July 2nd, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

கடந்த ஞாயிறு மதியம் வேளச்சேரி செக்போஸ்ட் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் மதிய சாப்பாட்டிற்காக போய் இருந்தேன். சாப்பிடவே சிரம்பப்படும் அளவுக்கு மிகுந்த காரமாக இருந்தது. சாப்பாடு முடிந்த வெளியே வந்தோம். சிகரெட்டை புகைத்து விட்டு கதையளந்தபடி நடந்தோம். சந்துக்குள்ளிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும் நண்பரை அனுப்பி விட்டு, தியாகராயா நகர் போக வேண்டி இருந்ததால்.. நான் மட்டும் நிறுத்தம் நோக்கி நடக்கத்தொடங்கினேன். பத்தடி தூரம் போனதும் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இனோவா வண்டி ஒன்று எதன்மீதோ மோதி, தடுமாறி ஓடத்தொடங்கியது. கடக் என்ற அந்த மோதல் சத்தம்.. இப்போதும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வண்டி போன பின் சாலையைப் பார்த்தால்.. ஒரு நாய். அதன் மீது தான் இனோவா ஏறி இறங்கி ஓடியது. அந்த ஜீவனால் கத்தக்கூட முடியவில்லை. நானோ சாலையில் வலது புறத்தில் இருக்கிறேன். அந்த நாயோ இடது புறம் அடிபட்டு துடிக்கிறது. இந்த பக்கம் நானும் அந்த பக்கம் இன்னொரு நபரும் மட்டும் தான் நாயை பார்த்தபடி நின்றோம். நடந்தும், வாகனத்திலும் போவோர் எல்லோருக்கும் ஏதோவொரு அவசரகாரியமிருப்பது போன்று விரைந்து கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் துடிதுடித்து நாய் இறந்து போனது. சாலையில் கிடந்த அதன் உடலை ஓரமாக ஒதுக்கிப் போட்டால்.. நசுங்காமலாவது இருக்கும் என்று நான் நினைத்து.. சாலையை கடக்க முனைந்த போது.. அந்த பக்கம் இருந்த நபர்.., இறந்து போன நாயின் கால் பற்றி ஓரமாகப் போட்டு விட்டு தன் திசை நோக்கி நடக்கலானார். நானும் பேருந்து நிறுத்தம் போனேன். அதன் எதிரில்.. வனத்துறையினரால் ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. “மான்கள் உலாவும் பகுதி.. வாகனங்களை கவனமாக ஓட்டுங்கள்”  :(

-OoO-

“எது நடந்ததோ.. அது நன்றாகவே நடந்தது.. எது…” இப்படி துவங்கும் ஒரு வசனத்தை, குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் கண்ணன் கூற, அர்ஜுனன் கேட்பது மாதிரியான வரையப்பட்ட படத்தில் பார்த்து இருப்பீர்கள். நம்மில் பலரும் அது கீதையில் கண்ணன் கூறியது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு வாசகம் பகவத்கீதையில் எங்குமே காணக்கிடைக்க வில்லை.

இது குறித்து, பாஜக அமைப்பாளர் ஒருவரிடம் பேசியபோது அவர் சொன்ன தகவல் மிகவும் வியப்பானதாக இருந்தது. உண்மையில் இப்படி ஒரு வாசகம் கீதையில் இல்லை என்று ஒப்புக்கொண்டார். இதனை பரப்பிவிட்டவர்கள் கம்யூனிஸ்ட் காரர்கள் தான் என்றும் சொன்னார். எது எப்படியோ.. கீதையில் இல்லாத வாசகம்.. கிதையில் இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை ஏன் இவர் எதிர்த்து ஒரு வழக்கோ, ஆர்ப்பாட்டமோ செய்யவில்லை என்பதுதான் எனக்குள் எழும் கேள்வி.

-oOo-

என்னிடம் இருந்த K750i மொபைல் போனுக்கு வயசாகி விட்டது. போட்டோ எடுக்க முடியவில்லை. சில பல பட்டன்கள் செயல்படவில்லை. அதை எக்சேஞ்சில் மாற்றி விடவும் மனதில்லை. அது நான் நேசிக்கும் ஒருவரின் பரிசு. பேசாமல் அதை பத்திரப்படுத்தி விட்டேன். இன்னொரு நேசிப்பாளரின் உதவியால் கடனில் K790i என்ற சோனி மாடலை வாங்கி விட்டேன்.

சுமிக்‌ஷா மொபைலில் தான் வாங்கினேன். அவர்களின் வியாபரத்தனம் இப்போது தான் புரிந்தது. முழு பணத்தை கொடுத்து வாங்கினால்.. VAT போடாமல் பில் தருகிறார்கள். கிரிடிட்கார்ட் மூலம் வாங்கினால்.. வாட், கார்டுக்கு சர்விஸ் டாக்ஸ் 2% என்று தீட்டுகிறார்கள். இதை நண்பர் ஒருவரிடம் சொன்ன போது, சென்னைசில்க்ஸ் ஜுவல்லரி மாதிரியான பெரிய நகைக்கடைகளிலும் கூட இப்படித்தான் நடக்கிறது என்றார். அரசை ஏமாற்ற நம்மவர்களுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும்.  என்னமோ போங்க!

-OoO-

பிரிவின் துயரம் கொடுமையானது. அதை விட கொடுமையானது நிராகரிப்பின் வலி. என்ன செய்தாலும் நிலைகொள்ள மறுக்கும் மனதை தேற்ற தெரியவில்லை. வலி எதிர் தரப்பிலும் இருக்கலாம். காலம் ரணங்களுக்கு மருந்திடும். மிச்சமிருக்கும் வடுக்களை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. :( அதுவரை..,   கவிதை எழுதலாம்.. ஏதாவது படிக்கலாம்… இல்லை எனில் பேசாமல்  தண்ணியடிச்சுட்டு படுத்துக்கிடலாம். எந்த வேலையும் ஓடாமல்.. மூளையை தின்றுகொண்டிருக்கிறது நினைவுகள். எதையும் வெளிப்படையாக சொல்லக்கூட முடிவதில்லை என்ற எண்ணமே பெரிய அசூயையை ஏற்படுத்துகிறது. மீண்டு வர முயற்சிக்க வேண்டும். ஒரு இடத்தில்.. கிடைக்காதது இன்னொரு இடத்தில் கிடைக்கும் போது பாழும் மனது ஆசுவாசப்படலாம்.  முன்பு எழுதிய அனுப்ப மறந்த கவிதைகளை திரும்பவும் படித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

-oOo-

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

June 28th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

சென்னையில் ஒரு போலீஸ்காரருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு அதிர்ச்சித் தகவலைச்சொன்னார். போக்குவரத்துக்காவலர்கள் அநேக வண்டியை மறித்து, அது இருக்கா, இது இருக்கா என்றெல்லாம் விசாரிக்கிறார்கள். பைன் எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்துவார்கள். அதிலும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்காமல் ஓட்டக்கூடாது என்று ஒரு சட்டமே இருக்கிறதாம். இவர்கள் அப்படியான ஒரு வண்டி கிடைத்துவிட்டால் கொண்டாட்டம் தான். ஆனால் சென்னையில்( தமிழகத்திலும் கூட) ஓடும் எந்த காவல்துறை வண்டிக்கும் இன்சூரன்ஸ் என்பதே இல்லையாம். ஏதாவது ஒரு விபத்து நடந்துவிட்டால்.. பாவம் அந்த போலீஸ் டிரைவர், அவரின் வேலைக்கே உலை வைத்துவிடும் என்பதால்.. பயந்து பயந்தே வாகனங்களை அவர்கள் ஓட்டி வருவதாகச் சொன்னார். மக்களே.. எதில் வேண்டுமானாலும் அடிபடுங்க… போலீஸ் வண்டியில மட்டும் அடிபட்டுடாதீங்க!

-oOo-

யெ : ஓம்  பூர் புவ ஸ்வக.. தட்சபிதூர்.. வரேன்யம்.. பர்கோ…

ஸ் :  மந்திரம் ஓதுற.. வாயில குண்டு வைக்கணும்

பா : You Bastard.. I Will Kil You..

: இந்த நாட்டுல யாருக்குமே சமூக அக்கறை கிடையாது

பா: அமெரிக்கக்காரன் உலகை அடிமைப்படுத்த நினைக்கிறான். நாமும் அதுக்கு ஒத்தாசை பண்ணிகிட்டு இருக்கோம்

: Good job.. All indians Are Fools

தி : எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.. இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்-னு நினைக்கிறது எப்படி தப்பாகும்?

மேற் சொன்ன எந்த வாசகமும் உண்மைக்கு புறம்பானது அல்ல. அதே சமயம் நான் அவற்றை பிரயோகப்படுத்தவும் இல்லை. இது ஒரு கற்பனையே!

“தசாவதாரம்” படம் நேற்று பார்த்துட்டேன். :)

-OoO-

இலக்கிய ஆர்வலர்களுக்கு நவீன விருட்சம் என்ற பெயர் நிச்சயம் அறிமுகமாகி இருக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கும் இலக்கிய இதழ். அது போலவே அழகியசிங்கர் என்ற கவிஞரையும் தெரிந்திருக்கும். வங்கி ஒன்றில் பணியாற்றிக்கொண்டே, தொடர்ந்து நவீன விருட்சம் இதழை கொண்டுவருகிறார். இப்போது வலைப்பதிவு பக்கமும் வந்துவிட்டார். ஜமாலன், நாகார்ஜூனன், ஜ்வேராம்சுந்தர், பைத்தியக்காரன், வளர்மதி, வே.மதிமாறன் வரிசையில் அழகியசிங்கர். வலைப்பதிவர்களுக்கு செம ஜாலி தான் வித்தியாசமான சிந்தனைகளையும், எழுத்துக்களையும் இணையத்திலேயே வாசிக்க கிடைக்கத்தொடங்கி விட்டது. இனி அழகிய சிங்கரின் வலைப்பதிவை படிக்க நவீன விருட்சம் என்ற தலைப்பின் மேல் சொடுக்குங்கள்.

-oOo-

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

June 19th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

மாயமோ? என்னமோ தெரியலை.. எனக்கு பயர் பாக்ஸ் மீது கொள்ள ஆசை இருந்துவருகிறது. ஜூன் 18ம் தேதி பயர்பாக்ஸின் மூன்றாவது வர்சன் வெளிவருகிறது. அதனை அதே நாளில் தரவிரக்கிக்கொள்ளுங்கள் என்று நம்ம கோபி எழுதி இருந்தார். இந்திய தேதியா.. அமெரிக்க தேதியான்னு தெரியலை. ஆனா.. அமெரிக்க தேதியில.. நான் புதிய பயர்பாக்ஸை தரவிறக்கிக்கொண்டேன். இனி பயர் பாக்ஸில் align=justify தொல்லை இல்லாமல்.. தமிழை படிக்க முடியும். :) அவ்வளவு பெரிய.. முயற்சியில அடியேனின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை என்னும் போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

-OoO-

மருத்துவர் ராமதாசால் தொடங்கப்பட்ட, வன்னிய ”தமிழ் படைப்பாளிகள் பேரிக்கா”வில் முக்கிய பதவியில் இருந்த ஒரு கவிஞர்.. பலரின் கேள்விக்கனைகளை பொறுக்க மாட்டாமல்.. தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்.  கொஞம் தன்மானத்துடன் சிந்திந்த அவருக்கு வாழ்த்துக்கள். இந்த பின்நவினத்துவ படைப்பிலக்கிய புலியின் செயல்.. பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், மருத்துவரைய்யாவுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. இந்த மாதம் அவருக்கு ஆகாத மாதம் போலும்..! :) {மறைந்த மூப்பனார் பேசுவதை கவனித்தவர்கள் எல்லோரும் இன்னொரு விசயத்தையும் கவனித்திருப்பார்கள். அது தான் பேரிக்கா.. காங்கிரஸ் பேரியக்கத்திலே… என்று சொல்லுவதற்கு பதில்.. அவர் எப்போதும் பயன்படுத்தும் சொல்.. “காங்கிரஸ் பேரிக்காவிலே..” } அது தான் மேலே சொன்னா பேரிக்கா…

-oOo-

மந்திர கம்பளம் கதை படித்திருக்கிறீர்களா.. வாண்டுமாமா என்ற குழந்தை எழுத்தாளர் எழுதிய சிறுவர் நாவல். என் சிறுவயதில் வாசித்திருக்கிறேன். பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய பிரபலமான எழுத்தாளர் இவர்.  இப்போது அச்சில் இருக்கிறதா தெரியவில்லை. இணையத்தில்.. யாரோ.. ஒரு புண்ணியவான்.. அந்த முழுக்கதையையும் சேமித்து வைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அதன் சுட்டி கொடுத்திருக்கிறேன். பழைய நாட்களின் நினைவுக்கு திரும்புகிறவர்கள்/ விரும்புகிறவர்கள் படித்துப் பார்க்கலாம்.

-)(O)(-

மீடியா பற்றி ஒரு கட்டுரை எழுதத்தொடங்கி இருக்கிறேன். பத்திரிக்கை உலகிலேயே பல காலம் இருந்து விட்டு, அதில் இருக்கும் ஊழல்கள் பற்றி பல சந்தர்ப்பங்களில் புலம்பி இருக்கிறேன். இப்போது தொலைக்காட்சி ஊடகத்தில் நுழைந்த பின் தான் இங்கே இருக்கும் கோளாறுகள் புலப்படத் தொடங்கி இருக்கின்றன. பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை உள்ளடக்கிய.. கட்டுரையாக அது உருவாகி வருகிறது. சமயம் வாய்க்கும் போது முழுவதும் முடித்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இது அக்கட்டுரை பற்றிய விளம்பரம்..

-OoO-

வைரமுத்து எழுதிய தண்ணீர் தேசம் மின்னூலாக இணையத்தில் கிடைக்கிறது தெரியுமா? வேண்டுவோர் இங்கே சொடுக்கி பெறலாம். நன்றி: மதுரை திட்டம்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!