பிறர் ஏற்படுத்தும் காயங்களின் வலி!

நூல்: கையறுநதி
ஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின்

வெளியீடு : கடல்வெளி பதிப்பகம், தொடர்புக்கு: 24332924

விலை : ரூ 220/-

கையறுநதி: நாவல் மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு தந்தையின் தன் வரலாற்று பக்கங்கள்

எப்போதும் படிப்பது போல இந்த நூலையும் என்னால் ஒரே மூச்சில் படித்துமுடித்து முடியவில்லை. சில இடங்களில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். சில அத்தியாயங்களில் என் கண்கள் கலங்கி, எழுத்துகள் மறைந்தன. மனத்திற்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. நூலை மூடிவைத்தேன். ரத்தக்கொதிப்பு உயர்வதை உணரமுடிந்தது. மென்நடை பயின்று சமநிலைக்கு வந்தேன். அன்று முழுக்க நூலைத்தொடவே இல்லை. வைத்துவிட்டு, மறுநாள் எடுத்தேன். மீண்டும் மூடிவைத்தேன். பழையபடி பாதிப்பு. மீண்டும் அதே விஷயங்கள். இப்படியாக 10 நாட்களுக்கு மேல் எடுத்து படித்துமுடித்தேன்.

ஒருகாலத்தில் உடல், மன ஊனங்கள் என்பது கடவுளின் கோபம், நாம் செய்த முன்வினைப் பயன் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டன. எனவே பொது சமூகத்திற்கு ஊனமுற்ற மனித உயிர்களைக் கையாள்வது ஒரு விதத்தில் எளிதாக இருந்தது. அவர்களை விலங்குகள் போல, அல்லது அதைவிடவும் கீழாக உயிர் வாழ அனுமதிப்பதே பெருந்தன்மை என்று நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ள முடிந்தது.

ஆனால் இன்றைய நவீன உலகில், எல்லா மனிதர்களுக்கும் மரியாதைக்குரியதொரு வாழ்வை வாழும் உரிமை உண்டு என்ற எண்ணம் வந்த பின்னர், சமூகம் புற ஊனங்கள் விஷயத்தில் மேம்பட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் கூட நம்மால் மனம் அல்லது மூளையின் சிக்கல்களை முழுதாக சுருளவிழ்த்துப் பார்த்துவிட முடியவில்லை என்பதால் மனரீதியிலான பாதிப்புகள் மனித சமூகத்தை தொடர்ச்சியாக அலைக்கழித்து வருகிறது எனலாம்.

எனவே ஒரு குழந்தைக்கு மன வளர்ச்சியில் ஏதேனும் சிக்கல் என்றாலோ, வளர்ந்த மனிதர்களுக்கு மனநல பாதிப்புகளோ ஏற்பட்டுவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முதன்மை உறவினர்களான பெற்றோர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத் துணைவர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்படும் பதற்றம் சொல்லால் விளங்க வைக்கக் கூடிய ஒன்றல்ல.

மற்ற நிலைகளில் இருந்து ஒரு மனநல பாதிப்புடைய நோயரைப் பார்த்துக் கொள்வதைவிடவும் துயர் மிகுந்தது பெற்றோராக இருந்து அல்லலுறும் நம் பிள்ளையைப் பேணுவது.

மனநல பாதிப்பு, மன பிறழ்வு, மூளை வளர்ச்சியின்மை என என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையையும் இச்சமூகம் சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் அது எங்களுக்கு குழந்தை. எங்களின் குழந்தை.

இச்சமூகம் ஏற்படுத்தும் காயங்கள் கணக்கிலடங்கா… உறவுகளாகவே இருந்தாலும் சீண்டிப் பார்ப்பதில் தொடங்கி, உச் கொட்டி ஏளனம் செய்வது வரை பலவிதமான சீண்டல்களை செய்துகொண்டே இருப்பர். அந்த வலியை, இப்படியான ஒரு குழந்தையின் பெற்றோராக இருப்பாரால் தான் சரியாக புரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் முடியும்.

இப்படியான நூல்கள் தமிழில் நிறைய வரவேண்டும். அப்போதுதான் இச்சமூகம் விழிப்புணர்வு அடையும். மனப்பிறழ்வு என்றால் சினிமாவிலும் கதைகளிலும் நாடகங்களிலும் மூலமாகவும் நம்மில் பலரும் அறிந்துகொண்ட செய்திகளில் தவறானவற்றை தூக்கி எறியவும், சரியானதை அறிந்துகொள்ளவும் இந்நூல் துணை செய்யும்.

Posted in அனுபவம், மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , | Leave a comment

பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்

எனது முதல்நாவலான ’அவன் -அது +அவள்’ நாவலை வெளியிட முதலில் அணுகியது வயதில் முதிர்ந்த அந்த தலைவரைத்தான். அவருக்கு என்னை நேரடியாகத் தெரியாது என்றபோதும் நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டார். நான் அழைத்தபோது நாவல் அச்சகத்தில் இருந்தது. நூல் கையில் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு அந்த தலைவரைப் பார்த்து கொடுத்துவிட்டு, நிகழ்வுத்தேதியை நினைவுபடுத்திவிட்டு வந்தேன். ரெண்டாவது நாள் அவரிடம் இருந்து அழைப்பு. நேரில் சென்று பார்த்தேன்.

நாவலைப்பற்றி பாராட்டிவிட்டு, தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாது என்று வருத்தத்துடன் சொன்னார். எனக்கோ பெருத்த ஏமாற்றம். ‘என்னாச்சுங்க தோழர்?’ என்று கேட்டதற்கு, தன்னுடைய இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கையில் திருநங்கை மக்களுக்காக தான் பெரியதாக ஏதும் செய்யவில்லை என்பதோடு, அவர்களில் வாழ்வு இத்தனை துயரமிக்கது என்பதையும் அறியாமல் இருந்துவிட்டேன் என்பதே குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. அதனால் என்னால் கலந்துக்க முடியாது. தப்பா நினைச்சுக்காதிங்க என்று கூறினார். நான் அப்படியே நெகிழ்ந்துபோனேன்.

அவரது அந்த நேர்மை என்போன்ற வளரும் தலைமுறையினருக்கான பாதை. அந்த தலைவர் வேறு யாருமல்ல… இன்று 98வது பிறந்தநாள் கொண்டாடும் மதிப்பு மிக்க தோழர் நல்லகண்ணு அவர்கள் தான் அவர்.

Posted in அனுபவம், ஆவணம், வாழ்த்து | Tagged , , , , | Leave a comment

மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்

ஓர் உரையாடல் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதை அறிந்தவன் நான். என்னுள் ஏற்பட்ட பல மாற்றங்களும் உரையாடல் வழியே நிகழ்ந்தவைதான்.

உரையாடல்களின் பலம் அறிந்ததால் தான் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் கலந்துரையாடல் அவசியம் என்று முடிவுசெய்து கொண்டேன். இதன் பொருட்டே, 2014ஆம் ஆண்டில் ஆட்டிச நிலைக்குழந்தைகளில் முதல் பெற்றோர் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தேன். மிகச்சிறப்பாக நடந்த அந்த கூட்டத்தில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள, எங்கள் பண்புடன் இணைய இலக்கியக்குழுமத்தில் இருந்து பல தம்பிகள் தன்னார்வலர்களாக வந்திருந்தனர். அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு, முழுகவனத்துடன் உரையாடலில் பெற்றோர் பங்குபெற்றனர்.

தொடந்து சில கூட்டங்களை முன்னெடுத்தேன். பலரையும் இதுபோலக் கூட்டங்களை ஒருங்கிணைக்க வலியுறுத்தினேன். ஆர்வம் உடைய பலரும் பல ஊர்களில் கூட்டங்கள் நடத்தத்தொடங்கினார்கள்.

சிறப்புக்குழந்தைகளில் அப்பாக்களுக்கு எனத் தனியாக நான் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய அப்பாக்களிடம் அன்றே சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பிள்ளை வளர்ப்பு இருவரின் பொறுப்பு என்று உணர்ந்து, அம்மாக்களின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட சுமைகளைக் குறைக்க முன்வந்தனர். நன்றி கூறி, பல சகோதரிகள் அனுப்பிய செய்திகள் என்னிடம் சேமிப்பில் உள்ளன. இவையே என்னை இன்றும் உற்சாகமாகச் செயல்படவைப்பவையாக உள்ளன.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி, ஈரோடு சென்றிருந்தேன். தங்களது சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர்களிடமும், அப்பள்ளி ஆசிரியர்களிடமும் உரை நிகழ்ந்த வரும்படி, அப்பள்ளியில் தாளாளர் ஜெயபாரதி அம்மா அழைத்திருந்தார். (தங்கை
பாரதி கோபால் வழி- அவருக்கும் நன்றி)

ஜெயபாரதி அம்மாவின் தொடக்க உரை

புதியதாக வந்த எனது சிறுவர் நாடோடிக்கதைகள் நூலான, தாத்தா சட்டையை அங்கேயே வெளியிட்டு விடலாம் என்று தீர்மானித்தேன்.

முதல் நிகழ்வாக நூல்வெளியீடு சிறப்பாக நிகழ்ந்தேறியது.

பள்ளியில் முதல்வர் எஸ். சுபா வரவேற்புரை நிகழ்த்தினார். ஜெயபாரதி அம்மா நூல்களை வெளியிட, முதல் மூன்று பிரதிகளை அப்பள்ளியின் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

அதன் பின் பெற்றோருக்கான பயிலரங்கு தொடங்கியது. ஒரு மணி நேரம் என்று முடிவு செய்து, பவர் பாயிண்டில் தயாரித்து வைத்திருந்த ஒளிச்சுவடியை (presentation) ஓடவிட்டு, உரையாடத்தொடங்கினேன். ஆனால் நினைத்தை விட அதிக நேரம் அந்த வகுப்புச் சென்றது. ஆம்! அந்த நிகழ்வு மட்டும் இரண்டரை மணிநேரத்திற்கும் அதிகமாகச் சென்றது. அந்நிகழ்வில் பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய பல அடிப்படையான ஆனால் முக்கியமான விஷயங்களை வலியுறுத்தினேன்.

ஆட்டிசம் மருந்துகளினால் குணமாக்கக்கூடியது அல்ல; அடையாள அட்டையைப் பெறுவதின் நன்மைகள்; 18 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு, பெற்றோர் தங்களைக் காப்பாளராகப் பதிவு செய்யவேண்டியது தேவை என்ன? நம்மிடமிருக்கும் சொத்துக்கள் அவர்களுக்குச் சரியானபடிச் சென்று சேர நாம் செய்ய வேண்டியதென்ன? இது பற்றியெல்லாம் நம் சட்டம் என்ன சொல்கிறது? இப்படியான பல்வேறு புள்ளிகளைத் தொட்டபடி நீண்ட அவ்வுரையின் முடிவில் செறிவான கேள்வி பதில் அமர்வும் நிகழ்ந்தது.

பெரியார் – அண்ணா நினைவகம்

மதிய உணவுக்குப் பின் பெரியார் நினைவு இல்லம் சென்று வந்தேன். பெரியாரின் இல்லத்தில் அறிஞர் அண்ணாவும் அங்கே சில காலம் தங்கி, பத்திரிகையில் பணியாற்றியதால் அந்த அறையை அண்ணா நினைவகமாக பராமரிக்கின்றனர்.

அதன் பின் அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கான வகுப்பு. அவர்களுக்கு எனத் தனியாகத் தயாரித்திருந்த ஒளிச்சுவடியை ஓடவிட்டு உரையாடினேன். இதுவும் சுமார் 3 மணி நேரம் நிகழ்ந்தது.


உண்மையில் இந்தப் பட்டறையில் கலந்துகொண்ட பெற்றோரும் ஆசிரியர்களும் சிறப்பாக உள்வாங்கிக்கொண்டனர் என்பதை அவர்களின் கேள்விகளில் இருந்து தெரிந்துகொண்டேன். இரவு ஊருக்குக் கிளம்பும் போது, ஜெயபாரதி அம்மாவிடம், நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடம் கருத்துக்களைப் பெற முடிந்தால் வாங்கி அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன். கண்டிப்பாக செய்கிறேன் என்று ஜெயபாரதி அம்மா கூறினார்.

சில நாட்களுக்கு முன் பெற்றோர்+ ஆசிரியர் இருதரப்பிலிருந்தும் அவர்கள் எழுதி அனுப்பி இருந்த கருத்துக்களைப் பெற்று கூரியர் செய்திருந்தனர்.
அவற்றைப் படிக்கப் படிக்கக் கண்கள் கசிந்தன. இரு தரப்பில் இருந்தும் தாங்கள் கற்றுக்கொண்ட புதிய விஷயங்களையும் குழந்தைகளிடம் தாங்கள் நடந்துகொண்ட விதம்/ தவற்றை உணர்ந்துகொண்டோம் என்றும் இனி மாற்றிக்கொள்வோம் என்றும் எழுதி இருந்ததைப் பார்த்ததும் உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. மன நிறைவைக் கொடுத்த பயணமாக இப்பயணம் அமைந்தது.

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

ஆட்டிச நிலையாளர்களும் மனிதர்கள் தான்!

நேற்று மாலை ஒர் ஆட்டிசக்குழந்தையின் தாயார் போன் செய்திருந்தார். அவருடைய 17வயது மகனுடன் ஒரு ஷாப்பிங் மால் போய் இருக்கிறார்.

வாகனம் நிறுத்துமிடத்தில் தனது காரை பார்க்கிங் செய்துவிட்டு, பையனுடன் வெளியில் வந்துகொண்டிருக்கும் போது, ரிவர்ஸ் எடுத்த ஒரு காரில் இருந்த ஹார்ன் சத்தம் இவனை தொந்தரவு செய்துவிட்டது. சில அடிகள் தூரம் நடந்து, மாலின் வாசலில் நுழையும் இடத்தில், திடீரென உணர்ச்சிப்பெருக்குக்கு ஆட்பட்டவன் விழுந்து புரண்டபடி சத்தம் எழுப்பத்தொடங்கி உள்ளான். இவரால் அவனை சமாளிக்க முடியவில்லை. எப்படியும் சில வினாடிகளுக்குள் நார்மலுக்கு வந்துவிடுவான் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கூட்டம் கூடி விட்டதாம்.

குழந்தையை ஒழுங்கா வளர்க்கத்தெரியல அதனாலதான் இப்படி அடங்காம அலையுறான், லூசு புள்ளைய பெத்துட்டு ஏன் வெளியில எல்லாம் கொண்டு வர்றீங்க, என்று ஆளாளுக்கு அட்வைஸ்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். என்ன மேடம் இப்படி டிஸ்டர்ப் பண்ணுறான் என்று அங்கிருந்த செக்யூரிட்டி ஆட்கள் அவனை அமுக்க, அவன் திமிர என்று ஒரே களேபரம் தான். கொஞ்ச நேரத்தில் அவன் இயல்பு நிலைக்கு வந்ததும் ஷாப்பிங் செய்யாமலையே வெளியே வந்துவிட்டதாகவும் சொல்லும் போதே அவருக்கு அழுகை வந்துவிட்டது.

பொதுவாக அனேக ஆட்டிசக்குழந்தைகளுக்கும் உணர்ச்சிப் பெருக்கு எனப்படும் tantrum பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இதனை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்திவிடமுடியாது. எப்போது இப்படியான உணர்ச்சிப் பெருக்குக்கு ஆட்படுவார்கள் என்பதையும் கணிப்பது சிரமம். இது வராமல் தடுப்பதும் நம்கையில் இல்லை.

இதன் காரணமாக வீட்டுக்குள்ளேயே ஆட்டிசக்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே முடக்கி விடுவதும் சரியான காரியமல்ல. மருத்துவர்களும், தெரபிஸ்ட்டுகளும் தொடர்ந்து சொல்லும் அறிவுரை இவர்களை ஒரே இடத்தில் அடக்கி வைக்காதீர்கள். பொது இடங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள் என்பது தான்.

கீழ்க்காணும் வீடியோக்களை ”முழு ஒலி அளவுடன்” முழுமையாக காணுங்கள். சில நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோக்கள் உங்களை நிச்சயம் சிரமப்படுத்தும். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இப்படி வாழவேண்டிய/கேட்கவேண்டிய நிலையில் உள்ள ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையையும், அவர்தம் பெற்றோரையும் நினைத்துப்பாருங்கள்.(பல பெற்றோர் மரத்துப்போய் இச்செயல்களை நகைச்சுவையுடன் கடந்து போக முனைகிறார்கள்)

https://en.wikipedia.org/wiki/File:Toddler_throwing_a_tantrum.ogg?fbclid=IwAR2cQLEC1-Zakw1VmXHCXgGWR6_8e2XPal1HMITmQmaEf2qfBqVNOAp5piI

பொது இடங்களில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எதிர்படும் போது, அவர்களை கட்டுப்படுத்தவோ, காயப்படுத்தவோ வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இருக்கவிட்டாலே இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள். நம்மூர் மக்கள் இதுபோன்ற புரிதல்களுக்கு வரும் போது அவர்களின் வாழ்க்கையும் நெருக்கடி இல்லாமல் இருக்கமுடியும். இங்கே வேண்டுவது எல்லாம் இரக்கம் அல்ல. சகமனித நேசிப்பு மாத்திரமே!

ஆட்டிசம், #autism

அறிவுசார் குறைபாடு உடையவர்களும் மாற்றுத்திறனாளிகளே!
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நாள்!

(2016 டிசம்பர் 3ஆம் நாள் பேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு | Leave a comment

புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம்.

பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட சில வசதிகளும் தேவை என்பதை உணர்வோம். ரயில் நிலையம் தொடங்கி, மருத்துவமனை, விமானநிலையம் என எல்லா இடங்களிலும் தளம் வழுவழுப்பாக இருந்தால் நமக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதே தளத்தில் ஊன்றுகோல் துணைகொண்டு நடக்கும் ஒரு மாற்றுத்திறனாளியால் நடக்க முடியாது. ஆம், அந்த வழுவழு தரை, அவர்களை வழுக்கி விழச்செய்யும்.

*பொது இடங்களில் நீங்களும் நானும் பயன்படுத்தும் கழிவறையின் சின்னக் கதவுகள், சக்கரநாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறக்காது.

*தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் துணி எடுக்க எத்தனை முறை பெரிய பெரிய கடைகளுக்கு சென்றிருப்பீர்கள். ஒருமுறையேனும் அங்கே சக்கரநாற்காலியில் தனக்கான ஆடை எடுக்கவந்த ஒருவரையாவது கண்டிருக்கிறீர்களா? நிச்சயம் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அவர்களுக்கு பிடித்த ஆசையைக்கூட அவர்களால் எடுக்க முடியாது. எட்டு பத்து படிகள் ஏறி எப்படி செல்வர்?

*நம்மில் பலருக்கும் பிடித்த, கடற்கரையில் கால் நனைக்க முடியாது ஏங்கும் மாற்றுத் திறனாளிகள் ஏராளம்.

*ஆம், இது மாற்றுத்திறன் மக்களில் நீண்ட நாள் கோரிக்கை. இதனை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ‘செல்பி பாயின்ட்’ பின்புறம் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்லது. இதற்காக சிங்0கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடு ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கி வேலைகள் தொடங்கப்பட்டன. இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைப் பாதையானது, 263 மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.

* முழுக்க முழுக்க மரக்கட்டைகளால் வடிமைக்கப்பட்ள்ள இதில் மழைநீர் தேங்காது. முழுவதும் வடிந்து போகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைப்பாதையில் கைப்பிடிகளுடம் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊன்றுகோல் துணையுடன் நடக்கும் முதியவர்கள், மணலில் நடக்கும் சிரமமின்றி கடலை அருகில் இருந்து ரசிக்கலாம். கடல் பரப்பில் எந்த இடத்தில் வேண்டுமானலும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

*மாற்றுத்திறனாளிகளுக்கான இப்பாலத்தை, தங்கள் காலில் மணல் படாமல் இருக்க, நமது பொதுஜனங்களும் பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர். கூட்டம் கூட்டமாக அதில் நடப்பதும் ஓடுவதுமாக உள்ளனர். ஒருவேளை இந்தப் பாலம் உடைந்துபோனால்… என்னவாகும் என சிந்தித்துப் பார்த்திருப்போமா? உடைந்துபோனால், சரி செய்ய பல மாதங்கள் ஆகும். அல்லது சரி செய்யப்படாமலேயே கூட போய்விடலாம்.

*கடலை அருகில் சென்று பார்க்கும் ஆசையும், கடல் அலைகள் தங்களின் கால்களையும் நனைக்குமா என்னும் மாற்றுத்திறனாளிகளின் ஏக்கம் கனவாகவே போய்விடும்.

*அந்த பாலம் நமக்கானது அல்ல. அது மாற்றுத்திறனாளிகளுக்கானது. அதை பயன்படுத்தாமல் இருப்போம். மாற்றுத்திறனாளி அல்லாத எவரை பயன்படுத்த அனுமதிக்காமலும் இருப்போம்.

நன்றி

=================

Posted in அனுபவம், எதிர் வினை, கட்டுரை, சமூகம்/ சலிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment