வாத்து ராஜா
மடமன்னன் ஒருவனுக்கு மக்கள் வைத்துள்ள பெயர் தான் வாத்து ராஜா. அது அம்மன்னனுக்கும் தெரியவர.. நாட்டில் உள்ள எல்லா வாத்துக்களையும் கொல்ல உத்தரவிடுகிறான். வாத்துக்களும் கொல்லப்படுகின்றன. சுந்தரி என்ற சிறுமி தன்னிடமுள்ள வாத்துகளை காப்பாற்றிக்கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொள்கிறாள் என்பது கதை. ஆனால் இது நேரடி கதையாக இல்லாமல் அமுதா என்ற சிறுமிக்கு அவள் பாட்டி சொல்லும் கதையாக விரிகிறது. கதைக்குள் கதை. ஒரு இடத்தில் பாட்டி கதையை முடிக்காமல்.. வேறு ஊருக்கு சென்று விடுகிறார். தன் பாட்டி சொன்ன கதையைத்தேடி அமுதாவும், அவளது தோழிகளும் பயணமாகிறார்கள். அவர்களுக்கு வாத்துராஜா கதையின் முடிவு தெரிந்ததா என்பதை அறிந்துகொள்ள நீங்கள் நூலை வாங்கவேண்டியது அவசியம்.
சமீபகாலமாக குழந்தை இலக்கிய செயல்பாடுகளில் ஆர்வம் காட்டிவரும் இளைஞர்களில் விழியனும், விஷ்ணுபுரம் சரவணன் முக்கியமானவர்கள். தொடர்ந்து விழியன் எழுதிவருகிறார் என்பது நமக்குத்தெரியும். இதோ சரவணனும் களத்தில் குதித்துள்ளார்.
மிகவும் எளிய விவரிப்புகள் மூலம் கதையை நகர்த்துகிறார் நூலாசிரியர். ஒரு கிராமத்தை கண்முன் நிறுத்துகிறார். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வாழும் எளியவர்களின் வாழ்க்கைச்சித்திரமும் அழகாக பதிவாகி உள்ளது.
ஊருக்கு வெளியே வாழும் சுந்தரியின் வாத்துக்கு என்ன ஆனது என்பதை, ஊருக்கு வெளியே வாழும் ஒரு தாத்தா தான் அமுதாவுக்குச்சொல்கிறார். இது அறிந்து செய்ததா அறியாமல் செய்ததா அறியேன். ஆனால் அதனுள் ஒரு விசயம் மறைமுகமாக சொல்லப்பட்டதாக நினைக்கவேண்டியதிருக்கிறது.
சிறார்களுக்கான கதை என்ற போதிலும்.. கதையின் முடிவு தெரியாமல் அமுதாவுக்கு ஏற்படும் பதட்டம் வாசிக்கும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. பரபரவென அடுத்தடுத்த பக்கங்களுக்கு தாவிச்சென்று முடிவை அறிந்துகொள்ள மனம் தவித்தாலும், சிரமப்பட்டு உள்ளுக்குள் ஏற்பட்ட பரபரப்பை ரசித்தவாரே பொறுமை காத்துகதையினை படித்துமுடித்தேன்.
கதைகளின் இடையிடையே வரையப்பட்டுள்ள ஓவியம் நன்றாக இருக்கிறது. ஓவியருக்கு பாராட்டுக்கள்.
குழந்தைகளுக்கு கதை சொல்பவர்களும், சொல்லப் பிரியப்படுகின்றவர்களும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல் வாத்துராஜா! வாழ்த்துக்கள் சரவணன்.
நூல்:- வாத்துராஜா
விலை: ரூபாய் 50/-
வெளியீடு:- புக் ஃபார் சில்ட்ரன்
விற்பனை உரிமை:-
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை- 600018
தொலைபேசி:- 044- 24332424
தகவலுக்கு நன்றி ஐயா.
தகவலுக்கு மிக்க நன்றி