மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]

அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என எல்லோரும் சமாதானம் சொல்லிப் பார்த்துவிட்டனர். ஆனால் ஷாலுவால் மரப்பாச்சி கை நழுவிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கும் விடுதிக்கு வந்த பின்னும் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. யாரோடும் பேசாமல் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

“இதோ பார் ஷாலு… இப்படியே மூஞ்சியைத் தூக்கி வச்சுகிட்டு உட்கார்றதுல எந்த அர்த்தமும் இல்லை. அப்பா வேணும்னா… வேற மரப்பாச்சி வாங்கித்தாரேன்” என்றார். இவள் எதுவும் பேசவில்லை.

“அவகிட்ட என்ன கெஞ்சிகிட்டு இருக்கீங்க.. நாலு சாத்து சாத்தினா வழிக்கு வந்துடப்போறா… நீங்க இந்தப் பக்கம் வாங்க…” என்று அம்மா வந்தார்.

“அக்கா… நீ சும்மா இருக்கமாட்ட… பாவம் அவ… எவ்வளவு ஆசையா இருந்துச்சுன்னா… அந்த மரப்பாச்சியைக் கையிலயே தூக்கிட்டு வந்திருப்பா… ஸ்மார்ட் போன் கொடு, ரிமோட் கார் கொடுன்னா கேக்குறா… மரப்பாச்சி தானே…” என்று ஷாலுவுக்கு ஆதரவாக வந்தார் சித்தி.

“மரப்பாச்சிதாண்டி… வேற வாங்கித்தாரேன்னு எத்தனை தடவ சொல்லியாச்சு. ஆனா தொலைஞ்சு போன அதே மரப்பாச்சிதான் வேணும்னு சொல்றா, அப்பத்தான் சாப்பிடுவேன்னு அடம்வேற… நீ என்னடான்னா அவளுக்குச் சப்போர்ட் செய்யுற…?”

“சரிம்மா கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா…! இதோ பார் ஷாலு, நானும் செல்வமும் போய், தேடிப்பார்த்துட்டு வாரோம். கிடைச்சா சரி… ஆனால் கிடைக்காட்டி… அப்புறமாவும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. நாங்க சொல்லுறபடி நடந்துக்கனும் சரியா?” என்று அப்பா கேட்டார்.

“நானும் வாரேன்” என்று கிளம்பினாள் ஷாலு.

“அதெல்லாம் வேணாம்மா… நீ இங்கேயே இரு. அதுதான் நாங்க போறோம்ல… ட்ரஸ்ட் மீ” என்றார் செல்வம்.

விருப்பமே இல்லாமல் ‘சரி’ எனத் தலையசைத்தாள் ஷாலு.

அப்பாவும் சித்தப்பாவும் அறையில் இருந்து வெளியேறினார்கள். கொஞ்ச நேரத்தில் கார் கிளம்பிப்போகும் சத்தம் கேட்டது. அம்மாவும் சித்தியும் அந்தப்பக்கம் போவதற்காகக் காத்துக்கொண்டிருந்தான் சூர்யா. அவன் எதிர்பார்த்த தருணம் வந்ததும் ஷாலுவின் அருகில் வந்தான்.

பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்சநேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அப்புறம் மெதுவாக, “ஷாலு… மரப்பாச்சி கிடைச்சிடும். கவலைப்படாதே…” என்று சொன்னான். அவள் இவனை முறைப்பதுபோலப் பார்த்தாள்.

“என்னைய ஏன் முறைக்கிற…? நானா அதைக் கீழே போட்டேன்…”

“உனக்கென்ன… உன் சுண்டைக்காய் இளவரசன் எப்ப நினைச்சாலும் வருவாரு போவாரு… எனக்குக் கிடைச்ச ஒரே ஒரு மரப்பாச்சி அதுவும் போயிடுச்சு… அதனால சோகத்துல இருக்கேன். நீ பேசாம போயிடு, ஆமா…” என்று சூர்யாவைப் பார்த்துக் கோபமாகக் கத்தினாள் ஷாலு.

“கூல்… கூல்… சுண்டக்காய் இளவரசனை நான் கடைசியா பார்த்தே ஒரு வருசமாச்சு தெரியுமா?”

ஷாலுவிற்கு வியப்பாக இருந்தது.

“என்னது ஒரு வருசமாச்சா..?”

“ஆமாம்… நான் என்ன தெலுங்குலையா சொல்றேன். தமிழ்ல்லதான… அப்புறம் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டால்…?” இப்போது சூர்யாவின் குரலில் மாற்றம் இருந்தது.

“சரி… சரி… இப்போ நீ கூல்… கூல்” என்று இரு கைகளையும் தூக்கி ஆசிர்வதிப்பதுபோலச் செய்தாள் ஷாலு. சூர்யாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“கூலாகிட்டியா… இப்பச்சொல்லு… ஏன் அவர் உன்னைப் பார்க்க வரலையா?” என்று கேட்டாள் ஷாலு.

“அவர் சொன்ன மாதிரியே, ஒவ்வொரு அம்மாவாசைக்கும் வந்துட்டு இருந்தார். அப்புறம் ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை வந்தார். அப்படியே குறைஞ்சு போச்சு…”

“அவர் வருவது குறைஞ்சதுமே நீ கேட்கலையா…?”

“கேட்காம இருப்பேனா… கேட்டேன். அவர் சொன்ன பதில் சரியானதாகத் தோனிச்சு.. ஆரம்பத்துல நானும் உன்னைய மாதிரி, அழுதுட்டு இருந்தேன். அப்புறம் சமாதானமாகிட்டேன்”

“என்ன சொன்னார்?”

“அவங்களைப் போல, சூப்பர் பவர் இருக்கிறவங்க ஒரே இடத்துல தங்கிவிடக்கூடாதாம். நம்மளை மாதிரியே பலரையும் சந்திக்கிறதுதான் அவங்களோட முக்கியமான வேலையாம். ஒரே இடத்தில் தங்கி, நம்மை மட்டுமே சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது சுயநலமில்லையான்னு கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியலை. முதல்ல அழுகைவந்துச்சு… அப்புறம் யோசிச்சப்ப… அது சரின்னு தோணிச்சு.”

“- – – – – – -”

ஷாலு அமைதியாக இருந்தாள். அவளுக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சூர்யா தொடர்ந்தான். “இதைத்தான் நான், உனக்கும் சொல்ல நினைச்சேன் ஷாலு. சுண்டக்காய் ஆகட்டும் மரப்பாச்சி ஆகட்டும் அவங்களோட தேவை இன்னொரு இடத்திலையும் இருக்கும். அங்க அவங்க போவதுதான் சரி. அதே சமயம் அவங்களுக்கு நம்ம நினைப்பு வந்துச்சுன்னா… கண்டிப்பாக வந்து பார்ப்பாங்க. அந்த நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதே!” என்றான் சூர்யா.

சூர்யா சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும், மரப்பாச்சியைத் தேடிப் போய் இருக்கும், அப்பா, சித்தப்பா கையில் கிடைத்துவிடாதா… என்ற நப்பாசையுடன் அவர்களின் வரவுக்காகக் காத்திருந்தாள் ஷாலு.

*********

ஏலகிரியின் மலைகிராமம் ஒன்றில்…

“மயிலு… மயிலு..” என்று குரல் கொடுத்தவாறு வீட்டின் வாசல் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி, இறங்கினார் முருகன்.

“என்னப்பா…?” என்று உள்ளிருந்து வாசலுக்கு ஓடிவந்த மயிலுக்குப் பத்து வயதிருக்கும். இரட்டைச்சடைப் பின்னல் போட்டிருந்த அவள் ஒல்லியாக இருந்தாள்.

“அப்பா… உனக்கு என்ன கொண்டு வந்திருக்கேன்னு சொல்லு” என்று கையைப் பின்னாடி வைத்தபடியே கேட்டார்.

“முறுக்கு…”

“இல்லை…”

“அதிரசம்…”

“அதுவும் இல்லை…”

“கலர் பென்சில் கேட்டேனே… அதுவா…”

“ம்ஹூம்… இல்லை.”

“நீங்களே சொல்லிடுங்கப்பா…”

“மரப்பாச்சிப் பொம்மை” என்று அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த மரப்பாச்சியை அவளின் முகத்துக்கு நேராக எடுத்து நீட்டினார்.

“ஐ… கவுனு எல்லாம் போட்டிருக்கே… எங்கே இருந்துப்பா…” என்று ஆசையாக அதை வாங்கிப் பார்த்தாள்.

“கறந்த பாலை சொஸைட்டியில ஊத்தீட்டுச் சைக்கிளில் திரும்பி வரும்போது வானத்துல இருந்து பறந்து வந்து, என்னோட மடியில விழுந்துச்சும்மா… மொதல்ல அப்பா பயந்துட்டேன். சைக்கிளை நிப்பாடி, இறங்கிப் பாத்தால்… லுங்கியில மாட்டி இருந்துச்சும்மா… மரப்பாச்சின்னுத் தெரிஞ்சப் பின்னாடிதாம் பயம்போச்சு…”

தன் அப்பா சொன்னக் கதையை வியப்புடன் கேட்ட மயில், மரப்பாச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். அது இவளைப் பார்த்துச் சிரித்தது.

(முடிந்தது)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆசிரியரின் பிற சிறார் நூல்கள்

  1. ஆமை காட்டிய அற்புத உலகம்
  2. சுண்டைக்காய் இளவரசன்
  3. புதையல் டைரி
  4. மரப்பாச்சி சொன்ன ரகசியம்
  5. சிங்கம் பல்தேய்க்குமா?
  6. சேர்ந்து விளையாடலாம்!
  7. யானை ஏன் முட்டை இடுவதில்லை?
  8. உட்கார்ந்தே ஊர் சுற்ற…
  9. தலைகீழ் புஸ்வாணம்
  10. பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
  11. மந்திரச் சந்திப்பு
  12. நான்காவது நண்பன் (மொழிபெயர்ப்பு)
  13. என்னதான் நடந்தது (மொழிபெயர்ப்பு
  14. எல்லைகள் (மொழிபெயர்ப்பு)
  15. ஆறு (மொழிபெயர்ப்பு)
Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , | 1 Comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]

காரில் இருந்து இறங்கியதும் சுற்றிலும் பார்த்தாள் ஷாலு. அந்த இடம் மலையில் இருந்தாலும் சமதளமாக இருந்தது. மைதானம் போன்ற அந்த இடத்தின் முடிவில் மலையின் சரிவு தொடங்கியது. அதனால் அங்கே சில மைல்கல் நட்டு, மஞ்சள் வண்ணம் பூசி இருந்தனர்.

அங்கே இவர்களைப்போலவே பாராகிளைடிங்கில் பறக்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் தங்கள் வந்த கார்களை ஒட்டி நின்று கொண்டிருந்தனர். பாராகிளைடிங் பயிற்சியாளரிடம் சென்று செல்வம் பேசிவிட்டு வந்தார். அம்மாவும் சித்தியும் பறக்க மறுத்து விட்டனர். பறந்து அனுபவம் இருப்பவர்களை மட்டும் தனியாகப் பறக்க அனுமதித்தனர். புதியதாகப் பறக்க விரும்புகிறவர்களுக்கு “டேன்டம் கிளைடிங்” முறையில் பயிற்சியாளர்கள் கிளைடரை மாட்டிக்கொண்டு, புதியவர்களைச் சுமந்து, பறப்பதற்கு உதவினார்கள். மலையேற்றத்தில் ஆர்வமுடைய செல்வம் சித்தப்பாவிற்குப் பறந்து முன் அனுபவம் இருப்பதால் பயிற்சியாளரின் துணையின்றித் தனியாகப் பறப்பதற்கு ஆயத்தமானார்.

அவருக்கு ஷோல்டர் பேக் மாதிரி பெரிய பேக் ஒன்றை மாட்டிவிட்டனர். அதிலிருந்து பெல்ட்டை கால்களுக்கு இடையே கொடுத்து மாட்டினர். ஷூக்களில் நீண்ட நைலான் கயிற்றைக் கொக்கிகள் மூலம் இணைத்தனர். அக்கயிற்றின் மறுமுனை நீண்ட நைலான் துணியில் இணைக்கப்பட்டிருந்தது.

செல்வம் கொஞ்சம் சரிவில் நின்றுகொண்டு, நைலான் கயிற்றை அப்படியும் இப்படியுமாக அசைத்து இழுத்தார். அந்தத் துணி பாராசூட் போலக் காற்றில் மேலே எழும்பியது. அப்படியே சரிவில் இருந்து கீழ்நோக்கி ஓடினார். காற்றுப் பலமாக வீச, அப்படியே கால்களை மடக்கிக்கொண்டார். இப்போது காற்று அவரை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு போனது. பார்ப்பதற்கே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே… பறந்தால்… ஷாலுவிற்கு நினைக்கும் போதே சிலிர்த்தது. மரப்பாச்சியையும் கையில் எடுத்துக்கொண்டு பயிற்சியாளரிடம் ஓடினாள் ஷாலு.

அடுத்தடுத்து அப்பாவும், சூர்யாவும் பயிற்சியாளருடன் பறந்து போனார்கள். இப்போது ஷாலுவின் முறை, முழுத்தயாரிப்புடன் பயிற்சியாளர் ஒருவர் வந்தார். அவரின் உடையில் இன்னொருவரை சுமந்து செல்லக்கூடிய பெல்ட் வசதிகள் இருந்தன. கூடுதலாக உடன் பறப்பவர் அமர்ந்து கொள்ளக்கூடிய தொட்டில் போன்ற வசதியும் அதில் இருந்தது. ஷாலுவையும் அதில் அமரச்செய்து, பெல்ட் எல்லாம் அணிவித்தார். அவர் சொன்னபடி கேட்டால் போதும் என்று சொல்லிவிட்டு, ஷாலுவை கொஞ்ச தூரம் ஓடலாம் என்று சொல்லிவிட்டு அவர் ஓட, இவளும் அவருடன் ஓடினாள். கால்களை மடக்கிக்கொள்ளும்படி அவர் சொன்னதும், இவளும் கால்களை மடக்கிக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாகக் கிளைடர் பறக்கத் தொடங்கியது.

முதலில் பயமாக இருந்தபோதும், அந்தரத்தில் பறப்பது சுகமான அனுபவமாக இருந்தது. காற்று முகத்தில் மோதி, ஷாலுவின் தலைமுடியை கோதிவிட்டுச் சென்றது. பயிற்சியாளர் இருகைகளிலும் கையுறை மாட்டியிருந்தார். அவரது இரண்டு பக்கமும் இருந்த சிவப்பு வண்ண நைலான் கயிற்றை பிடித்திருந்தார். அவ்வப்போது இடதும் வலதுமாக அவற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அவரின் இழுப்புக்கு ஏற்ப, காற்றில் பறந்தது கிளைடர்.

அதுவரை கைக்குள் மறைத்து வைத்திருந்த மரப்பாச்சியை வெளியே எடுத்தாள் ஷாலு. இவளைப் பார்த்து அது சிரித்தது. “இளவரசி, வானத்துல இருந்து கீழே பார்க்க எத்தனை அழகாக இருக்கு பார்” என்று மரப்பாச்சியைத் தூக்கி, கீழே காட்டினாள்.

க்ளைடரை இயக்கிக்கொண்டிருந்தவர் பார்க்கிறாரா என்று முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். அவரோ இது எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரது கவனம் முழுவதும் பறக்கும் க்ளைடரை காற்றுக்கு ஏற்றவாறு திசைதிருப்பி, இயக்குவதிலேயே இருந்தது.

“அதோ… அது என்னது தெரியுமா?” என்று பயிற்சியாளர் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி கேட்டார். அவர் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்தாள். அங்கே தூரத்தில் வெள்ளையாக அரைக்கோளவடிவில் ஒரு கட்டடம் தெரிந்தது. உயரத்தில் இருந்து பார்க்கவே பெரியதாகத் தெரிந்தது. அப்படி என்னால் கிட்டே போனால் எவ்வளவு பெரியதாக இருக்குமென்று தோன்றியது.

“தெரியலையே!” என்றாள்.

”அதுதான். வானிலை ஆராய்ச்சி மையம். அங்கே போனா… டெலஸ்கோப்புல நிலாவை எல்லாம் கிட்டப் பார்க்கலாம்” என்றார்.

அந்த இடத்தைப் பார்த்தவாரே கீழே பார்த்தால்… மரங்கள் பாதைகளை மறைத்து எங்கும் காடுகளாகத் தெரிந்தன. இவ்வளவு உயரத்தில் இருந்து பறக்கிறோமே… அதுபற்றிப் பயம் இல்லாமல் இருக்கிறார் என்றால் சரி… பழகிப்போயிருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மகிழ்ச்சி கூடவா இருக்காது. எத்தனை முறை பறந்தாலும் இந்த மகிழ்ச்சி ஒவ்வொரு முறையும் புதிதல்லவா… யோசனை செய்தவாரே, நாலா பக்கமும் பார்த்துக்கொண்டே பறந்து கொண்டிருந்தாள் ஷாலு. கீழே குட்டி குட்டியாக மனிதர்கள் தெரிந்தார்கள். உண்மையில் அவர்கள் மனிதர்கள் தானா என்ற சந்தேகம் வந்தது.

“அங்கிள்… அதோ… கீழே தெரியுதே… அவங்க மனுஷங்க தானா… அல்லது… பொம்மை கிம்மையா” என்று கேட்டாள். அவளது குரல் பின்னால் பறந்தவருக்குக் கேட்கவில்லை.

இவள் அவரைத் தட்டினாள். அவர் குனிந்து, “என்னம்மா?” என்று கேட்டார். இவள் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டாள். அவரும் கீழே பார்த்துவிட்டு, “எதைக் கேக்குறன்னு தெரியலையே பாப்பா…” என்றார்.

இவள் மரப்பாச்சி வைத்திருந்த கையால் இடத்தைச் சுட்டிக்காட்டினாள். அந்த இடத்தைப் பார்த்தவர், “ஆமாமா… அது சின்னப்பசங்க… இங்கே மலைக்கிராமத்துல இருக்குற சின்னப்பசங்கதான். விளையாடிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

அப்போது, கிளைடர் கொஞ்சம் ஆடியது. ஷாலுவின் கையில் இருந்த மரப்பாச்சியின் பிடி நழுவியது.

“ஐயோ… என்… மரப்பாச்சி” என்று வீறிட்டாள்.

“என்ன ஆச்சு பாப்பா?” என்று குனிந்து கேட்டார்.

“என்னோட… பொம்மை கீழே விழுந்துடுச்சு…” என்று சொன்னாள்.

“பொம்மைதானே… விடுப்பா…” என்று கிளைடரை தரை இறக்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். காற்றில் மரப்பாச்சி பறந்து போவதுபோல இருந்தது. அதன் அருமை பற்றி இவரிடம் எல்லாம் சொல்ல முடியாது. சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது. கீழே விழுந்துகொண்டிருக்கும் மரப்பாசியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் ஷாலுவுக்குச் சூர்யாவின் நினைவு வந்தது. அவனைத் தேடினாள். தூரத்தில் சில கிளைடர் பறப்பது தெரிந்தது. அதில் அவன் எதில் பறக்கிறானோ… கீழே வந்ததும் விஷயத்தைச் சொல்லுவோம் என்று நினைத்துக் கொண்டாள். ஆனாலும் ஒருவித படபடப்பாகவே இருந்தது. எப்படியும் திரும்பவும் கையில் கிடைத்துவிடவேண்டும் என்று சாமியையும் வேண்டிக்கொண்டாள். கிளைடர் கீழே இறங்கத்தொடங்கியது.

Box news

வைணு பாப்பு வானிலை ஆராய்ச்சி மையம்: ஆசியாவிலேயே பெரிய தொலைநோக்கி இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஏலகிரியை அடுத்த ஜவ்வாது மலையின் காவனூரில் அமைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வாளர்களின் முன்னோடியான வைணு பாப்பு பெயரே இம்மையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுக்குச் சிறந்த இடம் என்று இங்கு இடத்தைத் தேர்வு செய்தவரும் இவரே! சனிக்கிழமைகளில் வானம் தெளிவாக இருந்தால், இங்குள்ள வான் நோக்கி வழியாகப் பொதுமக்கள் நட்சத்திரங்களையும் நிலவையும் கண்டு மகிழலாம்.

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -11]

மறுநாள். பொழுது புலர்ந்து சூரியன் சோம்பல் முறிக்கும் முன் பெரியவர்கள் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். ஷாலு, ஹரி, சூர்யா மூவரையும் தூக்கத்திலேயே காரில் ஏற்றி விட்டனர். செல்வம்தான் காரை ஓட்டினார். நகரைக் கடந்து கார் நெடுஞ்சாலையில் ஓடத்தொடங்கியது.

ஹெட்லைட் போட்டுக்கொண்டு அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. சாலைக்கு அந்தப்பக்கம் வரும் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணைப் பறித்தது. நடுவே வைக்கப்பட்டிருந்த செடிகளினால் முழு விளக்கொளியும் அப்படியே நேராக விழவில்லை என்பது சற்று ஆறுதல்.

வேலூரைத் தாண்டி, ஆம்பூர் நெருங்கும்போது, ஷாலு கண்விழித்துப் பார்த்தாள். முன் சீட்டில் இருந்த அப்பாவும் சித்தப்பாவும் மட்டும் விழித்திருந்தனர். பின் இருக்கைகளில் இருந்த எல்லோரும் உறக்கத்தில் இருந்தனர். ஏ.சி இதமாக இருந்தது. வண்டிக்குள் மெல்லியதாக ஏதோவொரு திரையிசைப் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டாள்.

“இன்னும் ஏலகிரி எவ்வளவு தூரம்ப்பா..?”

“அடடே.. ஷாலுக்குட்டி முழிச்சுட்டியா… வெரிகுட். ஆம்பூர் பக்கத்துல வந்துட்டோம்டா… இன்னும் கொஞ்ச நேரம் தான். அடுத்து ஏலகிரிதான்.”

வெளிச்சம் ஏறத்தொடங்கி இருந்தது. ஏற்றப்பட்டிருந்த காரின் கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் ஷாலு. சீரான வேகத்தில் கார் ஓடிக்கொண்டிருந்தது. மிச்சமிருந்த உறக்கம் ஷாலுவின் இமைகளை இழுத்துப்பிடித்து மூடியது. கொஞ்ச நேரத்தில் திரும்பவும் தூங்கிப்போனாள். எவ்வளவு நேரம் தூங்கினாள் என்பது தெரியாது. கண் விழித்தபோது, சாலையின் ஒரு ஓரமிருந்த ஹோட்டலில் வண்டி நின்றிருந்தது. எல்லோரும் இறங்கிக்கொண்டிருந்தனர்.

ஷாலுவும் வண்டியை விட்டு இறங்கினாள். உடம்பெல்லாம் வலித்தது போலிருந்தது. கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தாள். சுற்றிலும் பார்த்தாள். நிறையக் கார்கள் நின்றுகொண்டிருந்தன. அம்மாவும் சித்தியும் தங்களது உடைகளைச் சரி செய்துகொண்டிருந்தனர். இவளைப் பார்த்த்தும், “ஏய்.. ஷாலு.. பாத்ரூம் போயிட்டு வந்திடலாம். வா… அடுத்து மலை ஏற ஆரம்பிச்சா.. வழியில எங்கேயும் வண்டியை நிறுத்த முடியாது. வா.. போகலாம்.” என்று அழைத்தார் அம்மா.

இவள் சூர்யாவைத் தேடினாள். அவன் அப்பா, சித்தப்பாவுடன் ஆண்கள் கழிவறைப் பக்கம் போய்க்கொண்டிருந்தான். அப்பாவின் தோளில் ஹரி சாய்ந்திருந்தான். இவளும் அம்மா, சித்தியுடன் சென்றாள்.

திரும்பி வந்ததும் செல்வம் மட்டும் ஒரு காபி வாங்கிப் பருகினார். மலை ஏறும் போது வாந்தி வரும் என்பதால் மற்றவர்கள் ஏதும் சாப்பிடவில்லை. ஷாலுவிற்கு எதையாவது சாப்பிட்டால் தேவலாம் என்று தோன்றியது. அம்மாவிடம் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். “வழியில வாந்தி எடுத்து வச்சிருவ… சும்மா இரு” என்று ஓர் அதட்டு போட்டதும் அமைதியானாள் ஷாலு.

அங்கிருந்து கிளம்பினர். மலையேறுவதே முதலில் தெரியவில்லை. ஏ.சி.யை அணைத்துவிட்டு, காரின் கண்ணாடிகளை இறக்கி விட்டிருந்தார் செல்வம். ஒரு பக்க ஜன்னலின் வழியே நுழைந்த காற்று முகத்தில் அறைந்து, அதே வேகத்தில் அந்தப்பக்கம் ஜன்னல் வழியே ஓடிற்று. இருபது நிமிடப் பயணத்திற்குப் பின்தான் மலை ஏறுவதை உணரமுடிந்தது. வழக்கத்தை விட வண்டியின் வேகம் குறைந்திருந்தது.

வாகனங்கள் போகவும் வரவும் ஒரே சாலை தான். இருபுறமும் ஓர் அடிக்கு நீண்ட சுவர் எழுப்பி இருந்தனர். சாலையின் நடுவில் வெள்ளை பெயிண்ட்டில் நீளமான கோடு போட்டிருந்தார்கள். நீண்டு போகும் சாலை. அப்புறம் ஒரு வளைவு. மீண்டும் நீண்ட சாலை. மறுபடியும் ஒரு வளைவு. இப்படியாக வண்டி மலையின் மேல் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

சூர்யாவும், ஷாலுவும் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடி பயணம் செய்தனர். “ஏய்… இந்தப்பக்கம் குரங்கு பாரு”, “ஏய்… இந்தப்பக்கம் பாரு… வீடு எல்லாம் குட்டிக்குட்டியாகத் தெரியுது” என்று அவர்கள் பார்க்கும் காட்சிகளை எல்லாம் சொல்லிச்சொல்லி இருவரும் பரஸ்பரம் ஆவலைத் தூண்டிக்கொண்டிருந்தனர். நாற்பது நிமிடங்களில் எல்லாம் மலையை அடைந்து விட்டனர்.

செல்வம், ஏற்கனவே தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்துவிட்டார் என்பதால், தங்கும் விடுதிக்கான வழியை இரண்டொருவரிடம் விசாரித்து, அங்கே போய்ச்சேர்ந்தனர். வண்டியைவிட்டு கீழே இறங்கியதுமே குளிர்காற்று எல்லோரையும் தழுவி வரவேற்றது. ஷாலுவிற்கு நடுங்குவது போல இருந்த்து. மரப்பாச்சியைக் கையில் இறுகப் பற்றிக்கொண்டு பெரியவர்களின் பின்னால் நடந்தாள். ஹோட்டலுக்குள் போய், விபரம் சொன்னதும் இரண்டு அறைச்சாவியை எடுத்து நீட்டினார்கள். இரு குடும்பத்தினருக்கும் அடுத்தடுத்த அறைகள்.

*****

குளித்து, ஹோட்டலிலேயே கொடுத்த சிற்றுண்டியை சாப்பிட்டு ரெடியாகி, ஏலகிரியைச் சுற்றிவர கிளம்பினர். சிறுவர் பூங்காவிற்கு முதலில் போனார்கள். அங்கே ஊஞ்சல், சறுக்கு விளையாட்டுக்கான வசதிகள் என்று நிறைய இருந்தன. உயரமாக வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் கூட்டு சேர்ந்து, சூரிய ஒளியை பூமி மீது விழாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அப்படியும் காற்றின் உதவியுடன் கிளைகளை அசைத்து, பூமியை முத்தமிட்டுச் சென்றது சூரிய ஒளி.

ஏரியில் படகுசவாரி. ஷாலுவுக்குச் செம ஜாலியாக இருந்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்ததினால் கையில் வைத்திருந்த மரப்பாச்சியை இறுகப் பற்றிக்கொண்டிருந்தாள். அது யாருக்கும் தெரியாமல், பற்றி இருந்த ஷாலுவின் கையை ‘பயப்படாதே’ என்பதுபோலத் தடவிக்கொடுத்தது. அப்பாவும் சித்தாப்பாவும் செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கும் சமயங்களில் எல்லாம் மரப்பாச்சியும் படத்தில் தெரியும்படி பிடித்துக்கொண்டாள். பன்னிரெண்டு மணிவாக்கில் பாராக்ளைடிங்கில் பறக்கும் இடத்தை அடைந்தனர்.

Box NEWS

பாராகிளைடிங்: பாரா சூட் அறிந்திருப்பீர்கள் தானே! அதைப்போன்றே காற்றின் உதவியால் இயங்கக்கூடிய அமைப்பு இதனுடையது. பாராகிளைடிங் என்பது பறக்கும் சாகச விளையாட்டு. இலகுவான காற்றில் கிழியாத துணியானது பலதரப்பட்ட கயிற்றினால் இணைக்கப்பட்டிருக்கும். அதன் நுனியில் உள்ள இருக்கைப் போன்ற அமைப்பில் அமர்ந்தோ அல்லது படுத்த நிலையிலோ உயரத்தில் இருந்து குதித்துப் பறப்பது. சாகச விளையாட்டு என்றாலும் இது ஆபத்தான விளையாட்டும் கூட! ஏனெனில் இது இயந்திரம் கொண்டு இயங்குவதில்லை. காற்றினால் மட்டுமே பறக்கிறது. தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தான் இவ்வீரர்கள் பறப்பார்கள்.

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -10]

வீட்டு வாசலில் ஷாலுவை இறங்கிவிட்டு வேன் கிளம்பிப்போனது. வாசலில் எப்போதும் நிற்கும் அம்மாவைக் காணவில்லை. வெளிக்கதவைத் திறந்து உள்நுழையும் போதே யாரோ விருந்துனர்கள் வந்துள்ளனர் என்று தெரிந்துவிட்டது. வாசலில் கிடக்கும் செருப்புகளை வைத்து யார் வந்துள்ளனர் என்பதை யூகிக்க முடியவில்லை. வீட்டுக்குள் இருந்து பேச்சும் சிரிப்புமாகச் சத்தம் பலமாகக் கேட்டது. அதை வைத்து கண்டுபிடிக்கவும் முடியவில்லை. தனது ஷூக்களைக் கழட்டி, ஓரமாக வைத்துவிட்டு, தயக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தாள் ஷாலு.

“ஹாய்… ஷாலு” என்று எல்லோரும் ஒருமித்தக் குரல் எழுப்ப, கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். வியப்புடன் அவர்களைப் பார்த்தாள். ஊரில் இருந்து ரேவதி சித்தி, செல்வம் சித்தப்பா, சூர்யா எல்லோரும் வந்திருந்தனர். அவர்களோடு அப்பாவும் அமர்ந்திருந்தார். சூர்யா, தனது கண்ணாடியை சரி செய்தபடி இவளைப் பார்த்து, “உனக்காகத்தான் வெயிட்டிங்” என்றான். சூர்யா, இவளைவிட, ஆறு மாதங்கள் மூத்தவன். கடந்தமுறை பார்த்ததைவிட, இம்முறை கொஞ்சம் உயரம் கூடி இருந்தது மாதிரி இருந்தான். மெலிந்திருந்தான். எல்லோரையும் பார்த்து, “ஹாய்…” என்று சொல்லிவிட்டு, உள்ளே போகப்போனவள் முன்னால் குதித்து ஓடிவந்தான் சூர்யா.

“ஷாலு, நாளைக்கு நாம எல்லாம் ஏலகிரி போறோமே…” என்றான்.

“நாளைக்கா…”

“ஆமா… நாளைக்குத்தான்” என்றான் சூர்யா.

“டேய், மொதல்ல அவ, போய் ப்ரஷ் ஆகிட்டு வரட்டும்டா… மெதுவா சொல்லிக்கலாம். நீ போம்மா, போய் யூனிபார்ம் எல்லாம் மாத்திட்டு வா…” என்று ரேவதி சித்தி சொன்னார்.

“இதோ நிமிஷத்துட வந்துடுறேன் சித்தி” என்று உள்ளறைக்கு ஓடி, தனது ஸ்கூல் பேக்கை வைத்துவிட்டு, சாப்பாட்டுக் கூடையுடன் கிச்சனுக்குப் போனாள். அம்மா அங்கே அடுப்பில் ஏதோ வேலையாக இருந்தார்.

“ஏம்மா… நாளைக்கு நாம ஏலகிரி போறோமா என்ன…?”

“ஆமான்டி.. சித்தி சித்தப்பாவோடயே… காரில் போய்விட்டு, காரிலேயே வந்துவிடலாம்” என்று சொன்னார் அம்மா.

திரும்பவும் உள்ளறைக்குச் சென்று, முகம், கை கால்களைக்கழுவி, ஆடை மாற்றிக்கொண்டு, ஹாலுக்கு வந்தாள்.

“என்ன சித்தி.. சர்ப்ரைஸா வந்திருக்கீங்க..?” என்று சித்தியின் அருகில் போய் அமர்ந்தாள் ஷாலு.

“ஆமா செல்லம். திடீர் ப்ளான். சனி, ஞாயிறு லீவுல எங்கேயாவது போலாம்னு ப்ளான் போட்டோம். ஒரு வருஷமா எங்கேயுமே போகலையா… அதுதான். சூர்யாதான் ஏலகிரி போகலாம்னு யோசனை சொன்னான். போறவழி தானே எல்லோரும் சேர்ந்து போலாம்னு நினைச்சோம். அதுதான் சர்ப்ரைஸ் விசிட்” என்று சிரித்தார்.

“எப்போ கிளம்புறோம் சித்தி?”

“நாளைக்கு விடியக்காலையில…”

“அங்கே… பாரா க்ளைடிங் இருக்கு ஷாலு. வானத்துல அப்படியே பறக்கலாம். செம ஜாலியா இருக்குமாம்” என்று ஆர்வமுடன் சொன்னான் சூர்யா.

“பாராக்ளைடிங்கா… எனக்குப் பயமா இருக்குப்பா… நான் வரலை…”

“ஐயே… துணைக்கு ஆள் எல்லாம் வருவாங்க. அப்புறம், அங்க இருக்குற ஏரியில போட்டிங் எல்லாம் போகலாம்.” என்றான் சூர்யா.

“சரி! அதை அப்புறம் பார்க்கலாம். என்னோடு வா… உனக்கு ஒரு மேஜிக் காட்டுறேன்…” என்று சூர்யவை உள்ளறைக்கு அழைத்துச் சென்றாள் ஷாலு.

அறைக்குள் நுழைந்ததும், கதவை சாத்தினாள். ஸ்கூல் பைக்குள் வைத்திருந்த மரப்பாச்சியை, “டண்ட்டைங்ங்ங்ங்” என்று வெளியில் எடுத்து, அவன் முகத்துக்கு நேராக நீட்டினாள்.

“இதுல என்ன மேஜிக் இருக்கு…” என்று கேட்டான் சூர்யா.

“இரு அவசரப்படாதே… போனமுறை நீ சொன்னியே, சுண்டக்காய் பேசினது, அது இளவரசனாக மாறினது எல்லாம்.”

“ஆமா… நான் சொன்னது எல்லாம் நிஜம்.”

“ஆமா… நீ அப்ப சொன்னப்ப… நான் நம்பவில்லை. இப்ப நம்புறேன். அதுவும் இந்த மரப்பாச்சியாலதான்” என்று பூடகமாகச் சிரித்தாள்.

“மரப்பாச்சியா… ஓ! இந்தப் பொம்மையோட பெயரா… வித்தியாசமா இருக்கே.”

“ஐயோ… இந்தப் பொம்மைக்குப் பேரு மரப்பாச்சிடா… ஆனா இதோட பேரு இளவரசி. உன்னோட சுண்டக்காய் இளவரசன்* மாதிரியே இதுவும் பேசும்” என்றாள்.

“நிஜமாவா…”

“ஆமாண்டா, இப்பப் பாரேன்” என்றவள், மரப்பாச்சியை தரையில் இறக்கிவிட்டாள். பின், “இளவரசி… ப்ளீஸ்… இவனுக்காக ஒரு தரம் பேசிக்காட்டேன்.” என்று வேண்டினாள் ஷாலு. சில நிமிடங்களுக்குப் பின், மரப்பாச்சி உயிர்பெற்றது. “ஹாய் சூர்யா… நல்லா இருக்கியா?” என்று அவனைப் பார்த்து கேட்டது.

சூர்யாவிற்கு முன்னமே சாகச அனுபவம் இருந்தாலும்… இது வேறுமாதிரி அனுபவம் அல்லவா… வியப்பாக மரப்பாச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன ஷாலு… நான் பேசினதும், சூர்யாவுக்குப் பேச்சே வரமாப்போயிடுச்சே..” என்று சிரித்தது. “அதுதானே” என்ற ஷாலு, “டேய் சூர்யா” என்று ஒரு அதட்டும் தொனியில் குரல் கொடுத்தாள். சுயநினைவுக்கு வந்தான் சூர்யா.

“ஏய்… சூப்பரா இருக்கு. இது எப்படிப் பேசுது…” என்று ஷாலுவிடம் கேட்டான். அவனிடம் நடந்த எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்னாள் ஷாலு. வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த சூர்யா, உள்ளங்கை நீட்டினான். அதில் வந்து ஏறிக்கொண்டது மரப்பாச்சி.

முகத்துக்கு அருகில் கொண்டுவந்து பார்த்தான். குட்டிக்கண்கள், கூர்மையான மூக்கு, காதுகள் எல்லாம் பார்க்கப் பார்க்க… அவனுக்கு, சுண்டைக்காய் இளவரசன் நினைவு வந்தது.

உள்ளங்கையில் இருந்த மரப்பாச்சியைப் பார்த்து “ஏய்… நம்பவே முடியலை.” என்றான் சூர்யா.

“சுண்டக்காய் பேசியே பார்த்தவன் நீ. மரப்பாச்சி பேசுவதையா நம்ப முடியவில்லை என்கிறாய்?” என்று கேட்டது மரப்பாச்சி.

“அப்படி இல்லை. மற்றவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று சொன்னேன்”

“இன்னிக்கு காலையில ஸ்கூல செம கலாட்டா…” என்று ஆரம்பித்து, நடந்த எல்லாவற்றையும் சொல்லி சிரித்தாள் ஷாலு. மரப்பாச்சியும் சிரித்தது. அவர்களுடன் சூர்யாவும் சேர்துகொண்டான்.

“ஏய்… ஷாலு… சாப்பிடவாடி… சூர்யா நீயும் தான்… காலையில சீக்கிரமா கிளம்பனும்” என்று வெளியில் அம்மா குரல்கொடுத்து, கதவைத் தட்டினார்.

“இதோ வரேன்மா…” என்று பதிலுக்குச் சத்தமாகச் சொன்னாள் ஷாலு.

*‘சுண்டைக்காய் இளவரசன்’ கதை தனி நூலாக வந்துள்ளது.

(box news)

ஏலகிரி: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைவாழிடம். சென்னையில் இருந்து 230 கி.மீட்டருக்குள் உள்ள இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து 1050 மீட்டர் உயரத்தில் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொரு வளைவிற்கும் வள்ளுவர் தொடங்கி கம்பர், பாரதி என்று தமிழ்ப்புலவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதனைக் கடந்து போனால் ஏலகிரியை அடையலாம். கடும் கோடைகாலத்திலும் இங்கே குளுகுளுவென்றுதான் இருக்கும். இங்கே படகுக்குழாம், குழந்தைகள் பூங்கா, செயற்கை நீர் ஊற்று போன்றவை உள்ளன. சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கே மலையேற்றம், பாராகிளைடிங்க் போன்ற சாகச விளையாட்டுக்களும் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன.


(box news)
ஏலகிரி: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைவாழிடம். சென்னையில் இருந்து 230 கி.மீட்டருக்குள் உள்ள இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து 1050 மீட்டர் உயரத்தில் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொரு வளைவிற்கும் வள்ளுவர் தொடங்கி கம்பர், பாரதி என்று தமிழ்ப்புலவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதனைக் கடந்து போனால் ஏலகிரியை அடையலாம். கடும் கோடைகாலத்திலும் இங்கே குளுகுளுவென்றுதான் இருக்கும். இங்கே படகுக்குழாம், குழந்தைகள் பூங்கா, செயற்கை நீர் ஊற்று போன்றவை உள்ளன. சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கே மலையேற்றம், பாராகிளைடிங்க் போன்ற சாகச விளையாட்டுக்களும் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன.

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 9]

வகுப்பறைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்த பின்னும் நேத்ராவுக்கு மரப்பாச்சி நினைவாகவே இருந்தது. ஆசிரியர் எழுதிப் போட்டுக் கொண்டிருந்த கணக்குப் பாடத்தில் மனது செல்லவே இல்லை. என்னமோ வித்தியாசமாக நடப்பதாகத் தோன்றியது. மைதானத்தில் மரப்பாச்சி கைநழுவி விழுந்ததா? அல்லது கை நழுவி விழுந்ததா? மைதானத்திற்குள் அது உண்மையில் ஓடியதா, இல்லை காற்றில் பறந்ததா எதுவுமே புரியவில்லை. கேள்வி கேட்ட மிஸ்ஸிடமாவது எதையாவது சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லி, இப்படி மாட்டிக்கொண்டோமே என்பதை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. ஒரு பக்கம் கையில் ஏற்பட்ட சிராய்ப்பின் வலி. கைக்குட்டையை எடுத்து, கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

கைக்குட்டையை டேபிளில் வைக்கும்போது, மரப்பாச்சியைப் பார்த்தாள். அது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது. கண்களை மீண்டும் துடைத்துக்கொண்டு, அதைப் பார்த்தாள். இப்போது சிரிப்பது நன்றாகத் தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த மஹாவிடம் தலையைக்குனிந்தபடி, “இங்கபாருடி… இந்தப் பொம்மை என்னைய பார்த்து சிரிக்குது” என்றாள்.

மஹாவும் தலைகுனிந்தவாரே, அதைப் பார்த்தாள். அது சாதாரணமாக இருந்தது. “எங்கடி… சாதரணமாத்தானே இருக்கு…?” என்று கேட்டாள்.

நேத்ரா மரப்பாச்சியைப் பார்த்தாள். முன்பு இருந்த சிரிப்பு இப்போது இல்லை.

“இல்லடி… நிஜமாவே சிரிச்சுது…” என்றாள் நேத்ரா.

“ஒரு பொம்மை எப்படிடி சிரிக்கும். அதுக்கு உயிர் இருக்கா என்ன? உனக்கு மூளை குழம்பிடுச்சு போல…” என்று சொல்லும் போதே மஹாவின் குரலில் ஒரு ஏளனம் இருந்தது.

“என்னமோ தப்பு தப்பா நடக்குதுடி… நான் மிஸ்கிட்ட சொல்ல நினைச்சது வேற, ஆனா சொன்னது வேற; கொஞ்ச நேரம் முன்னாடி இது சிரிச்சது. இப்ப பார்த்தா சாதாரணமா இருக்கு. என்னமோ வித்தியாசமா இருக்குடி”

“எங்கே எங்கிட்ட கொடு” என்று அதை வாங்கியவள், மரப்பாச்சியை மேலும் கீழுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

“பேட்டரி கூடப் போடமுடியாது போலடி. சாதாரண மர பொம்மை. வித்தியாசம்னா பார்பிடால் ட்ரஸ் போட்டிருக்கு, சாஃப்டா இருக்கு…”

“என்னடி…” என்று ஷிவானி கேட்டாள்.

“இது சிரிக்குதுன்னு நேத்ரா சொல்லுறா…?”

“கொடு” என்று மஹாவின் கையில் இருந்து ஷிவானியின் கைகளுக்கு மாறியது. அடுத்து சம்யுக்தாவின் கைகளுக்கு. நேத்ராவும் அந்த வரிசையில் இருந்த தோழிகளும் தலைகுனிந்து பேசிக்கொண்டிருப்பதைக் கணக்கு ஆசிரியை பார்த்துவிட்டார்.

“ஏய்… அங்கே என்ன பேச்சு…?” என்று ஒரு குரல் கொடுத்தார். தோழிகள் அவசரமாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டனர். சம்யுக்தா மரப்பாச்சியை டேபிளின் உள்ளே பதுக்கி, அதன் மீது ஒரு கையை வைத்துக்கொண்டாள்.

“கேட்குறேன்ல… சொல்லுங்க…”

அவசரமாக நேத்ரா, “ஒண்ணுமில்லீங்க மிஸ்” என்றாள். இடது ஓரம் உட்கார்ந்திருந்த சம்யுக்தாவின் மீது பார்வையைப் பதித்தார் ஆசிரியை. அவள் மெதுவாக எழுந்து நின்றாள். அவளது கையில் மரப்பாச்சி இருந்தது.

“இந்தப் பொம்மையை வச்சித்தான் பேசிக்கிட்டு இருந்தோம் மிஸ்” என்று மரப்பாச்சியை எடுத்து, ஆசிரியையின் முன்னால் நீட்டினாள் சம்யுக்தா.

“க்ளாஸுல பொம்மை வச்சு விளையாடிக்கிட்டு இருக்கீங்களா? என்ன பொம்மைடி அது..” என்று சத்தம் போட்டபடியே, சம்யுக்தாவிடம் இருந்து அதைப் பிடுங்கிக்கொண்டு போய், தனது டேபிள் மீது வைத்தார். அப்போதுதான் மரப்பாச்சிக்குப் போட்டிருந்த பார்பி ஆடையும், அது மென்மையாக இருந்ததையும் உணர்ந்தார். மீண்டும் கையில் எடுத்துப் பார்த்தார். வித்தியாசமாகப்பட்டது.

“யாரோடது இது…?” என்று மாணவியரைப் பார்த்துக் கேட்டார்.

அமைதியாக ஷாலு எழுந்து நின்றாள்.

“என்னோடதுதான் மிஸ். இண்டர்வெல்ல நேத்ரா பிடுங்கிட்டு ஓடிவந்துட்டா…”

“ஏய்… நேத்ரா… இது அவளோடதுதானா…?”

“ஆமா மிஸ்” என்று நேத்ராவும் தலைகுனிந்தபடி எழுந்து நின்றாள்.

“ஓ… ஸ்கூலுக்குப் பொம்மை கொண்டு வந்து விளையாடுறீங்களா… கழுத வயசாச்சு… இன்னும் பொம்மையைத் தூக்கிட்டு திரியுதுங்க. படிக்கிறதைத் தவிர எல்லாம் செய்யுங்க. சரி… சரி… இப்பக் கிளாஸைக் கவனிங்க.” என்று மரப்பாச்சியை டேபிள் மீது வைத்துவிட்டு, முதலில் எழுதிய கணக்கை அழித்துவிட்டு, அடுத்ததை எழுதத் தொடங்கியபோதும், அடுத்தப் பிரீயடுக்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. மரப்பாச்சி பொம்மையை உடன் எடுத்துக்கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினார் கணக்கு ஆசிரியை.

“மிஸ்…” என்று பின்னாடியே ஓடினாள் ஷாலு.

“என்ன…?”

“அந்தப் பொம்மை…”

“ம்… ஈவினிங் வீட்டுக்குப் போகும் போது, வாங்கிட்டுப்போ…” என்று சொல்லிவிட்டு, அவர் போய்விட்டார்.

***

அடுத்தப் பிரீயட் சமூக அறிவியல். அதுவும் முடிந்த பின், உணவு இடைவேளையில் நேத்ராவும் அவள் தோழிகளும் ஷாலுவை சூழ்ந்துகொண்டனர்.

“ஏய்… உண்மையச் சொல்லுடி… அந்தப் பொம்மையில என்னவோ இருக்கு?”

“ஒன்னுமில்லையே…”

“பொய் சொல்லாதே… மொதல்ல… அது மர பொம்மை மாதிரி இருந்தாலும் சாஃப்டா இருக்கு. ரெண்டாவது கிரவுண்டுல ஓடிச்சு”

“ஓடலைடி… காத்துல பறந்துச்சு” என்றாள் மஹா.

“இல்லடி… ஓடிச்சு… நான் பார்த்தேன்” என்றாள் நேத்ரா.

“நாங்களும் தானடி இருந்தோம். அது காத்துலதான் உருண்டு ஓடிச்சு.” என்று விளக்கம் கொடுத்தாள் ஷிவானி.

“ஏய்… சும்மா இருங்கடி.. அதை அப்புறம் பேசிக்கலாம். மொதல்ல இவ கிட்ட கேட்போம்” என்று அவர்களை அமைதியாக்கிவிட்டு, ஷாலுவின் பக்கம் திரும்பி, “அந்தப் பொம்மையில என்னமோ இருக்கு. உண்மையச் சொல்லிடு! அதைக் கையில் வச்சிருந்தா… நாம நினைக்கிறதை பேசமுடியாமப் போகுது. உண்மை மட்டுமே சொல்லுறோம். பொய் பேசவே முடியலை.” என்று கேட்டாள் நேத்ரா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடி. அது சாதாரண மரப்பாச்சி பொம்மைதான்… நீங்க சொல்றது எல்லாம் எனக்குப் புதுசா இருக்கு” என்றாள் ஷாலு.

“சரி… விடுடி… இவ சொல்லுற மாதிரி, அது வெறும் மர பொம்மையாக்கூட இருக்கலாம்.” மஹா சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.

“இல்லடி…” என்று நேத்ரா ஏதோ சொல்ல முற்பட, “சொன்னாக் கேளுடி… அது வெறும் பொம்மையாகத்தான் இருக்கும்” என்று நேத்ராவின் கையைப் பிடித்து, இழுத்துக்கொண்டு போனாள் மஹா. மற்றவர்களும் பின்னாடியே போனார்கள்.

நேத்ராவும் மற்றவர்களும் போனது கொஞ்சம் நிம்மதியைத் தந்தது. சரியாகப் பூஜாவும் வந்து சேர்ந்தாள். அவளிடம் மரப்பாச்சி செய்த சேட்டைகளைச் சொல்லிச் சிரித்தாள் ஷாலு.

மதிய உணவுக்குப் பிறகான எந்த வகுப்பிலும் ஷாலுவால் கவனம் செலுத்தவே முடியவில்லை. ஆசிரியையிடம் மாட்டிக்கொண்டிருக்கும் மரப்பாச்சியின் நினைவாகவே இருந்தது. மாலை கடைசிப் பிரீயட் முடியும் வரை பொறுமையாகக் காத்திருந்தாள். அதுவும் முடிந்து மணி அடித்ததும், தனது ஷோல்டர் பேக்கை எடுத்துக்கொண்டு, முதல் ஆளாக வகுப்பறையில் இருந்து தப்பித்து, ஆசிரியர்களின் ஓய்வறை நோக்கி ஓடினாள் ஷாலு. அங்கே புத்தகம் படித்துக்கொண்டிருந்த, கணக்கு ஆசிரியை நிமிர்ந்து பார்த்தார்.

இவள் தயங்கித் தயங்கி, “மிஸ்… அந்த மரப்பாச்சி…” என்று இழுத்தாள்.

“அது ரொம்ப நல்லா இருக்கு. ஆனா… இனிமேல் இதை ஸ்கூலுக்கு எல்லாம் தூக்கிட்டு வரக்கூடாது. சரியா” என்று கேட்டார் கணக்கு ஆசிரியர்.

“சரி மிஸ்”

அவர் எழுந்துபோய், தனது அலமாரியைத் திறந்து அதிலிருந்து மரப்பாச்சியை எடுத்துக் கொண்டுவந்து இவளிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு, “தாங்க்ஸ் மிஸ்” என்று சொல்லிவிட்டு, வேன் நிற்குமிடம் நோக்கி ஓடினாள்.

Box news

பார்பி பொம்மை: இளம்பெண் பொம்மை. இன்று இதன் தயாரிப்பாளர்கள் அமெரிக்கர்கள் என்றாலும் இவர்களுக்கு முன்னோடியாக இளம்பெண் பொம்மைகளை முதலில் ஜெர்மானியர்கள் உருவாக்கி வந்தனர். அதனைப் பார்த்த அமெரிக்கர்கள் இதனை உருவாக்கினர். அழகான இப்பொம்மை பலரையும் கவர்ந்தது. நடக்க முடியாத குழந்தைகளின் ஏக்கத்தைப் புரிந்துகொண்ட இந்நிறுவனம் அவர்களைப்போன்றே சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள பார்பியையும் உருவாக்கியது. மாற்றுத்திறனுடையோருக்கான முதல் பொம்மையை உருவாக்கியதும் இவர்களே! பார்பி மீது விமர்சனங்களும் பல்வேறு சர்ச்சைகளும் உண்டு. அதெல்லாம் தனிக்கதை!

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , , | Leave a comment