க.. இனிமேலும் இப்படி தப்பு பண்ணாதீங்க.., இவர்கள் இருவரும் மேஜர். அவர்கள் விரும்பி திருமணம் செய்துகொள்ள சட்ட்த்தில் இடம் இருக்கு. உடனடியாக பிடித்து வைத்திருக்கும் பையனை வெளியே அனுப்புங்க.., இங்கே இருந்து கல்யாணம் செய்துகிட்ட பொண்ணும், பையனும் வருவாங்க அவர்களிடமும் ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு அனுப்பீடுங்க.. இனியும் இப்படி தப்பா ஏதாச்சும் செய்யாதீங்க” என்று கொஞ்சம் கடுமையாகவே சாடுகிறார் கமிஷனர்.
புகார் கொடுக்க வந்தவர்கள் நன்றி சொல்லி திருப்தியுடன் செல்கிறனர்.
—-
சம்பவம்-2.

உடனடி ஆக்ஷன் - வாக்கி டாக்கியில் பேசும் கமிஷனர் ஜாங்கிட்
ஒர் அம்மாவும், பையனும் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். அவர் ஒரு தேசிய கட்சியை சேர்ந்தவர் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடமுடியும். அக்கட்சியின் அடையாள அட்டையை கழுத்தில் மாலை மாதிரி தொங்க விட்டிருந்தார். அவர்கள் முறை வந்ததும் அந்த அரசியல்வாதி பெண் கமிஷனரிடம் வந்து, வந்திருந்த அம்மா, பையனின் பிரச்சனைகள் குறித்து விளக்கினார். அவரின் அடையாள அட்டையை கவனித்தவர் கேட்டார்.
‘நீங்க யாரு?’
‘நான்.. —-கட்சியில…’
‘நீங்க அப்படி ஓரமாக போய் உட்காருங்க.. நான் பார்த்துக்கிறேன்.’
அந்த பெண்ணை அனுப்பி விட்டு, அவரை ஏன் அழைத்து வந்தீர்கள்.. உங்க பிரச்சனைக்கு நீங்க வந்தா போதும். சிபாரிசுக்கு யாரையும் அழைத்து வரவேண்டாம்’ என்று அறிவுறுத்தினார் கமிஷனர்.
————–

நன்றி சொல்லும் பெண்கள் கூட்டம்
மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நான் புறநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் நேரில் பார்த்தவை.
பகுதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் நடவடிக்கை இல்லை எனில் மேல் முறையீடு செய்வதற்கு காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். அப்படி இங்கு வருபவர்களின் பிரச்சனைகள் இரண்டொரு நாளில் தீர்த்துவைக்கப்படுகின்றன. நேரடியாகவே கமிஷனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உத்தரவிடுவதால்.. இது சாத்தியமாகிறது. தினம் குறைந்தது 50 முதல் 100 புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.
போலீசாரின் நிர்வாக வசதிக்காக சென்னை காவல்துறையை இரண்டாக பிரிக்கிறார் முதல்வர் கருணாநிதி. அப்படி 2008 ஆண்டு சென்னை புறநகர் பகுதியில் உதயமாகிறது சென்னை புறநகர் காவல் ஆணையர் அலுவலகம். அதன் முதல் ஆணையராக பெறுப்பேற்றுக்கொண்டவர் எஸ்.ஆர்.ஜாங்கிட்- ஐபிஎஸ்.

சென்னை புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட்
சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்ட பின் 2008ம் ஆண்டு 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஒரு கோடியே 73 லட்சத்து 71 ஆயிரத்து 636 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. அவற்றில் 366 (97 சதவீதம்) வழக்குகள் கண்டறியப் பட்டு, ஒரு கோடியே 55 லட்சத்து 57 ஆயிரத்து 964 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. 2009ம் ஆண்டு 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 348 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. அவற்றில் 747 (81 சதவீதம்) வழக்குகள் கண்டறியப்பட்டு, ஒரு கோடியே 79 லட்சத்து 99 ஆயிரத்து 830 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. (ஆதாரம்- தினமலர். )
சென்னையோடு ஒப்பிடும் போது மீட்கப்பட்ட பெருட்களின் எண்ணிக்கை, கண்டுபிடிக்கப்பட குற்றவாளிகளின் எண்ணிக்கையும் புறநகரில் அதிகம். அதற்கு முக்கிய காரணமே புறநகர் ஆணையர் ஜாங்கிட் தான் என்று சொல்லுகின்றனர் பத்திரிக்கை நண்பர்கள்.
தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் கடந்த ஆண்டு அறிக்கை கூட இதனை உறுதி செய்கிறது.

புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட்
பொதுமக்களின் குறை நிவர்த்திக்கு அதிக அக்கரை செலுத்தும் இவரை தினமும்(ஞாயிறு நீங்களாக) மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை சந்திக்கலாம்.
சென்னையை விட புறநகர் பெரிய பகுதி, அதிலும் மக்கள் தொகை அதிகம் நிறைந்த ஏரியாக்கள் கொண்ட பகுதி இதில் இவ்வளவு சிறப்பாக பணியாற்றி வரும் ஆணையர் ஜாங்கிட்-க்கு ஒரு ராயல் சல்யூட்! புறநகர் வாசியா நீங்கள்.. காவல் நிலையத்தில் உங்கள் புகார் மீது நடவடிக்கை இல்லையா.. புறப்படுங்கள் சென்னை புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட் -ஐ பார்ப்பதற்கு!
————–
Popularity: 10% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: chennai, jangid, jangid.ips, police
இனிய நண்பர்களே…
இதோ.. ஒரு வாய்ப்பு.. நூல்கள் மட்டுமல்லாது, வலைப்பதிவுகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. நீங்களும் முயற்சித்து பாருங்களேன்!
வெற்றி பெறப்போகும் நண்பர்களுக்கு இப்போதே வாழ்த்துக்கள்!
—–
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.
1. சுஜாதா சிறுகதை விருது: சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு
2. சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு
3. சுஜாதா கவிதை விருது: சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு
4. சுஜாதா உரைநடை விருது: சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு
5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு(blog) அல்லது இணைய தளத்திற்கு(web site)
6. சுஜாதா சிற்றிதழ் விருது: சிறந்த சிறுபத்திரிகைக்கு
விதிமுறைகள்
1. முதல் நான்கு பிரிவுகளில் 2008-2009 ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ பதிப்பாளரோ, அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.
2. 5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: sujathaawards@gmail.com
3. 6 ஆவது பிரிவில் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து பிரதிகள் அனுப்பப்படவேண்டும். அந்த ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் ஒரு பிரதி வீதம் அனுப்பினால் போதுமானது.
4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முண்ணனி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும். தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.
5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31, 2010
6. விருதுகள் மே. 3, 2010ஆந்தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
சுஜாதா விருதுகள், உயிர்மை,11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018,
மின்னஞ்சல்:sujathaawards@gmail.com தொலைபேசி:91-44-24993448
——
டிஸ்கி- எல்லோருக்கும் தெரியும்னாலும் என் பங்குக்கு ஒரு விளம்பரம். ![]()
Popularity: 3% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Tags: உயிர்மை, சுஜாதா, பதிவர் சதுரம் ;-)), வலைப்பதிவர், விருது
பொன்ஸ்