ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- (ஜேக்கப் ராக்)

ஜேக்கப் இசை அமைப்பாளர் ராப் லாஃபர் உடன்
ஜேக்கப் இசை அமைப்பாளர் ராப் லாஃபர் உடன்

19 வயது ஜேக்கப் ராக், ஓர் ஆட்டிச நிலையாளர். இவரால் சிறு வயதில் பேச முடியாததால் அறிவுத்திறனில் குறைவானவர் என்றே மதிப்பிடப்பட்டார். அவரது குடும்பத்தினரின் தொடர் முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் பின்னர் ஐ பேடில் தட்டச்சு செய்து, தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். எழுத்துப் பிழைகளோ இலக்கணப் பிழைகளோ இல்லாத கச்சிதமான வாக்கியங்களை ஜேக்கப் எழுதுவதைக் கண்டு வியந்தனர் அவரது பெற்றோர். தட்டச்சு செய்யக் கற்றக்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பின், ஒருநாள் தனது பெற்றோரிடம் ’தனது மனத்திற்குள் 70 நிமிடங்களுக்கான சிம்பொனி குறிப்பு ஒன்று’ இருப்பதாகத் தெரிவித்தார்.

அவரது பெற்றோர் ’ராப் லாஃபர்’ எனும் இசை அமைப்பாளரை அணுகினர். ஜேக்கப்பின் மனதில் இருந்த சிம்பொனிக்கு வடிவம் கொடுக்க உதவினார் ராப் லாஃபர். மறக்க இயாலத சூரிய உதயம் (Unforgettable Sun Rise) எனும் தலைப்பிலான அந்த சிம்பொனி 2023 செப்டம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இசையரங்கில் அரங்கேறியது.

“என் அறிவைக் காட்டவும், எனக்கான அடையாளத்தை உருவாக்கவும் முடிந்திருக்கிறது என்பது எனக்கு மிக மிக நிறைவைத் தருகிறது” என்கிறார் ஜேக்கப்.

“நீங்கள் இத்தனை நாளும் என்னை குறைத்தே மதிப்பிட்டு வந்தீர்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கவனித்துக் கொண்டும்தான் இருந்தேன். இதோ, இங்கு நான் இருக்கிறேன்” என்று அவன் உலகுக்குச் சொல்ல விரும்புகிறான் என்கிறார் ஜேக்கப்பின் தந்தை பால் ராக்.

“ஆம் பிள்ளைகளே… நாங்கள் உங்களை புரிந்துகொள்ளவே முயன்று வருகிறோம்” என்று எங்களுக்கும் சொல்லத்தோன்றுகிறது. இந்த துண்டு வீடியோ உங்கள் கண்களை ஈரமாக்கினால் நீங்களும் என் தோழனே…!

-யெஸ்.பாலபாரதி

Posted in AUTISM - ஆட்டிசம், தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , | 1 Comment

என்னை மன்னிப்பாயா நண்பா!


இருபது வயதுகளின் தொடக்கக் காலத்தில் எப்போதும் நண்பர்கள் குழுவுடனேயே சுற்றித்திரிவோம். அப்போது என் நெருக்கமாக இருந்த நண்பன் ராமகிருஷ்ணன். மிகவும் நல்லவன். தைரியசாலி. பிறக்கு உதவும் குணம் கொண்டவன். முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்கும் தன்னால் உதவும் குணம் கொண்டவன். எப்போதும் ஒன்றாகவே சுற்றுவோம். சின்ன ஊர் என்பதால் காலையில் விடிந்ததும் அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தேனிர் கடைக்குச் சென்றுவிடுவேன். அவனும் எழுந்து வந்துவிடுவான். பெரியதாக வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கவேண்டிய நெருக்கடி இல்லாத குடும்பப் பின்னணி எங்கள் இருவருக்கும் என்பதால் வேலைக் குறித்து எல்லாம் அலட்டிக்கொண்டதில்லை.

எங்கள் ஊரன ராமேஸ்வரம் பெரிய கோவிலுக்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையிலான தூரம் என்பது 3 கிலோமீட்டர்களுக்குள் தான் இருக்கும். பேருந்து டிக்கெட்டின் விலை அப்போது 60 பைசாக்கள். திடீரென ஒருநாள் காலை 15 பைசாக்கள் உயர்ந்தி, 75 பைசா டிக்கெட் விலை என்று சொல்லிவிட்டனர்.

ராமகிருஷ்ணன் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது. கூடுதல் காசு இல்லை என ஒரு வயதான பாட்டியை, பேருந்தில் இருந்து நடத்துனர் கீழே இறக்கிவிட்டார். அந்தப் பாட்டி சத்தம்போட்டபடி அழுது புலம்ப, நானும் ராமகிருஷ்ணனும் என்னவென்று விசாரிக்கும் போதுதான் டிக்கெட்டின் விலை ஏற்றப்பட்ட தகவல் தெரிந்தது. “என்னடா இப்படிச் செய்யுறாய்ங்க?” என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, எங்களின் இன்னொரு நண்பனான செந்தில் வந்தான். நாங்கள் மூவரும் பேசி முடிவு செய்தோம்.

அப்போது நாங்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்னும் அமைப்பில் இருந்தோம். அதனால் உடனடியாகச் சாலை மறியல் செய்வது என்று முடிவெடுத்து, நான்கு முனைச் சந்திப்பான திட்டக்குடி என்னும் இடத்தில் நடுச்சாலையில் அமர்ந்து மறியல் செய்யத்தொடங்கிவிட்டாம். இருப்பதோ மூவர். உள்ளூர் ஆட்கள் வேடிக்கைப் பார்க்க, மேலும் சிலரைத் துணைக்கு அழைத்தோம். அந்தப் பாட்டி வந்து அமர்ந்துகொண்டார். அதற்குள் எந்தப் பக்கமும் வாகனங்கள் செல்லமுடியாமல் அவை வரிசைகட்டத்தொடங்கின.

மேலும் நண்பர்கள் வந்து சாரைச் சாரையாக வந்து அமர்ந்துகொண்டனர். போக்குவரத்துப் பணிமனையில் இருந்து அதிகாரி எல்லாம் வந்து பேசியும் நாங்கள் மசியவில்லை. அப்புறம் இராமநாதபுரத்திலிருந்து உதவி ஆட்சியாளர் ஒருவர் வந்து பேச்சு வார்த்தை நடத்தி, பழைய டிக்கெட் விலையே வசூலிக்கப்படும் என அவர் கொடுத்த உறுதியினால் எங்களின் அன்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்படி மக்களுக்கான பல போராட்டங்களில் உடன் நின்றவன் அவன். ஒரு சின்னச் சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போய் விட்டது.

எல்லா நண்பர்களின் பாஸ்போர்ட் படங்களையும் வாங்கிச் சேமித்து ஒரு ஆல்பம் தயாரித்துக்கோண்டிருந்தேன் நான். இன்றைய நாட்கள் போல அன்று புகைப்படங்களை நினைத்தபோது எடுத்துக்கொண்டு இருக்கமுடியாது. படம் பிடிக்க ஸ்டூடியோவுக்குச் செல்லவேண்டும். கருப்பு வெள்ளைப் படம் எடுக்க ஒரு விலையும், வண்ணப்படம் எடுக்க ஒரு விலையும் கொடுக்க வேண்டியதிருக்கும். அதனால் படம் எடுத்துக்கொடுப்பதற்கு ஒருவித சோம்பல் பலரிடமும் இருந்தது. அவர்களில் ஒருவன் ராமகிருஷ்ணன். அவன் படமே கொடுக்கவில்லை.

ஒருநாள் எனது ஆல்பத்தை அவனிடம் காட்டிக்கொண்டிருந்தேன். அதில் இருந்த எனது வண்ண பாஸ்போர்ட் படத்தை எடுத்து வைத்துக்கொண்டான். “உன் படம் கேட்டால் தரமாட்டாய், என் போட்டோவை மட்டும் நீ எடுத்துக்கொள்வாயா? திருப்பிக்கொடுடா..?” என்று நான் கேட்க, அவன் மறுக்க, அவனிடமிருந்து எனது புகைப்படத்தைத் திரும்பவும் எடுத்துக்கொள்ளும் போட்டியில் நாங்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டோம். சாலையில் போவோர் வந்து விலக்கி வைக்கும்படியான சண்டை.

ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து கசங்கிய நிலையில் எனது படத்தைப் பிடுங்கி, நானே கிழித்துபோட்டுவிட்டேன். அவனோ என் மூக்கில் ஓங்கிக் குத்த, சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கொண்டியது. அவன் கோபமாகச் சென்று விட்டான். நானும் திரும்பிவிட்டேன். அதன் பின்னர்ச் சில முறை அவனும் சில முறை நானும் பேசிக்கொள்ள முயன்றபோது முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டோம். அதன் பின்னர் நானும் ஊரைவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

இது நடந்து எப்படியும் ஒரு வெள்ளிவிழா காலம் கடந்திருக்கும். அற்பகாரணத்திற்காகப் போட்டுக்கொண்ட சண்டையை நினைத்தால் இன்றும் வருத்தமாக உள்ளது. அவன் அன்பைப் புரிந்துகொள்ள என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன். என்னை மன்னிப்பாயா நண்பா!

(அந்திமழை இதழில் எழுதியது)

Posted in Uncategorized | Leave a comment

கு. அழகிரிசாமியின் சிறப்பு நூல்: விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு

கு. அழகிரிசாமியின் நூலுடன்!

எப்போதும் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளர் கு. அழகிரிசாமி. இது அவரின் நூற்றாண்டு. இதனை ஒட்டி, அவரது படைப்புகளில் சிலவற்றைத் தொகுத்து, விலையில்லாமல் வழங்கவிருப்பதாக தன்னறம் பதிப்பகம் முன்பு அறிவித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்த மகத்தான செயல்வழி அழகிரிசாமி என்னும் படைப்பாளுமையை அடுத்த தலைமுறை பலரிடமும் கொண்டுபோய் சேர்க்கிறது தன்னறம் பதிப்பகம்.

அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். கவிஞர் ராணிதிலக், அந்நூலினை சிறப்பாகத் தொகுத்துள்ளார். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில் வந்திருக்கும் இந்த நூல் நேற்று கிடைத்தது. இதன் பின்னணியில் உழைத்த அத்தனை பேருக்கும் வணக்கங்கள்!

+++++++++++++++

தன்னறம் நூல்வெளி அவர்களது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவு கீழே:

தமிழிலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளுமையும், சிறந்த சிறுகதை ஆசிரியருமான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டுத் தொடக்கத்தை மனமேந்திக் கொண்டாடும்விதமாக, சில செயற்திட்டங்களை கடந்தாண்டு அறிவித்திருந்தோம். இத்திட்டத்தில், கு.அழகிரிசாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி அதை விலையில்லா பிரதிகளாக அனுப்பிவைக்கும் செயலசைவும் உள்ளடக்கம்.

இதை நிறைவேற்றும் செயலசைவின் நீட்சியாக ‘கு.அழகிரிசாமி : கதைகள்,கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கடிதங்கள்’ எனும் புத்தகம் அச்சு நிறைவடைந்து கைவந்து சேர்ந்துள்ளது. ஆகவே, முதற்கட்டமாக 500 இளம் வாசிப்பு மனங்களுக்கு இந்நூலை விலையில்லா பிரதிகளாக அனுப்பும் செயலைத் தொடங்குகிறோம். இந்த எண்ணிக்கை எங்கள் சக்திக்குட்பட்டது. ஆகவே, கு.அழகிரிசாமி புத்தகத்தின் விலையில்லா பிரதியைப் பெறுவதற்கான இணையப் படிவத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

புனைவிலக்கியம், மரபிலக்கியம், கடித இலக்கியம், மொழியாக்கம், நாடகம், பதிப்புப்பணி, இசைப்பணி… என பன்முகத்திறனுடைய ஓர் தமிழெழுத்தாளராக தலைசிறந்த படைப்புகளைத் தந்து இம்மொழியின் இலக்கியச் சாத்தியங்களைப் பெருமளவு உயர்த்தியவர் கு.அழகிரிசாமி. அவரை மனமேந்திக் கொண்டாடி நன்றிசெலுத்தும் பொருட்டு துவங்கப்பட்டதே இச்செயற்திட்டம். மனித வாழ்வின் உயிரோட்டங்களை இலக்கியத்தில் தடம்பதித்த மூத்த ஆசிரியர் கு.அழகிரிசாமியை இக்கணம் பணிந்து வணங்குகிறோம்.

விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு:

https://docs.google.com/forms/d/1qL919q8u52tI-ENVXkqbE3fFYtZ0ALL66ppJcONeRTM/edit

நன்று நிகழ்க!

~

நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி

9843870059 | www.thannaram.in

Posted in Uncategorized | Leave a comment

மகிழ்ச்சியைப் பகிர்தல்!

ஈரோட்டில் இருந்து இன்று காலை ஜெயபாரதி அம்மா அழைத்திருந்தார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் ஓர் அமைப்பாய் ஒன்று திரள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்த அமைப்பின் முதல் கூட்டம் இன்று தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். நானும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். நீங்கள் பள்ளிக்கு வந்து உரை நிகழ்த்திய பின்னர்தான் இப்படி அமைப்பாய் திரளவேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது அதற்கு உங்களுக்கும் நன்றி எனப் பாராட்டினார். உண்மையில் அந்த பாராட்டு பெரும் மனமகிழ்வைக்கொடுத்தது. ஜெயபாரதி அம்மா ஏற்கெனவே பல நற்செயல்களைச் செய்துகொண்டிருப்பவர்தான். அவரது பார்வையை கொஞ்சம் இந்த மாற்றுத்திறன் குழந்தைகள்+ அவர்தம் பெற்றோர் பக்கமும் திருப்பி விட்டிருக்கிறேன் அவ்வளவுதான்.

ஆட்டிசம் என்னும் உலகினுள் நாங்கள் நுழைந்தபோது எங்களுக்கு கை நீட்டி உதவிட யாருமே இல்லை. தனித்து நின்றுகொண்டிருந்தோம். அதற்கு முன் இங்கே எந்த பெற்றோரிய செயல்பாடுகளும் தனித்து நடந்தேறியதில்லை. சிறப்புப்பள்ளிகள், தெரபி வழங்கும் தனி நபர்கள் ஆகியோர் அவர்கள் அளவில், தங்களை முன்னிலைப் படுத்தி மட்டுமே சில கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். அவற்றில் எந்த நிகழ்விலும் பெற்றோருடன் வரும் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள எந்த உதவியும் இருக்காது. கட்டணம் பெற்றுக் கொண்டு அவர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளுக்குக் கூட குழந்தைகளை அழைத்துச் செல்லமுடியாது. வாங்கும் காசுக்கு உணவு, தேநீர் அதுவும் high tea என்றெல்லாம் கொடுத்தாலும் கொடுப்பார்கள், குழந்தைகளுக்கு மட்டும் நோ எண்ட்ரி.

இந்த சிக்கல்களைப் பற்றி நாங்கள் தொடர்ச்சியாக விவாதித்து, சில முடிவுகளை எடுத்தோம். 2014ஆம் ஆண்டு முதன்முதலாகப் பெற்றோர் ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்தோம். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, பண்புடன் இணையக்குழுமத்தில் இருந்து நிறைய நண்பர்களை தன்னார்வலர்களாக அழைத்திருந்தேன். குழந்தைகள் விளையாடி மகிழ ஏர் பலூன் போன்ற ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இசைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஆட்டிச நிலைக் குழந்தைகளை மேடையேற்றிப் பாடல் பாடுவதற்கும் ஏற்பாடு செய்தோம்.

எப்போதும் சொற்பொழிவாற்றும் வழக்கமான நபர்களை நகர்த்தி வைத்துவிட்டு, ஒலிப்பெருக்கியை பெற்றோர் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தோம். இளைய பெற்றோர்கள் தங்கள் ஐயங்களை, அச்சங்களை கேள்விகளாக முன் வைத்தனர். மூத்த பெற்றோர்கள் தங்கள் பயணத்தை, அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள உற்சாகப்படுத்தினோம். மிகுந்த ஆரோக்கியமான உரையாடலாக அந்த நிகழ்வை நடத்தி முடித்தபோது நிறைவாக இருந்தது. சென்னை தவிர்த்து வேறு சில ஊர்களிலும் பெற்றோர் கூட்டங்களை ஏற்பாடு செய்து உரையாற்றினேன். தொடர்ச்சியாக நடந்த அந்த கூட்டங்களில் எல்லாம் பெற்றோர் தாமாகவே முன்னிருந்து சந்திப்புகளை நடந்தவேண்டும் என வேண்டிக்கொண்டோம். பின்னர் அந்நிகழ்விலிருந்து ஊக்கம் பெற்ற சில பெற்றோர் குழுக்களை ஏற்படுத்தி நடத்த ஆரம்பித்தனர்.

‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ எனும் எனது நூல் கிடைக்கும் தெரப்பிகள், உணவு முறைகள், களையப்பட வேண்டிய கற்பிதங்கள், நம்பிக்கையூட்டும் மனிதர்கள் என அடிப்படை விஷயங்களை விளக்கி, ஆட்டிசக் குறைபாட்டின் தன்மைகளைப் புரிந்து கொள்ள உதவும்படி எழுதப்பட்டது. அடுத்து வெளியான லக்ஷ்மியின் ‘எழுதாப் பயணம்’ நூலோ எங்கள் குழந்தை வளர்ப்பு அனுபவத்தை படிப்படியாக முன்வைத்து, ஒவ்வொரு கோணத்திலும் இளம் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய புள்ளிகளை அடையாளப்படுத்தியது.

அடுத்தது ‘அரும்பு மொழி’ செயலி. பேச இயலாத ஆட்டிச நிலைக் குழந்தைகளின் தகவல் தொடர்புத் துணைவனாக முன்வைத்த இந்த செயலி தொடர்ந்து பலருக்கும் பயன்தந்து கொண்டிருக்கிறது.

அதைப் போலவே சிறப்புக் குழந்தை வளர்ப்பில் தந்தையரின் பங்களிப்பு, அதன் தேவை, முக்கியத்துவம் குறித்து மட்டும் விரிவாகப் பேசும் கூட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தேன். இங்கே நம் சமூகம் பொதுவாகவே குழந்தை வளர்ப்பை பெண்களின் பொறுப்பாகவும், ஆண் அதில் உதவி செய்பவனாகவோ அல்லது பார்வையாளனாகவோ இருந்தால் போதும் என்றே நம் உள்ளத்தை வடிவமைக்கிறது. அந்த பொதுவான சிந்தனைகளை உதறி, தந்தையரும் பொறுப்புகளை கையிலெடுத்தால் வாழ்கைப் பயணம் எத்தனை எளிமையாக மாறும் என்பதை பல பெற்றோருக்கும் உணர்த்தக் கிடைத்த வாய்ப்பு அது. பல சகோதரிகள் நேரடியாக அளித்த பின்னூட்டங்கள் அந்த முன்னெடுப்பின் முக்கியத்துவத்தை உறுதிப் படுத்தின.

பெற்றோர் நடுவே செயல்படுவதைப் போலவே பொது சமூகத்தில் விழிப்புணர்வை முன்னெடுப்பதையும் இன்னொரு புறம் தொடர்ந்து செய்து வருகிறோம். துண்டு நோட்டீஸ் அச்சடித்து, ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என பல இடங்களில் ஆட்டிசம் விழிப்புணர்வு விநியோகம் செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்துமே நட்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் ”ஏப்ரல் 2ஆம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் அன்று அது குறித்த ஒரு செய்தியோ, கட்டுரையோ அசியம் வெளியிடுங்கள்” என்று தொடர்ச்சியாக வேண்டுகோள் வைத்துவிடுவேன். அவர்களில் பலரும் செய்கின்றனர். தொடர்ந்து அச்சு இதழ்களிலும், இணையத்திலும் எழுதுவது, பேசுவது என இச்சமூகத்தின் தேவைகளை, வலிகளை கவனப்படுத்தி வருகிறோம்.

அவ்வப்போது சிறப்புக் குழந்தைகள் காணாமல் போவதும், பிறகு கண்டுபிடிக்கப்படுவதும் நடக்கிறது. அதில் தருண் குப்தா போல சில சிறுவர்கள் நிரந்தரமாகவே காற்றில் கரைந்து போய்விடுவதும் நடக்கிறது. எனவே சமூக உதவியாளர்களான காவல் துறையினருக்கு இக்குழந்தைகளின் தன்மையை விளக்குவது அவசியம் என்பதால் அவர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் கலந்து கொண்ட ஒரு காவல் துறை அதிகாரி, காணாமல் போன ஒரு குழந்தையை சரியான விதத்தில் கண்டறிந்து, அவரது விடுதியில் சேர்த்தார். இதைப் பற்றி அறிந்து கொண்டபோது சரியான திசையில்தான் பயணிக்கிறோம் என்ற உணர்வு கிடைத்தது.

இதோ இப்போது ஈரோடு பெற்றோர் சங்கத்தின் தொடக்கம் எங்களுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு உற்சாக வெகுமதி. இந்தப் புள்ளியில் நின்று இதுவரையிலான பாதையை, பயணத்தைத் திரும்பிப் பார்க்கையில் நம்மால் இயன்றவரை சிறப்பாகவே செய்திருப்பதாக நிறைவாக உணர்கிறோம். ஆனால் கொரோனாவாலும் வேலைப் பளுவாலும் சற்று வேகம் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. இன்னமும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் பெரிது.

பதினெட்டு வயது நிறைந்த சிறப்புக் குழந்தைகளுக்கு சட்டரீதியிலான காப்பாளர் பொறுப்பேற்பது, பணம் சொத்து போன்றவற்றை நமக்குப் பின் குழந்தைகளுக்கு அளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விஷயங்களைப் பற்றி இன்னமும் இங்கே போதுமான விழிப்புணர்வு இல்லை. அதைப் பரவலாக்க வேண்டியுள்ளது. போலவே இக்குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிலும் நிறைய தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இது போன்ற விஷயங்களில் இனி வரும் நாட்களில் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என்பதே எங்கள் இப்போதைய இலக்கு.

கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது எங்களுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும் என்பதாலேயே இப்பதிவு.

+++++++++++

தொடர்புடைய பதிவு

மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்

Posted in Uncategorized | 1 Comment

சிறார் இலக்கியத்திருவிழா -2023

பள்ளிக்கல்வித்துறையின் ஏற்பாட்டில் சிறார் இலக்கியத்திருவிழா-2023 நடந்துவருகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவியரை சென்னைக்கு அழைத்து வந்து, ஆறு நாட்கள் தங்க வைத்து, சென்னையைச் சுற்றிக் காட்டி, எழுதுவதற்கும் உரைவீச்சு நிகழ்த்தவும் பயிற்சிப்பட்டறை நடத்தப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாணவர்களிடையே உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எனது உரையினூடாக உருவக்கேலி, குறைபாட்டை வைத்து கேலி செய்வது போன்ற செயல்கள் கூடாது என்று கூறினேன். அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சமூகத்தில் வாழும் சகல உரிமைகளும் உண்டு என்பதை நாம் மறக்கலாகாது என்றும் பதிவு செய்தேன். நம்மால் இயன்ற அளவு மாற்றுத்திறன் உடைய சக மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்தேன்.

உரை முடிந்ததும் வேக வேகமாக சில மாணவர்கள் என்னிடம் ஓடிவந்து கை குலுக்கினர். அதில் ஒரு பாப்பா, “சார், மாற்றுத்திறனாளிகள் பற்றி இத்தனை பேர் மத்தியில் பேசியதிற்கு மிகவும் நன்றி சார்! எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான். அவனும் மாற்றுத்திறனாளிதான். நீங்கள் சொன்னதை கேட்டபோது எனக்கு உண்மையே அழுகை வந்துவிட்டது.” என்று கூறினார். அதேபோல இன்னொரு சிறுமியும் “சார், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் இத்தனை தடைகளும், துயரங்களும் இருப்பது எங்களுக்கு இதுநாள் வரை தெரியவே இல்லை. இனி நாங்கள் அவர்களுக்கு எங்களால் ஆன சந்தர்ப்பத்தில் எல்லாம் உதவுவோம்.” என்று கூறினார்.

விதை பரவுதலில் காற்றின் மூலம் பரவுவதும் ஒரு வகை. வேலிப்பருத்தி போன்ற சில தாவரங்கள் தங்கள் விதைகளை காற்றில் பரவச் செய்வதன் மூலம் வெவ்வேறு இடங்களில் முளைக்க முயலும். ஆனால் அதில் வெற்றி சதவீதம் மிகக் குறைவு என்பதால், கொத்துக் கொத்தாகக் காய்த்து, பறக்க ஏதுவான பஞ்சு போன்ற அமைப்புடன் கூடிய ஏகப்பட்ட விதைகளைக் காற்றில் செலுத்தும். அப்போதுதான் அதில் ஒன்றிரண்டாவது உயிர் பிழைக்கும் என்ற கணக்கீட்டில் இயற்கை செய்துதரும் சாமர்த்தியமான ஏற்பாடு இது. விழிப்புணர்வு பரவலாக்கமும் அது போலத்தான். போய்ச் சேரும் மனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் என்பதாலேயே, வாய் ஓயாமல், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இவ்விஷயங்களைப் பேசியபடியே இருக்கிறேன். இன்று நல்ல ஈர நிலங்கள் சிலவற்றில் அவ்விதைகள் விழுந்துவிட்டன என்று புரிந்த போது எனக்கும் கூட கண்கள் பனித்தன. அக்குழந்தைகளிடம் அதைக் காட்டாமல் சமாளித்துக் கொண்டேன். மிகுந்த நிறைவுடன் முடிந்த நாள் இன்று.

+++++++++

Posted in Uncategorized | Leave a comment