விடுபட்டவை 29.மே.2008

நீங்கள் வலைப் பதிவரா? இது உங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். உங்களின் சுற்றம் மற்றும் உறவினர்களிடம் வலைப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளுவதில் நிறைய சிரமம் இருந்திருக்கும். அவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றி புரியவைத்து, திரட்டிகள் குறித்து பேசி.. நானும் அதுல எழுதுறேன். உலகம் முழுக்க இருக்கும் பல தமிழர்கள் எனக்கு இதன் மூலம் நண்பர்களாகி இருக்காங்க.. அப்படீன்னு சொல்லுறதுக்குள்ள தாவு தீர்ந்து போய் இருக்கும்.

நீங்கள் பட்ட கஷ்டம் இனி குறையப்போகிறது. வார இதழ்கள், தினசரிகள், தொலைக்காட்சிகள் என்று செய்தி வழியாக பலருக்கு வலைப்பதிவுகளிப் பற்றிய அறிமுகம் ஏற்பட்டிருந்த போதாலும், இப்போது வலைப்பதிவுகள் அடுத்த கட்டத்தை நோக்கி மீடியாவில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

தமிழில் ஒரு பிரபலமான சானலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றில் ஒரு வலைப்பதிவர் பாத்திரத்தை உருவாக்கப் போகிறார்கள். அந்த ப்ளாகர் கேரட்டர் குறைந்தது பத்து வாரங்களுக்கு மேல் அத்தொடரில் வரப்போகிறது. அதற்கான பகுதியை அனேகமாக நம் வலைப்பதிவர் ஒருவர் தான் எழுதுவார் என்று நினைக்கிறேன். அவர் யார்.. அந்த பாத்திரத்தின் தன்மை குறித்தும், அது எந்த சானல் என்பது குறித்தும் கேள்வி கேட்கக்கூடாது. இப்போது தான் பேச்சு வார்த்தையில் போய்க்கொண்டிருக்கும் விசயம் என்பதால்.. எல்லாம் நல்லபடியாக முடிந்து, வேலைகள் தொடங்கி, சூட்டிங் போய்.. அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!

-oOo-

சென்னையை தூய்மையாக்கும் வேலையில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. சாலையில் சிறுநீர் கழித்தல், கும்பை போடுதல், எச்சில் துப்புதல் போன்ற செய்கைகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தமறுப்பவர் அசுத்தப்படுத்திய இடத்தை அவரே.. உடனடியாக அதிகாரிகள் முன் சுத்தம் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சென்னை மாநகராட்சி. ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரப்போகும் இச்சட்டத்திற்கு மே31ம் தேதி சென்னையில் இருக்கும் 155 வார்டுகளிலும் பேரணி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறதாம் மாநகராட்சி.

எல்லாம் சரி சாமீ… கேட்க சந்தோசமா இருக்கு. ஆனா.. நான்கு முனை, மூன்று முனை, இரு முனை சந்திப்புகள் நிறைந்த சென்னையில் எத்தனை இடங்களில் சிறுநீர்கழிக்க இடம் கட்டப்பட்டுள்ளது? சில இடங்களில் கட்டப்பட்டிருக்கும் நாற்றமடிக்கும் இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கூட ஆண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு? கட்டணக்கழிப்பிடம் கூட சரியா இல்லை. கோட்டையில் தொடங்கும் சாலை (அண்ணாசாலை!) சைதாப்பேட்டை வரை(அதற்கு மேலும் கூட) நீண்டு கிடக்கிறது, நான் குறிப்பிட்டா வழியில் எங்கும் கட்டண கழிப்பறை வசதி இருப்பது போல நினைவு இல்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்யாத பட்சத்தில் சாலையோரம் நிறுத்தி இருக்கும் வாகன மறைவைத் தேடி ஏன் ஓடப்போகிறோம். அது போலவே குப்பைத் தோட்டிகள் நிறைந்து வழிகின்ற அவலமும் எங்கும் காணக்கிடக்கிறது.

சரியான வசதிகளை செய்து கொடுக்காமல் தீட்டப்படும் திட்டமும், சட்டமும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை இவர்கள் உணர்ந்துகொண்டால் நல்லது.

-oOo-

இன்று முடி வெட்டப் போய் இருந்தேன். கடையில் முடி திருத்துபவர் ஒருவர் தான் இருந்தார். அவர் இளம் வயதுக்காரராக இருந்தார். எப்படியும் இருபத்தி ஐந்து வயது தான் இருக்கும். எனக்கு முன்பாக இருவர் காத்திருந்தார்கள். எப்படியும் லேட் ஆகும் என்று தோன்றியது. என் வருகையை அவருக்கு உணர்த்திவிட்டு, அருகில் இருந்த தேனீர் கடையில் தேனீருக்கு சொல்லி விட்டு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தேன். தேனீர் குடித்து, சிகரெட்டும் புகைத்து, சலூனை எட்டிப் பார்த்தேன். அடுத்து நீங்க தான் என்பது போல கடைக்காரர் சைகை செய்தார். கடைசி பஞ்சு வரை சிகரெட்டை இழுத்து புகைத்து விட்டு, உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன்.

இங்கு அக்குள் முடி அகற்றப்படமாட்டாது என்று முடிதிருத்துவோர் சங்கத்துச் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்கள். எத்தனையோ க்ரீம்கள் வந்த பின்னுமா இங்கு வந்து கையை தூக்கிக்கொண்டு நிற்கிறார்கள் என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தது. அப்படி தூக்காமலா இப்படி எழுதி போட்டிருப்பார்கள் என்ற எண்ணமும் உடனே தோன்றியது.

என் முறை வந்ததும் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். நான் எல்லா இடங்களிலும் வேலைப் பார்ப்பவரின் பேரை கேட்பது போல அங்கேயும் அந்த இளைஞன் பேரை கேட்டேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி இருக்க வேண்டும். சிரித்த முகத்துடன் தன் பெயரைச் சொன்னார். அப்புறம் என்னைப் பற்றி கேட்டார் சுருக்கமாக சொன்னேன். நிதானமாக வேலை செய்தார். வேலையில் அவரின் கவனம் என்னைக் கவர்ந்தது. இடையிடையே பேசிக்கொண்டோம். எல்லாம் முடிந்ததும் அவர் கேட்ட தொகையை விட கூடுதலாக கொஞ்சம் கொடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தேன். நன்றி சொன்னார். கூடவே இன்னொன்றையும் சொன்னார். எனக்கு மனம் கணத்து வெளியில் வந்தேன்.

‘நானும் நாலுவருடமா இதே வேலையைச் செய்யுறேன் சார்.. யாருமே என்கிட்ட பேரு கேட்டதில்ல. என்னமோ தெரியலை சார்.. சந்தோசமா இருந்துச்சு’ என்றார். சக மனிதனின் பேர் கேட்பதில், என்ன வந்து விடப்போகிறது. அது எதிராளிக்கு மகிழ்வளிக்கும் செயலாக இருக்கும் நிலையில் போகின்ற எல்லா இடங்களிலும் பேர் கேட்பதோடு ஒரு புன்னகையையும் உதிர்த்துவிட்டு வருவதில் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது.

-oOo-

‘ஸ்ரீசாந்தை ஏன் ஹர்பஜன்சிங் அடித்தார் தெரியுமா?’

‘தெரியாது’

‘டேய் மச்சான்.. சிடி வாங்கி வச்சிருக்கேன். மேட்ச் முடிந்ததும் குருவி படம் பார்க்கலாம் வா..’ன்னு ஸ்ரீசாந்த் கூப்பிட்டாராம்.

– வழக்கம் போல குருவி படம் மீது கொலைவெறியோடு அலையும் நண்பர் விஸ்வா அனுப்பிய குறுச்செய்தி தான் இது.

-oOo-

வரும் ஜூன் 1ம் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இருபத்தியெழாவது ஆண்டு நிறைவடைகிறது(ஜூன்1.1981). அதே நினைவோடு2008. ஜூன் 1ம் தேதி சென்னையில் இருக்கும் ரஷ்யகலாச்சார மையத்தில் மாலை 5.30 மணிக்கு யாழ் நூலகம் குறித்த ஆவண/விவரணைப் படம் திரையிடல் இருக்கிறது. ஐம்பது நிமிடப் படம் என்பதால் சரியான நேரத்திற்கு வந்துவிடவும். திரையிடலுக்குப் பின் கலந்துரையாடல் இருக்குமாம். படத்தை எடுத்திருப்பது சக வலைப்பதிவர் தம்பி, சோமிதரன்.

அப்ப மறக்காம மாலை 5.30மணிக்கு, ரஷ்யன் கலாச்சார மையத்தில் சந்திக்கலாம். நீங்களும் வாங்க! உங்கள் நண்பர்களுக்கும் தகவல் கொடுத்து வரச்சொல்லுங்க!!

-oOo-

This entry was posted in அனுபவம், விடுபட்டவை and tagged , , , , . Bookmark the permalink.

15 Responses to விடுபட்டவை 29.மே.2008

  1. //தமிழில் ஒரு பிரபலமான சானலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றில் ஒரு வலைப்பதிவர் பாத்திரத்தை உருவாக்கப் போகிறார்கள். அந்த ப்ளாகர் கேரட்டர் குறைந்தது பத்து வாரங்களுக்கு மேல் அத்தொடரில் வரப்போகிறது. அதற்கான பகுதியை அனேகமாக நம் வலைப்பதிவர் ஒருவர் தான் எழுதுவார் என்று நினைக்கிறேன். அவர் யார்.. அந்த பாத்திரத்தின் தன்மை குறித்தும், அது எந்த சானல் என்பது குறித்தும் கேள்வி கேட்கக்கூடாது. இப்போது தான் பேச்சு வார்த்தையில் போய்க்கொண்டிருக்கும் விசயம் என்பதால்.. எல்லாம் நல்லபடியாக முடிந்து, வேலைகள் தொடங்கி, சூட்டிங் போய்.. அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!//

    சஸ்பென்ஸ் தாங்கலை. சீக்கிரம் சொல்லுங்க. சன் டிவியின் கோலங்கள் தொடரில் தொல்காப்பியன் வலைப்பூ தொடங்கப் போறாரா என்ன?

  2. தங்களின் எழுத்துக்கள் யதார்த்தமாக இருக்கிறது. உங்களை முதன் முதலாக விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில்தான் சந்தித்தேன். தாங்கள் பாடம் எடுத்தவிதமும் நன்றாக இருந்தது. விடுபட்டவைகளை விடுபடாமல் எழுதுங்கள் தோழரே. நன்றி.

  3. பாலா,

    // சரியான வசதிகளை செய்து கொடுக்காமல் தீட்டப்படும் திட்டமும், சட்டமும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை இவர்கள் உணர்ந்துகொண்டால் நல்லது.//

    சென்னை மாநகராட்சியின் ஒண்ணுக்கு விய்சயம் குறித்து நான் நந்தாவின் பதிவில் சொன்னது.

    ————> <————–
    http://blog.nandhaonline.com/?p=43

    சமீபத்தில் சென்னை மாநகராட்சி ரோட்டில் ஒண்ணுக்குப்போனால் (நாய்களுக்கு அல்ல) அபராதம் என்ற ஒரு சட்டம் கொண்டுவந்ததாக நினைவு. ( அமுல்படுத்தப்பட்டு விட்டதா???).

    மாநகரில் பயணிக்கும் ஒருவனுக்கு ஒண்ணுக்கு வந்தால் என்ன செய்வான்? அதிக பட்சம் அவனால் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க முடியுமா? அதற்குள் அவன் ஒண்ணுக்கு போயே அக வேண்டும் என்பது இயற்கையின் விதி. அந்த நிலையில் அவன் சுகாதரமாகச் செல்ல 30 நிமிட தூரத்தில் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். அதை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுத்தான்…. ரோட்டில் ஒண்ணுக்குப்போனால் அபராதம் என்ற ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும்…. முதலில் சட்டப்படி நடக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவிட்ட்டுத்தான் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிக்க வேண்டும். அதுதான் முறை.

    அப்படி இல்லை என்றால் சட்டம் எதற்கும் பயன்படாமல் போய், விதி விலக்கே சட்டமாய் இருக்கும்.

    ——–> <—————-

    அரசாங்கமோ , நகராட்சியோ உணரப்போவது இல்லை. நமது வாழ்விற்குள்ளாவது நல்ல சமுதாயத்தைக் கண்டுவிடமுடியும் என்பதில் நம்பிக்கை போய்விட்டது. :-(((

    ****
    அக்குளில் சிரைக்கச் சொல்லும் கொம்பன்கள் கேவலப்பிறவிகள். இன்னும் இருக்கிறார்கள். நல்ல வேளை அடியிலும் சிரைக்கைச் சொல்லாமல் விட்டார்கள்.
    குழந்தைகளுக்கு மட்டும் இலவசமாக முடிவெட்டுவதற்காக சிகை அலங்காரத்தில் சில நால் பயிற்சி எடுத்தேன் . அப்படியே கிடப்பில் போட்டாகி விட்டது. :-(( . தொடரவேண்டும்.

    //மகிழ்வளிக்கும் செயலாக இருக்கும் நிலையில் போகின்ற எல்லா இடங்களிலும் பேர் கேட்பதோடு ஒரு புன்னகையையும் உதிர்த்துவிட்டு வருவதில் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது.//

    முடிவெட்டுபவரை மனிதராகவே பார்க்காத் காலத்தில் பெயரைக் கேட்பதாவது. நீங்கள் மனித நேயம் மிக்கவர் என்பதில் சந்தேகம் இல்லை.

    **
    மறுபடியும் சேரப்போகும் வேலை உங்களுக்கு சிறப்பாக இருக்கட்டும்.

  4. இந்தப் பெயரைக் கேட்கும் வழக்கம் எனக்கும் இருக்கு.

    நம்மகூட வர்ற சுற்றம் நட்புதான் அப்பப்பத் திட்டுவாங்க.
    ‘பெயரைக்கேட்டு என்ன செய்யப்போறே?’ன்னு.

    அதெப்படிங்க ….பின்னே எப்படிக் கூப்புட்டுப் பேசுவது?
    இல்லே பெயர்ன்னு ஒன்னு எதுக்குத்தான் இருக்காம்?

  5. குசும்பன் says:

    //அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!//

    இரகசியம் என்று சொல்லி அபி அப்பாவிடம் மட்டும் சொல்லவும்.

    //பேர் கேட்பதோடு ஒரு புன்னகையையும் உதிர்த்துவிட்டு வருவதில் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது.//

    ரொம்ப நல்லவிசயம் அண்ணே!

  6. // எல்லாம் முடிந்ததும் அவர் கேட்ட தொகையை விட கூடுதலாக கொஞ்சம் கொடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தேன்.//

    பெயர் கேட்டது, குசலம் விசாரித்தது எல்லாம் சரி தான்,
    கூடுதல் பணம் கொடுத்தது தான் உதைக்கிறது,
    உங்களை விட அவர் கீழே தான் இருக்கிறார் என்று குறிப்பால் உணர்துகிறீர்களா,
    மேலும் இது எல்லோரிடமும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணும்.
    கூடுதல் பணம் கொடுத்தால் வழக்கமாக வைத்திருக்கும் போர்டை மறைத்து விட்டு உங்களுக்கு அக்குள் வளித்தாலும் வளிக்கலாம்.

    //சஸ்பென்ஸ் தாங்கலை. சீக்கிரம் சொல்லுங்க. சன் டிவியின் கோலங்கள் தொடரில் தொல்காப்பியன் வலைப்பூ தொடங்கப் போறாரா என்ன? //

    எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு போட்டுடைகிரிங்க்களே லக்கி!
    அது நீங்கதான்னு எங்களுக்கு தெரியும்

    வால்பையன்

  7. //லக்கிலுக் May 29th, 2008 at 11:25 am
    //தமிழில் ஒரு பிரபலமான சானலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றில் ஒரு வலைப்பதிவர் பாத்திரத்தை உருவாக்கப் போகிறார்கள். அந்த ப்ளாகர் கேரட்டர் குறைந்தது பத்து வாரங்களுக்கு மேல் அத்தொடரில் வரப்போகிறது. அதற்கான பகுதியை அனேகமாக நம் வலைப்பதிவர் ஒருவர் தான் எழுதுவார் என்று நினைக்கிறேன். அவர் யார்.. அந்த பாத்திரத்தின் தன்மை குறித்தும், அது எந்த சானல் என்பது குறித்தும் கேள்வி கேட்கக்கூடாது. இப்போது தான் பேச்சு வார்த்தையில் போய்க்கொண்டிருக்கும் விசயம் என்பதால்.. எல்லாம் நல்லபடியாக முடிந்து, வேலைகள் தொடங்கி, சூட்டிங் போய்.. அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!//

    சஸ்பென்ஸ் தாங்கலை. சீக்கிரம் சொல்லுங்க. சன் டிவியின் கோலங்கள் தொடரில் தொல்காப்பியன் வலைப்பூ தொடங்கப் போறாரா என்ன?
    ///

    லக்கி நீங்களும் சீரியல் பாக்குறீங்களா ??????

    என்றும் அன்புடன்
    இளையகவி
    http://dailycoffe.blogspot.com

  8. குசும்பன் May 29th, 2008 at 12:27 pm
    //அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!//

    இரகசியம் என்று சொல்லி அபி அப்பாவிடம் மட்டும் சொல்லவும்.

    சூப்பரு..இதை நான் வழிமொழிகிறேன்

  9. மூச்சா பிரச்சனையை அமெரிக்காவில் எப்படி சமாளிக்கிறார்கள் என்றால் (நல்ல சில விஷயங்களுக்கு அமெரிக்கவை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை).

    இங்கே உள்ள பெட்ரோல் பங்குகள், கடைகள் என எல்லாவற்றிலும் நுழைந்து உங்கள் ரெஸ்ட்ரூமை(டாய்லெட்) பயன்படுத்தலாமா எனக் கேட்டு பயன்படுத்தலாம். பொதுவாக எல்லா கடைகளிலும், உணவகங்களிலும் இதற்கு அனுமதி உண்டு. வெகு சில நேரங்களில் ஒழுங்காக பராமரிக்கப்படாமல் இருப்பதும் உண்டு. கடைகளில் இப்படி நுழைபவர்கள் ஏதேனும் வாங்கிச் செல்ல வாய்ப்புள்ளது. வியாபார நோக்கத்திற்கேனும் தற்போது கடைகளுடன் கூடிய பெட்ரோல் பங்குகளில் இப்படி டாய்லெட் திறந்து வைக்கலாம்.

    இதிலும் பலநடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக வாகன வசாதிகள் இல்லாத அடித்தட்டு மக்கள் எங்கே செல்வது? கட்டண/கட்டணமற்ற ஆனால் ஒழுங்காக பராமரிக்கப்படும் கழிப்பிடங்கள் தேவை. அதே நேரம் மக்களும் இவற்றை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்.

    முடி திருத்துபவர், செக்யூரிட்டி, ஹோட்டல் சர்வர்கள் போன்றவர்களை பலரும் மோசமாக நடத்துகின்றனர். குறிப்பாக ஹோட்டல் செர்வர்கள் தவறு செய்துவிட்டால் சண்டைபோட்டு, திட்டி தீர்த்து … கேவலம். அவர்களும் தங்களைப்போல பிழைப்புக்காக ஒரு வேலையை செய்கிறார்கள் என்பதை மக்கள் உணராதது ஏன்? சுத்த மடத்தனம்.

    வலைப்பதிவர் பாத்திரம் உருவாவதெல்லாம் சரிதான் சரியான முறையில் அது உருவாகுமா? அல்லது திருநங்கைகளை சித்தரித்ததுபோல ஆகிவிடுமா? பார்த்து செய்யச் சொல்லுங்க. 🙂 வலைப்பதிவெழுதி ஒருவர் ஆட்சியக் கவுக்கிறமாதிரி எழுதினா நல்லாயிருக்கும் (வெயிட். அது அடுத்த விஜய் பட கதை. தரணி டைரக்ஷன் படத்துக்குப் பெயர் கருவி – சமுதாய மாற்றத்துக்கு கருவியா இருக்காராம்)

  10. //எல்லாம் நல்லபடியாக முடிந்து, வேலைகள் தொடங்கி, சூட்டிங் போய்.. அத்தொடரில் அந்த பாத்திரம் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் நாளில் நானே விசயத்தை போட்டு உடைக்கிறேன். அது வரை பொறுமை ப்ளீஸ்!!
    //

    காமெடி சீரியலா?

    பா.க.ச சீரியல் வரை போகுதா! கிரேட்!

    வாழ்த்துக்கள்!

    சீரியல் புகழ் பா.க.ச தலை வாழ்க!

  11. Sridhar Narayanan says:

    //இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கூட ஆண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு? கட்டணக்கழிப்பிடம் கூட சரியா இல்லை. //

    இப்படிப்பட்ட நிலையில் எத்தனை பெண்கள் சாலையோரம் சாலையோரங்களையோ, முட்டு சந்துகளையோ பயன்படுத்துகிறார்கள்? (சிலர் செய்யலாம் என்பதை விட, பலர் செய்வதில்லை என்பது இங்கு முக்கியமாக கொள்ள வேண்டும்)

    இப்படி சாலையோரம் சிறுநீர் கழிப்பது என்பது ‘அவசரத் தேவை’ என்பதை விட, ஒரு ‘அத்துமீறல் சுகத்’திற்காகத்தான் என்பது என் கணிப்பு.

    மேலே சிறில் சொன்ன பதிலுக்கு ஒரு ரிபீட்டு சொல்லலாம்.

  12. பெத்தராயுடு says:

    //அக்குளில் சிரைக்கச் சொல்லும் கொம்பன்கள் கேவலப்பிறவிகள். இன்னும் இருக்கிறார்கள். நல்ல வேளை அடியிலும் சிரைக்கைச் சொல்லாமல் விட்டார்கள்.//

    மறைவான இடங்களில் முடியில்லாமல் இருப்பது சுகாதாரமானதுதான். அக்குள் முடியெடுப்பது எனக்குத் தவறாகப் படவில்லை.வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் தங்களின் அந்தரங்க உறுப்புகளை தூய்மையாக வைத்திருக்கும் பட்சத்தில், வியர்வை வாடையை மறைக்கும் டியோடரண்ட் அணிந்திருக்கும் பட்சத்தில், முடி திருத்துபவர் கையுறை அணிந்திருக்கும் பட்சத்தில். பிரெஸீலியன் வாக்ஸிங் (brazilian waxing) மற்றும் ‘சர்வாங்க ஷவரம்’ கேள்விப்பட்டதில்லையோ?

  13. பெத்தராயுடு says:

    //எல்லாம் சரி சாமீ… கேட்க சந்தோசமா இருக்கு. ஆனா.. நான்கு முனை, மூன்று முனை, இரு முனை சந்திப்புகள் நிறைந்த சென்னையில் எத்தனை இடங்களில் சிறுநீர்கழிக்க இடம் கட்டப்பட்டுள்ளது? சில இடங்களில் கட்டப்பட்டிருக்கும் நாற்றமடிக்கும் இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் கூட ஆண்களுக்குத்தான் உள்ளது. //

    Cardinal rule for every one.

    “When you go out of your home, fill the petrol tank and empty your bladder”.

    இங்கு சாம தான பேத தண்ட வழிமுறைதான் தேவை என நினைக்கிறேன். முதலில் தண்டத்தைக் கையிலெடுத்தால் இத்திட்டம் வெற்றி பெறாது.

    1. முதலில் தேவையான இடங்களில் பொதுக் கழிப்பறைகளைக் (இலவசமோ இல்லை கட்டணமோ) கட்டு வேண்டும். முக்கியமாகப் பெண்களுக்கு.
    2. அடுத்து, அனைத்து ஊடகங்கள் வாயிலாக சுற்றுப் புற சூழலின் தூய்மை மற்றும் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு நடிகர்கள் சூர்யா, டாக்டர் விஜய் போன்ற பிரபலங்களைப் பயன்படுத்தலாம்.
    3. இன்னும் 6 மாதங்களில் (ஒரு பேச்சுக்கு) யாரும் வெளியில் மலம் கழித்தால் தண்டனை என்ற தடியைச் சுழற்ற வேண்டும். இது மக்களை கழிப்பறைகளைக் பயன்படுத்த ஊக்குவிக்கும், பழக்கப்படுத்தும். இப்படி இல்லாமல் ‘நாளை முதல் நீ வெளியில் மலம்கழிக்காதே’ என்றால் போடா வெ*ணை என்று எல்லோரும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள்.
    4. இதற்குப் பின்னரும் எவராவது தவறு செய்தால் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அதாவது ஒரு வாரம் அவர்கள் அரசாங்கக் கழிப்பறைகளைப் பராமரிக்க வேண்டும்.

  14. Krishnakumar K B says:

    பல விதங்களில், உங்களைப் போல நானோ, என்னைப் போல நீங்களோ இருக்கிறோம். நம்மைப் போல பலரும் இருக்கக் கூடும். மகிழ்ச்சியாக உள்ளது குருவே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.